Saturday, March 28, 2009

புவி வெப்பம் குறித்து விழிப்புணர்வு (Earth hour) 2009

இந்த வருடமும் புவி வெப்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று 29-03-2009 சனிக்கிழமை 8.30 முதல் 9.30 வரை 1 மணி நேரம் மின் உபயோகத்தை நிறுத்தி இந்த புவி வெப்ப விழிப்புணர்வை உலகம் முழுவதும் உணரவைக்க உள்ளனர். இந்த வருடம் சுமார் 1 பில்லியன் மக்களும், சுமார் 1000 பெரிய நகரங்களிலும் கடைபிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்தியாவிலும் நிறைய நகரங்களில் கடைபிடிக்கவுள்ளனர். தமிழகத்தில் மின்வெட்டு உண்டுதான் இருப்பினும் இந்த நல்ல விஷயத்தில் நாமும் பங்கு கொள்வோம்.

எனது சென்ற வருட விழிப்புணர்வு பதிவைக்காண:

http://maravalam.blogspot.com/2008/03/earth-hour.html

Thursday, March 26, 2009

கிருஷியும் (விவசாயமும்) கிரிக்கெட்டும்.

லோஇஸ் (Loess plateau) பீடபூமி சுமார் 640,000 சதுர கீமீ (தமிழ் நாடு 130058 சதுர கீமீ) பரப்பளவில் சீன நாட்டில் அமைந்துள்ளது. அதிக உபயோகத்தாலும், அதிக மேய்ச்சலினாலும் தன் தாவர செல்வத்தை இழந்தது. இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு நிலம் பாழ்பட்டு மக்களின் வாழ்கை தரம் குறைந்தது. மண் அரிப்பின் அளவு வருடத்திற்கு சுமார் 1.6 பில்லியன் டன்கள். 50 மில்லியன் மக்கள் வசிக்கும் இப்பகுதியை உலக வங்கி உதவியுடன் இயற்கை வளத்தை புதிப்பிக்க முதல் திட்டத்தை 1993 ஆண்டு துவக்கி 2001 வரை செய்தனர். 1993 இல் 59% வறுமை கோட்டிற்கு கீழிலிருந்த மக்கள் தொகை 2001 இல் 27% மாக குறைந்தது. எல்லாவற்றிற்கும் சீனாவை குறிப்பிடும் நாம் இதனை மட்டும் குறிப்பிடுவதில்லை. நம் நாட்டில் இந்த அளவிற்கு மோசமான இடங்கள் இல்லை. நாம் நினைத்தால் இன்னும் சிறப்பாக நமது இயற்கை செல்வங்களை புதுப்பிக்க முடியும்.
விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்று கூறிக்கொண்டு தொழில் அதிபர்களும், கலைத்துறையினரும், அரசியல்துறையினரும் சேர்ந்து இந்த பொருளாதார நெருக்கடி நேரத்தில் கிருஷியை (விவசாயம்) பற்றி பேசாமல் (தேர்தல் நேரத்தில் கூட) கிரிக்கெட்டை பற்றி திட்டமிடுவதும் விவாதமிடுவதும் நாட்டிற்கு நல்லதன்று. மக்களாகிய நாம்தான் உணர்ந்து செயல்படவேண்டும். நமது இயற்கை செல்வங்களை புதுப்பிப்போம். வளமான இந்தியாவை காண்போம்.

உலக வங்கியின் படதொகுப்பைக் காண:
http://digitalmedia.worldbank.org/slideshows/china1005/
படங்கள் உதவி: வலைதளம்

Sunday, March 22, 2009

உலக நீர் நாள் மார்ச் 22 ஆம் நாள்

தண்ணீருக்காக வரிசையில் இருக்கும் பிளாஸ்டிக் கேன்கள்.

மேலேயுள்ள இரு சோகங்களுக்கும் காரணம் தண்ணீர். வனபகுதிகள் இல்லாமையால் மழை கிடைக்காமலும், அடுத்தது பெய்த மழையை தடுத்து தாமதப்படுத்த வனங்கள் இல்லாமையாலும் ஏற்படுகின்றன. மழை பொழிவைப் பெற வனத்தை உருவாக்குவோம். பெய்த மழைநீரை சேமிக்க பழகுவோம். வருகின்ற காலம் புவி வெப்பத்தால் எப்படி வேண்டுமானாலும் மாறும். எனவே நீர் தேவையை குறைப்போம், மறுஉபயோகம், மறுசுழற்சி (Reduce, Reuse, Recycle) செய்து வாழ்கையை வளமானதாக மாற்றுவோம்.

எனது சென்ற வருட உலக தண்ணீர் தின பதிவைக் காண

http://maravalam.blogspot.com/2008/03/22.html
படம் உதவி: வலை தளம்

Saturday, March 21, 2009

உலக வன நாள் மார்ச்சு 21- 2009

இந்த வருட உலக வன நாளில் உண்மையிலயே வனத்தை உண்டாக்க தன் படிப்பு, வெளிநாட்டு வேலை இவைகளை உதறிவிட்டு கற்கள், பாறைகள் நிறைந்த ஒரு பொட்டல் நிலத்தை வாங்கி அதில் வனம் உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டிற்கும் திரு. தி. ராமகிருஷ்ணன் அவர்களை பற்றி பதிவிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். அண்மையில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அருகிலுள்ள விவசாய அன்பர்கள் தங்கள் நிலத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சி தென்னை மற்றும் அதிக நீர் தேவைமிக்க பயிர்களை செய்யும் போது மிக குறைந்த நீரில் வனத்தை உண்டாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இவரின் அயராத உழைப்பு, எளிமை, ஈடுபாடு என்னை பிரமிப்பு அடைய வைத்தது உண்மை. நம் மனதிலிருக்கும் சில வரைபடங்களை ஒருவர் மிக நேர்த்தியாக செய்திருப்பதை பார்க்கும் போது மனதில்தான் எத்தனை மகிழ்ச்சி. பணம் மட்டுமே அளவுகோல் என்ற இன்றைய உலகமயத்தில் தவசிந்தையுடன் நிறைய மரவகைகளை குறைந்த நீரில் வளர்த்து வனம் ஒன்றே குறிகோள் என்று இருக்கும் திரு. தி. ராமகிருஷ்ணன் போன்றவர்களால் மட்டுமே உலக சுற்றுசுழலை காப்பாற்ற முடியும். இவரை போன்றவர்கள் மாவட்டத்திற்கு ஒருவர் இருந்தால் கூட போதும் தமிழகம் மிகப்பெரிய மாற்றத்தை காணும். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கும் அவரது குடும்பத்தாரக்கும் எல்லா ஆசிகளையும், நன்மைகளையும் தந்து மேலும் பல செயற்கரிய செயல்களை செய்ய இவ்வலைப்பூ வாழ்த்துகிறது.

Friday, March 20, 2009

குறைந்த விலையில் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து சென்னை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு

விவசாயிகளுக்காக குறைந்த செலவில் சென்னை லயோலா கல்லூரி ஆய்வு மாணவர்கள் உருவாக்கியுள்ள பொன்னீம் என்ற இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து அறிமுகப் படுத்தப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. பூச்சியியல் விஞ்ஞானி பாதிரியார் இன்னாசி முத்துவை இயக்குனராக கொண்டு செயல்படும் இந்த ஆய்வு மையத்தில் பூச்சியியல் