Tuesday, December 30, 2008

தேனீக்கள் கூட்டம் !!!!!!

இரு வாரங்களுக்கு முன் சத்தியமங்கலம் - கோபி சாலையிலிருந்து சுமார் 2 கீ.மீ தூரத்தில் பசுமை நிறைந்த இப்பகுதியில் இரு மரங்களில் இயற்கையாக கட்டிய சுமார் 40 மலைந்தேனீக்களின் கூடுகளைப் பார்த்து அதிசயப்பட்டேன். மரங்களின் உரிமையாளர் திரு. மகாலிங்கம் சுற்றுவட்டாரத்தில் இது போன்ற தேன் கூடுகள் இல்லையென்றும் ,அவர்கள் தோட்டத்திலேயே இதே போன்ற மரம் இருந்தும் கூடுகள் இல்லாததை காண்பித்தார். காய்கறி பயிர்களில் நல்ல மகசூல் கிடைப்பதாக கூறிய அவர் டிராக்டர் கொண்டு நிலத்தை உழ முடிவதில்லை காரணம் புகை வாசம் வந்தாலே மனிதர்களை தேனீக்கள் தாக்க ஆரம்பித்துவிடுவதும் அது மாத்திரமன்று புகைபிடிப்பவர்களுக்கும் இந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதி என்றார். கூடுகள் 3 அடி வரை இருக்கும் போல் தோன்றுகிறது. பளு தாங்காமல் விழுந்து கிடந்த தேன் அடைகளைப் பார்த்தாலே பிரமிப்பாக இருந்தது.
கீழே விழுந்த தேன் அடையுடன் திரு. மகாலிங்கம் தம்பதியினர்.

Saturday, December 27, 2008

தேனீக்கள் வளர்த்து குபேரன் ஆகமுடியுமா ???

முடியும் என்று சொல்பவர் இந்தியாவின் மொத்த தேன் ஏற்றுமதியில் 70% செய்யும் காஷ்மீர் அபியரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. ஜக்ஜித் சிங் கபூர். 1980 களில் ரூ.1000/= துவக்க முதலீடு செய்யது இன்று 2008 இல் ரூ.136 கோடிகள் வர்த்தகம் செய்பவர் திரு. ஜக்ஜித் சிங் கபூர். இன்று பணியாற்றும் உழியர்கள் சுமார் 1500 பேர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேனைக் கொள்முதல் செய்கிறது காஷ்மீர் அபியரீஸ். 4 வணிகப் பெயர்களில் 42 நாடுகளில் இவர்களது தேன் விற்பனையாகின்றது. தேனீக்கள் வளர்த்தல் ஏதோ ஒரு விவசாய சிறு உபதொழில் என்று நினைக்கும் நாம் அதில் கூட சாதனைகள் செய்திருக்கும் திரு. ஜக்ஜித் சிங் கபூரை பார்க்கும் போது பிரமிப்பு அடைகிறோம்.. சாதனையாளர் திரு. ஜக்ஜித் சிங் கபூர் அவர்களின் இலக்கான 100 நாடுகள் ரூ.400 கோடிகள் மிக விரைவில் அடைய இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
Source : India Today 10-12-2008

Friday, December 26, 2008

தேனீ வளர்ப்பு - ஒரு பார்வை

அயல் மகரந்த சேர்க்கையில் தேனீக்கள், பறவைகளின் பங்கு கணிசமானது. ஆனால் இவைகளின் தொகை குறைந்து கொண்டே போவதால் உணவு உற்பத்தியும் குறைந்து கொண்டே போகின்றது. இதனை மேம்படுத்த UNDP (United Nations Environment Programme) மிக சிறந்த ஒரு திட்டத்தை வரும் 5 வருடங்களுக்கு $26.45 மில்லியன் டாலரில் இந்தியா, கென்யா, பிரேசில், கானா, நேபாளம்,பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் செயல்படுத்தவுள்ளனர். இதனால் உணவு உற்பத்தி அதிகரிப்பதுடன் தேன் மற்றும் மெழுகு உற்பத்தியும் அதிகரிக்கிறது. இதனால் கிராமப்புற வேலை வாய்ப்பு ஏற்படுகிறது.

வியாதி, வனம்அழிதல், இரசாயன பூச்சிகொல்லிகளை உபயோகித்தல், விவசாய மாற்றத்தால் விவசாயிகள் தேனீ வளர்ப்பை கைவிட்டது, புதியஇனங்களின் அறிமுகம், வைரஸ்களால் பாதிப்பு என பல்வேறு காரணங்களால் இதன் தொகை குறைந்து கொண்டே போகின்றது. எனவே UNDP யின் இந்த திட்டம் வரவேற்க வேண்டிய நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டிய திட்டம். பயன்படுத்திக் கொள்ளவோம்.

தேனீக்கள் பற்றி முழுவதும் அறிந்து கொள்ள கீழ்கண்ட தொடர்புகளை பயன்படுத்துங்கள்
http://www.islamkalvi.com/science/honey_bee.htm
http://iyargai.blogspot.com/search/label/தேனீ
பயிற்சி மற்றும் தேனீ வளர்ப்பிற்கு கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், கோவை.
http://www.ecogreenunits.blogspot.com/

Source: The Hindu 16-08-2008
Photo : Mr. Babu

Wednesday, December 24, 2008

இயற்கை வேளாண்மையில் பூச்சிகளின் மேலாண்மை மற்றும் தேனீ வளர்ப்பு - பயிலரங்கம்.

இன்றைய விவசாயம் என்பது பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. அதில் முக்கியமானது பூச்சிகளின் மேலாண்மை. அதிலும் இன்றைய காலகட்டத்தில் இரசாயான பூச்சிகொல்லிகளால் சுற்றுசுழலும் கெட்டு முடிவில் விவசாயிகளின் தற்கொலைகளில் முடிவடைகிறதை நாம் தினசரிகளில் படிக்கிறோம். நம் முன்னோர்கள் எப்படி மேலாண்மை செய்தார்கள்? இயற்கை முறையில் பூச்சிகளின் மேலாண்மை சாத்தியமா? ஏன் தேனீக்கள் வேண்டும்? இந்த கேள்விகளுக்கு இப்பயிலரங்கம் தெளிவான விளக்கம் தரும். இது பற்றிய நூல்களும் அங்கு விலைக்கு கிடைக்கும்.

கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போம் சங்கம். பதிவு எண்:110/2006,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்துடன் இணைந்து நடத்தும் ஒரு நாள் பயிலரங்கம்.

நாள் : 09-01-2009 (வெள்ளிகிழமை)

நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

தலைப்பு : இயற்கை வேளாண்மையில் பூச்சிகளின் மேலாண்மை மற்றும் தேனீ வளர்ப்பு

இடம் : வேளாண் பூச்சியியல் துறையின் கருத்தரங்கு அறை.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், கோவை -3

கட்டணம் : ரூ.180/= ஒருநபருக்கு. (பயிற்சி கையேடு,தேநீர்,மதிய உணவு உட்பட)முதலில் பதிவு செய்யும் 75 நபருக்கு மட்டும் அனுமதி.

பதிவிற்கு : தேவராஜன்..............93691 16018
.............. நாராயணசுவாமி......94433 84746.
=========================================================

Monday, December 22, 2008

E.M. என்னும் திறநுண்ணுயிர்.

ஜப்பான் நாட்டின் Dr.டியூரோ ஹிகா என்பவரால் 1980களில் அறிமுகப் படுத்தப்பட்ட E.M. என்னும் திறநுண்ணுயிரி. இன்று உலகின் 120 நாடுகளுக்கு மேல் விவசாயம், சுற்றுசுழல், கால்நடை பராமரிப்பு, போன்ற துறைகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. Effective microorganisams என்பதின் சுருக்கமே E.M. இது இயற்கை இடுபொருள் என Eco cert சான்று தந்துள்ளனர்.
E.M-1. என்பது உறங்கும் நிலையிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் தொகுப்பாகும். E.M-1. நீர்த்த பிறகே பயன்படுத்த வேண்டும். இதனை 1:1:20 என்ற விகிதத்தில் E.M.-1 :வெல்லம்(அ)கரும்பு சர்க்கரை :குளோரின் கலக்காத நீரில் 5-10 நாட்கள் பிளாஸ்டிக் கலன்களில் காற்று புகாமல் நிழலில் நொதிக்க வைக்க E.M-2 தயார். உருவாகும் வாயுவை வெளியேற்ற தினமும் 1 நொடி மூடியை திறந்து மூடவேண்டும். இதுதான் உபயோகத்திற்கு ஏற்றது. ஒரு மாததிற்குள் பயன்படுத்திடவேண்டும். நொதிக்க வைக்க கண்ணாடி கலன்களை தவிர்க்கவும்.
எங்கள் வீட்டில் சமையலறை, குளியலறை போன்ற இடங்களில் E.M-2 தான் உபயோகிக்கிறோம். விரைவாக காய்ந்து ஈரமின்றி இருப்பதுடன் ஈக்கள் வருவதில்லை, துர்வாசனை இல்லை. வீட்டை துடைப்பதற்குக் கூட E.M-2 வைத்தான் உபயோகிக்கிறோம். வாகனங்களை கழுவுவதற்கும், சிறுகுழந்தைகளின் உள்ளாடைகள் சுத்தம் செய்யவும் மிகவும் ஏற்றது. செலவு மிகமிக குறைவு என்பதுடன் ஒரு மிகச் சிறந்த இயற்கை பொருளை கடந்த 5 வருடங்களுக்கு மேல் உபயோகிக்கிறோம் என்ற திருப்தி உண்டு. பூனே, கோவை மாநகராட்சிகள் தங்களின் மாநகர கழிவுகளை E.M. கொண்டுதான் மக்க செய்து மறுசுழற்சி செய்கிறார்கள் என்பது உபரித் தகவல்.
நான் மிகமிக சிறிய அறிமுகத்தைதான் E.M. பற்றி தந்திருக்கிறேன். மேலும் விவசாயம், சுற்றுசுழல், கால்நடை பராமரிப்பு, போன்ற துறைகளில் உபயோகப்படுத்தப்படுவதைக் காணவும், மேலும் E.M. பயன்படுத்தி ‘பொக்காஷி’, E.M.-5 போன்றவை தயாரிக்கவும் கீழ் கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்.
புகைபடம் 1 :வலைதளம்

Thursday, December 18, 2008

“Birds of Tamilnadu” - முனைவர்.K.ரத்னம் அவர்களின் பயன்மிக்க நூல்.

இயற்கையைப் பராமரிப்பதில் பறவைகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. விதைகளை எல்லா இடங்களுக்கும் பரப்பி வனத்தை விரிவுபடுத்துவதிலும் , பூச்சியினங்களை கட்டுப்படுத்துவதிலும், சுற்றுசுழல் மாசுபடாமல் சுத்தம் செய்வதிலும் பறவைகளுக்கு நிகர் பறவைகள்தான்.பறவைகளின், மிருகங்களின் உணவுப்பாதையில் சென்றுவரும் விதைகள் அதிக முளைப்புத் திறன் பெற்றவை என்பது நாம் அறிந்ததே. விவசாயத்திலும் இதற்கு நல்ல பங்கு உண்டு. ஆயிரக்கணக்கான பறவைகள் இருந்தாலும் நாம் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் பறவைகளைப் அறிந்திருக்கிறோம். புதிதாக சில பறவைகளைப் பார்த்தாலும் நம்மால் இனம் காண முடிவதில்லை. அக்குறையை போக்க வந்துள்ள நூல்தான் முனைவர்.K.ரத்னம் அவர்களின் “ Birds of Tamilnadu” .
தமிழகத்தின் சுமார் 328 பறவைகளின் அங்க அடையாளங்கள், காணப்படும் இடங்கள், வாழ்வுமுறை, உணவு, குரல், இனப்பெருக்கம் என மிகத்தெளிவாக வண்ணப் படங்களுடன் விளக்கியிருப்பது இந்நூலின் சிறப்பு. ஆங்கிலம், தமிழ் கூடவே அறிவியல் பெயரும் இருப்பது பின்னாட்களில் குழந்தைகளுக்கு மிக உபயோகமாக இருக்கும். முனைவர்.K.ரத்னம் அவர்கள் தமிழ்துறைத் தலைவராக மன்னர் சரபோஜி கலைக்கல்லூரி, தஞ்சாவூரில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள், சாதனைக்குப் பரிசு என குழந்தைகளுக்கு விலைமிக்க கம்யூட்டர் விளையாட்டுப் பொருட்கள், ஆடைகள், அணிகலன்கள் என பரிசளிக்கிறோம். ஒரு மாறுதலுக்காக இது போன்ற வாழ்கைக்குப் பயன்தரும் நூல்களை பரிசாக அளித்தால் இயற்கையை புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பாக இருக்குமே. விவசாய்களிடமும் இருக்க வேண்டிய நூல்.

கிடைக்குமிடம்:
மாணிக்கவாசகர் நூலகம்
சிதம்பரம்................230069
சென்னை................25361039, 24357832
மதுரை....................2622853
கோவை..................2397155
திருச்சி....................2706450

Saturday, December 13, 2008

பசுமை போராளி திரு. M.Y.யோகநாதனின். “தாகம்”

பசுமை போராளி திரு. M.Y.யோகநாதன் அவர்களின் “தாகம்” என்ற குறும்படத்தை டிசம்பர் 3 ஆம் தேதி கோவையில் வெளியிட்டார்கள். மிக நேர்த்தியாக சொல்ல வந்த கருத்தை 30 நிமிட குறும்படத்தில் சொல்லியிருப்பது பாராட்டுதலுக்குரியது. நுகர்வு கலாச்சார ஆசையில் வாழ்வாதாரத்தை இழக்கும் ஒரு சராசரி மனிதனின் வாழ்கை. அவசியம் தமிழகத்தின் எல்லா பள்ளிகளிலும், ஒவ்வொரு கிராமங்களிலும் காட்டப்பட வேண்டிய குறும்படம். குழந்தைகளின் மனதில் மரத்தின் பயனை பதிய வைத்தால் பிரகாசமான எதிர்காலம் தமிழகத்திற்கு நிச்சயம் உண்டு. இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் அவசியம் பார்க்க வேண்டிய மற்றவர்களுக்கு பரிசாக தர வேண்டிய குறுந்தகடு.. நமது வீட்டுகளில் என்றும் இருக்க வேண்டிய குறுந்தகடு.
உங்களுக்காக சில காட்சிகள்.



மேலும் விபரங்கள் பெற:

திரு. அரவிந். - 98945 93945

திரு. யோகநாதன். - 94430 91398

திரு. M.Y.யோகநாதன் பற்றிய முந்தைய பதிவைக் காண:

பசுமைப் போராளி திரு. M.Y. யோகநாதன்.

Friday, December 12, 2008

தண்ணீர் !!தண்ணீர் !!!


Uploaded on authorSTREAM by vincent2511

ஆரம்ப காலங்களில் பவர் பாயின்ட் கற்று கொள்ள ஆரம்பித்த போது குழந்தைக்காக சில தலைப்புக்களில் செய்தேன். பார்த்தவர்கள் இது பெரியவர்கள் கூட பார்க்கலாம் என்று கூறினர். எனக்கு மற்றவைகளை விட தண்ணீர் அதிக முக்கியமாக தோன்றியது. எனவே அதனை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். ஆங்கிலத்தில் இருக்கும் பொறுத்துக் கொள்ளுங்கள். காரணம் இ.கலப்பை PPTயில் சரியாக வருவது இல்லை.

Tuesday, December 9, 2008

இயற்கை சேதத்தைக் குறைக்க உதவும் வெட்டிவேர்.

நிஷா புயல் தமிழகத்தில் சுமார் 103 மனித உயிர்களுடன் 6700 கீ.மீ சாலை, 328 குளங்கள், 687 பாலங்கள்,402 அரசாங்க கட்டிடங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தி சுமார் 5,52,290 ஹெக்டர் பயிர் நாசத்தையும் செய்து மாநிலத்திற்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது. பொருளாதார சரிவில் மேலும் ஒரு சிக்கல்.
மற்ற நாடுகளிலும் இதுபோன்று ஏற்படுகிறது அவர்கள் நம் ஊர் வெட்டிவேர் கொண்டு சேதத்தை குறைக்கிறார்கள். மடகாஸ்கர், தாய்லாந்து, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அனுபவம் PPT காட்சி கீழே.


சீனாவில் வெட்டிவேர் பற்றி காண.
சீனாவில் வெட்டிவேர்

Source : The Hindu for News and PPT Photos form TVNI

Tuesday, December 2, 2008

மயில்களின் நடமாட்டம்

ஏற்கனவே எங்கள் குடியிருப்பு பகுதியில் மயில்கள் நடமாட்டம் பற்றி

http://maravalam.blogspot.com/2008/03/blog-post_07.html

பதிவில் எழுதியிருந்தேன். அதன் குஞ்சுகள் சற்று பெரியவைகளாகிவிட்டன. உடல் ரீதியாக அதற்குள்ள நிறத்தையும், அழகையும்,தோகையையும் பெறவில்லை ஆனால் இவைகள் சாலைகளில் எந்தவித பரபரப்புமின்றி ஒய்யாரமாக நடந்து அதன் உணவைத் தேடுவதுதான் அழகு, நம்மை கண்டு அஞ்சுவதில்லை. சென்ற ஞாயிறு காலை சுமார் 7 மணியளவில் அதன் நடைபயிற்சியை காண நேர்ந்தது. அதனை புகைபடமாய் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
இதன் பெருக்கத்தால் காய்கறி பயிரிடும் விவசாய்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர் என்பதும் உண்மை. தீர்வு ???

Monday, December 1, 2008

“மனிதனின் கால் தடம்.............”

வடகிழக்கு பருவமழை தனது சக்தியை கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் காண்பித்த போது மேற்கு தொடர்ச்சி மலையில் அதன் தாக்கம் குறைவாக இருந்ததால் புற்கள் நன்கு வளர்ந்து பூத்து காண்போரை பரவசப்படுத்தியது.

மனிதன் காலடிபட்டால் புல்பூண்டுகள் கூடவராது என்பார்கள். அவன் வழி எப்போதும் தனி வழி’. கீழேயுள்ள படங்களை பார்க்கும் போது அது உண்மையென்று தோன்றுகிறது எனக்கு !!! உங்களுக்கு ?????

Friday, November 28, 2008

Buy Nothing Day !!

வாங்குவதை தவிர்த்து, குப்பைகளை சேர்க்காமல் சற்றுச்சூழலை பாதுகாக்கும் நாள். இந்த அரக்கனுக்கு உணவை தவிர்க்கும் நாள். ஆம் இன்று 28-11-08 வட அமெரிக்காவிலும், நாளை 29-11-08 மற்ற நாடுகளிலும் Buy Nothing Day !!

நாமும் பங்கு கொள்வோம். மற்றவர்களிடம் செய்தியை பகிர்ந்து கொள்வோம்.

அதிக தொலைகாட்சி நிறுவனங்களால் ஓளிபரப்புச் செய்ய மறுக்கப்பட்ட(BUY NOTHING DAY 2006) விளம்பர படத்தை காண கீழே உள்ள தொடுப்பை பயன்படுத்துங்கள்.
http://maravalam.blogspot.com/2007/11/buy-nothing-day-2006.html

Tuesday, November 25, 2008

பதிமுகம்- Cesalpinia sappan

2003 முதல் தமிழக விவசாய்களிடையே நிறைய எதிர்பார்ப்புகளுடன் 7- 10 ஆண்டுகளில் ஒரு ஏக்கருக்கு 50லட்சம் - 60 லட்சம் என பரபரப்பாக பேசப்பட்ட சிறு மரம் “பதிமுகம்”. இதன் இயற்கை சாயத்திற்காக ஐரோப்பியர்கள் விரும்பினர். தென்அமரிக்காவில் பிரேசில் நாட்டில் அதிகம் இருந்தது. அதன் உரிமைக்காக ஐரோப்பிய நாடுகள் சண்டையிட்டுக்கொண்டது வரலாறு. வரலாற்று சிறப்புமிக்க அம்மரத்தைப் பற்றி சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.


Uploaded on authorSTREAM by vincent2511


முதன் முறையாக PPT யில் இதனை வலையேற்றுகிறேன். ஆங்கிலத்தில் இருக்கும் பொறுத்துக் கொள்ளுங்கள்.

மாடித் தோட்டம், நகர விவசாயம் ஒரு பார்வை. (2)

மேலைநாட்டு விவசாய, பொருளாதார, சமூக அறிஞர்கள் ஆர்வமுடன் நோக்கும் நகரம் ஹவானா. சிறந்த ‘நகர விவசாயத்திற்கு’ பெயர் பெற்றது.

1991 ஆண்டு சோவியத் யூனியன் சிதறிய போது சோவியத் யூனியனிலிருந்து இறக்குமதி செய்த சுமார் 90000 டிராக்டருக்கு தேவையான டீசல், இரசாயன உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தட்டுப்பாடு காரணமாய் விவசாய உற்பத்தியில் மிக மோசமான வீழ்ச்சியை கண்டது கியுபா. அவர்களின் முக்கிய ஏற்றுமதியான சர்க்கரை (கரும்பு விவசாயம்) பாதிக்கப்பட்டது. அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடையும் சேர்ந்து கொண்டதால் உணவு தட்டுபாடு ஏற்பட்டு நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை காண துவங்கியது. அதனை தடுத்து நிறுத்தும் முயற்சியில் இருக்கின்ற வளங்களைக் கொண்டு அங்கக வேளாண்மையில் துவங்கி இன்று ஹவானா நகரம் தனக்கு தேவையான காய்கறிகளில் 80% நகர விவசாயம் மூலம் உற்பத்தி செய்கிறது. தனியார் தோட்டம்(huertos privados), அரசாங்க பொதுநிலத்தில் தனியார் (அல்) கூட்டுறவு தோட்டம்(huertos populares), அரசாங்க தோட்டம்(organicponicos),என பிரித்து தங்களின் உழைப்பை தந்து தன்னிறைவு பெற்றுள்ளனர். நாமும் இதற்கான சிறு முயற்சியை மேற்கொண்டால் நாம் உயர்வதுடன் உலக சுற்றுச்சுழலுக்கும் நன்மை செய்தவர்களாகின்றோம்.

ஹவானா நகர விவசாயம் பற்றிய பி.பி.சி யின் படத்தொகுப்பு.

Source: Net.

Monday, November 24, 2008

மாடித் தோட்டம், நகர விவசாயம் ஒரு பார்வை. (1)

மாடித் தோட்டம், என்பது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே மிக சிறப்பாக இருந்திருக்கிறது. பாபிலோனின் தொங்கு தோட்டம் பண்டைய (Ancient World Wonders) உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. இன்றைய பாக்தாத் (இராக்) நகரிலிருந்து சுமார் 50 கீ.மீ தொலைவில் அதன் சிதிலங்கள் உள்ளன.
சிதிலமடைந்த இன்றைய நிலை.
இரண்டாம் நெபுகாத்நேசர் மன்னராக இருந்த போது சிறந்த கட்டிடக் கலையுடன் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தாவரங்களை கொண்டுவந்து தனது மனைவியின் மகிழ்ச்சிக்காக உண்டாக்கப்பட்டதுதான் இந்த பாபிலோனின் தொங்கு தோட்டம். அன்று ஒருவரின் மகிழ்ச்சிக்காக உண்டாக்கப்பட்டது ஆனால் இன்று ஒவ்வொரு உயிர்களும் வருங்காலத்தில் வாழ இந்த மாடி தோட்டம், நகர விவசாயம் தேவைப்படுகிறது. காரணம் நகரங்களில் மரங்கள் வெட்டப்படுவதும் அதேசமயம் வாகனங்களின் எண்ணிக்கை கூடுவதும் கரிமில வாயுவின் அளவை மேலும் கூட்டுகிறது. தொழிற்புரட்சிக்கு முன் வளி மண்டலத்தில் 280 ppm ஆக இருந்த கரிமில வாயுவின் அளவு 1990 களில் 351.36 ppm உயர்ந்து 2008 இல் 384.75 ppm ஆக மேலும் உயர்ந்துள்ளது. கிராமப் புறங்களில் விவசாயம் பல்வேறு காரணங்களால் கேள்விக்குறியாகும் போது மக்கள் நகரத்தை நோக்கி வருகின்றனர் இதனால் நிலம் மற்றும் நீரின் (Pressure on land and water increases)தேவை அதிகரிப்பதுடன் குப்பைகூளங்களும் அதிகரிக்கிறது. விளைவு சுற்றுச்சுழல் மாசுபாடு. வீட்டுத் தோட்டம் என்ற இந்த பயனுள்ள பொழுதுபோக்கு அடுக்கு மாடி குடியிருப்புகள், தொலைக்காட்சி, நகரில் நீண்ட நேரப் பயணம், வேலைப்பளு போன்றவைகளால் மக்களிடமிருந்து மறைய ஆரம்பித்துள்ளது.

மாடித் தோட்டம், நகர விவசாயத்தால் ஏற்படும் சில நன்மைகள்.

# நமக்குத் தேவையான புதிய காய்கறிகள், பழ வகைகளை நாமே உற்பத்தி செய்யலாம்.
# சமயலறைக் கழிவுநீரை மறுஉபயோகம் (Reuse) செய்தும் சமயலறைக் கழிவுகளை மறுசுழற்சி செய்து (Recycle) மண்புழு உரமாக மாற்றி அங்கக விவசாயம் செய்வதால் சத்துமிக்க காய்கறிகளை பெறுவதுடன் நகரின் சுற்றுச்சுழலும் பாதுகாக்கப்படுகிறது.
# நாமே உற்பத்தி செய்வதால் வெளியூர்களிலிருந்து காய்கறிகளை கொண்டுவர ஆகும் எரிபொருள் செலவு மற்றும் அதனால் ஏற்படும் மாசுபாடு குறைகிறது.
# மருத்துவ தாவரங்களை வளர்ப்பதின் மூலம் நோய்களைத் தவிர்க்கலாம்.
# மிகச் சிறந்த உடற்பயிற்சி..
# குழந்தைகளுக்கு இயற்கையை புரியவைக்க ஓரு வாய்ப்பு.
# பெரியவர்களுக்கு மன இறுக்கத்திலிருந்து மன அமைதி தரும் ஒரு பயனுள்ள பொழுதுபோக்கு.
# வேலைவாய்ப்புகள் உருவாகிறது.

தொடரும்.................
படங்கள் உதவி: வலைதளம்.

Saturday, November 22, 2008

உலக வெட்டிவேர் அமைப்பின் 5 சிறந்த இ-நூல்கள் இலவசம்.


உலக வெட்டிவேர் அமைப்பு தனது அரிய நூல்களை இ-நூல்களாக இலவசமாக தரவிறக்கம் செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலத்தில் வண்ணப் படங்களுடன் கூடிய அந்நூல்களை தரவிறக்கம் செய்ய கீழ்கண்ட தொடுப்புக்கள் உதவியாக இருக்கும். 5 நூல்கள் தற்சமயம் உள்ளது. பயன்படுத்தி மேன்மை பெறுவோம்.

நீரின் தன்மையை தூய்மையாக்கி மேம்படுத்த வெட்டிவேர்.
http://www.esnips.com/doc/b8c3c54d-d973-4f7b-bb7c-fd464138af8b/Vetiver-System-for-Improvement-of-Water-Quality

வெட்டிவேர் தொழில்நுட்பம் பற்றி அறிய.
http://www.esnips.com/doc/9057fcb9-75b5-4af1-b9a9-793da6d087c9/Vetiver-System-Applications---A-Technical-Reference-Manual

வெட்டிவேர் மூலம் நிலத்தையும் நீரையும் பாதுகாத்தல்.
http://www.esnips.com/doc/635709cc-a5fa-4241-ac67-1b48c5c330a0/Vetiver-System-for-Soil-and-Water-Conservation

வெட்டிவேர் மூலம் சரிவுகளை ஸ்திரப்படுத்த.
http://www.esnips.com/doc/2dff17e4-a958-4c7d-b383-5d3dba2a4307/Vetiver-System-for-Slope-Stabilization

விவசாயத்தில் வெட்டிவேர்.
http://www.esnips.com/doc/79a4cc86-4d6e-4a74-8b5e-b44cc9078b45/Vetiver-System-for-Agriculture

Friday, November 14, 2008

உலக சர்க்கரை நோய் தினம் மற்றும் நோயை குறைக்க உதவும் தாவரங்கள்.

டாக்டர். பிரடரிக் கிரண்ட் பாண்டிங் என்ற கனடா நாட்டு மருத்துவர் தன் சகாக்களுடன் ஆராய்ச்சி செய்து இன்சுலின் கண்டுபிடித்தார். அவர் பிறந்த தினமான நவம்பர் 14 ஐ உலக சர்க்கரை நோய் தினமாக கடைபிடித்து நிறைய கண்காட்சிகளும், விளக்கக் கூட்டங்களும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு குறிப்பாக குழந்தைகளுக்கு என விசேஷமாக நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு 200 குழந்தைகள் இவ்வியாதிக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் சுமார் 40 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் இருப்பதாகவும், 2025 ஆண்டு அது 60 மில்லியனை தொடும் என கூறுகிறார்கள்.

சர்க்கரை நோய் அறிகுறிகள்.
அதிக தாகம் (Excessive thirst)
அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Frequent urination)
அதிக பசி (Increased hunger)
எடை குறைதல் (Weight loss)
உடற்சோர்வு (Tiredness)
ஆர்வம், கவனம் குறைதல் (Lack of interest and concentration)
பார்வை குறைபாடுகள் (Blurred vision) போன்றவை.

நோயை குறைப்பதற்கான வழிகள்.
உணவுக் கட்டுப்பாடு.
யோகா, உடற்பயிற்சி.
மருந்து.

இந்த நோய் முற்ற கால்களில் புண்கள் (சமயங்களில் காலை எடுக்கவேண்டிவரும்.), கண்நோய், மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும்.


நோயைக் குறைக்க உதவும் சில தாவரங்கள் இன்சுலின் செடி
இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது.. இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். கேரளாவில் அதிகம் உபயோகிக்கின்றனர்.
கள்ளிமுடையான்.
கள்ளிமுடையானின் மெல்லிய் தண்டை நீரில் சுத்தம் செய்து மூன்று அங்குலத் தண்டுகள் இரண்டை தினம் அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் மெலிவதுடன் சர்க்கரை வியாதியைக் குணப்படுத்துகிறது. வருங்காலத்தில் இதற்கு நல்ல மதிப்பு உண்டு.
சர்க்கரைக்கொல்லி
கசப்புச் சுவையுடையது. பெயருக்கேற்ப இலையை சாப்பிட்ட பின் சர்க்கரையை வாயிலிட்டால் இனிப்பு சுவை தெரிவதில்லை. இலையை காய வைத்து பொடியாக்கி இதனை தினமும் அருந்துகின்றனர். கொடிவகையை சார்ந்தது.
சிறியாநங்கை
கசப்புச் சுவையுடையது. இதன் இலையையும் சிலர் சாப்பிடுகிறார்கள். சிறு செடி வகையை சார்ந்தது.
ஸ்டீவியா என்னும் சீனித்துளசி.
தென்அமெரிக்காவை தாயகமாக் கொண்ட இனிப்புச் சுவையுடைய இதன் இலைகள் சர்க்கரைக்கு மாற்று. இலையை காய வைத்து பொடியாக்கி டப்பாக்களில் அடைத்து வைத்து சர்க்கரைக்கு பதிலாக இதனை உபயோகிக்கலாம். பூஜ்யம் கலோரி (Zero Calorie) மதிப்புடையது. எனவே இனிப்புடன் அருந்த வேண்டுமெனில் தாராளமாக இதனை உபயோகிக்கலாம். அதிக சூரிய ஒளியை விரும்பும் தாவரம். தமிழகத்தில் நன்கு வளர்கிறது.


இதனை தவிர்த்து காலையில் வெந்தயப் பொடி சாப்பிடுதல், பாகற்காய் சாரு அருந்துதல், வெள்ளரி விதைகளை சாப்பிடுதல், சீந்தில் சர்க்கரை பொடி என நிறைய தாவரங்கள் சார்ந்த எளிய சர்க்கரை நோயை குறைக்க உதவும் வழிமுறைகள் உண்டு.


முக்கிய செய்தி மேற்கண்ட அனைத்து தாவரங்களையும் நாம் வீடுகளில் வளர்க்கலாம்.
நன்றி: முதல் இரண்டு படங்கள் வலைதளம்

Tuesday, November 11, 2008

கடவுளும் மரமும்

"கடவுள் மரங்களைப் படைத்தார். வெள்ளம், வறட்சி, நோய் எல்லாவற்றிடமிருந்தும் நூற்றாண்டுகளாக அவற்றைப் பாதுகாத்து வந்தார். ஆனல் அவரால் முட்டாள்களிடமிருந்து மட்டும் மரங்களைக் காப்பாற்ற முடியவில்லை!'' - ஜான் மியூர்

God has cared for these Trees, saved them from drought, diseases, avalanches and a thousand tempests and floods. But cannot save them from fools. - John Muir.

இப்படங்களைப் பார்க்கும் போது திரு.ஜான் மியூர் சொன்னது சரியென்று தோன்றுகிறது. சுமார் 5 நிமிடங்களில் மரம் தனது நிலையை இழந்தது.






ஆனால் இக்குழந்தைகளின் எதிர்காலம் ?????? யாரிடம் ?????





Monday, November 10, 2008

மண் அரிப்பு- புகைப்படம்

இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 5,000,000,000 டன் அளவிற்கு மண் அரிப்பு ஏற்படுவதாக ''வெட்டி வேர் இன்டர்நேஷ்னல் பிளாக்''கூறுகிறது. அதில் 30% கடலிலும்,10% அணைகளிலும் சேர்வதாகவும், 60% இடமாற்றம் அடைவதாகவும் கூறுகிறது. பொதுவாக நீரினால் தான் அதிகம் மண் அரிப்பு எற்படும்.இதில் கவனிக்கபடவேண்டியது, நீர் திரும்ப நீர் சூழற்சி முறையில் மேலே சென்றுவிடும். ஆனால் மண் ???
சென்ற மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை முடிந்தவுடன் என் கண்களுக்குப்பட்ட சில மண் அரிப்பு காட்சிகள். விவசாயத்தில் மிக முக்கியமானது மண் அரிப்பை தடுப்பது.Top Soil எனப்படும் வளமான மேல் மண் அது அடித்துச் செல்லப்பட்டால் விளைச்சல் குறையும். திரும்பவும் வளம் சேர்க்கவேண்டும். எனவே நல்ல விளைச்சலைப் பெற மண் அரிப்பை தடுப்பது மிக மிக அவசியம். வரும் முன் காப்போம்.

Prevention is Better than Cure.

Wednesday, November 5, 2008

சுற்றுச் சுழல் ஆர்வலர்களை மகிழ்ச்சிப்படுத்தும் அமெரிக்க தேர்தல்.


புவி வெப்பம், சுற்றுச்சுழலை நன்கு உணர்ந்த அதனைப் பற்றி தனது தேர்தல் சொற்பொழிவுகளில் கூட அடிக்கடி பேசிய ஜனநாயகக் கட்சியின் திரு. பாரக் ஓபாமா அவர்கள் வெற்றி பெற்றிருப்பது சுற்றுச் சுழல் ஆர்வலர்களை நிச்சயம் மகிழச்சியிலழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் அவர் நோபல் பரிசு பெற்றவரும், ஜனநாயகக் கட்சியின் 2000 ஆண்டு வேட்பாளரும், அமெரிக்க முன்னாள் துணை அதிபரும், “an inconvenient truth” என்ற புவி வெப்பம், சுற்றுச்சுழலை பற்றிய திரைப் படத்தை எடுத்த திரு.அல் கோர் அவர்களை இது குறித்து கலந்தாலோசிப்பதாக கூறியிருப்பது உலகத்திற்கு நிச்சயம் நன்மையை அளிக்கும்.
கியுட்டோ ஓப்பந்தம் திரு. புஷ் அவர்களின் காலத்தில் அமெரிக்கா கையெழுத்திடாததால் முழுமை பெறாமல் இருந்தது. இனி அந்த நிலைமை மாறும் என நம்பலாம். மிக மோசமான பொருளாதார நெருக்கடியுள்ள இக்காலகட்டத்தில் அவர் நல்லாட்சி செய்ய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் என இவ்வலைப் பூ திரு. பாரக் ஓபாமா அவர்களை வாழ்த்துகிறது.

Saturday, November 1, 2008

உலக வனஉயிர் நிதியம் (World Wildlife Fund (WWF)) 2008ஆம் ஆண்டு அறிக்கை

உலக பொருளாதாரம் மிக மோசமான சிக்கலில் இருக்கும்போது உலக வனஉயிர் நிதியம் (World Wildlife Fund (WWF)) நிச்சயம் வரபோகின்ற இயற்கை சிக்கலைப் பற்றி எச்சரித்துள்ளனர். இயற்கை வளங்களை அளவிற்கதிகமாக சுரண்டினால் வருங்காலத்தில் சுழலியல் தொடர்பான கடன் சுமையை உலகம் எதிர்நோக்க வேண்டிவருமென எச்சரித்துள்ளனர். இச்சுமை தற்போதுள்ள பொருளாதாரச் சிக்கலை விட மிகமிக மோசமானதாக இருக்குமென்கின்றனர்.

1998 ஆம் ஆண்டு முதல் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை “வாழ்கின்ற உலகம்” பற்றி வெளியிடப்படும் இந்த அறிக்கை பொதுவாக எல்லோராலும் நம்பகத் தன்மையுள்ள மிக சரியான அறிக்கையென ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 2008ஆம் ஆண்டு அறிக்கையை அக்டோபர் மாத இறுதியில் வெளியிட்டனர். இயற்கை மூலதனங்களான காடுகள், தண்ணீர், மண்வளம், பல்லுயிர்வகைகள் மீதான மனிதனின் தேவைகள் அளவிற்கு மிக அதிகமாக இருப்பதால் இவ்வளங்களை மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் இப்புவியின் திறன் மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டது என கூறி இத்தேவைகள் இப்படியே தொடர்ந்தால் 2030 ஆண்டுகளின் மத்தியில் இதே போன்ற இரண்டு உலகங்கள் தேவைபடும் என்று இவ்வமைப்பின் இயக்குனர் திரு.ஜேம்ஸ் லீபே கூறியுள்ளார்.
ஒவ்வோராண்டும் இயற்கையின் மாற்றத்தால் ஏற்படும் இழப்புக்களை சுனாமி, காத்தரீனா முதல் நேற்றைய பாகிஸ்தான் நிலநடுக்கம் வரை கணக்கிட்டால் நிச்சயம் வருங்காலம் தற்போதுள்ள பொருளாதாரச் சிக்கலை விட மிக மோசமானதாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை.

"The Earth is neither an ecosystem to be preserved, nor a quarry to be exploited for selfish and short-range economic reasons, but a garden to be cultivated for the development of its own potentialities and the potentialities of the human species".. RENE DUBOS
மேலும் முழு அறிக்கையை ஆங்கிலத்தில் படிக்க கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்.
Source:Graph WWF/Ca

Friday, October 17, 2008

குழந்தைகளின் பார்வையில் புவிவெப்பம்- ஓவியமாய்

சுற்றுச்சுழல் மற்றும் கானுயிர் திரைப்பட விழா, கோவை 2008 டின் ஒரு பகுதியாக குழந்தைகளைக் கொண்டு புவிவெப்பம் குறித்து ஓவியம் தீட்ட வைத்தனர். குழந்தைகள் புவிவெப்பம் என்பது என்ன ? என்று மிக மிக அழகாக தீட்டிய ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு.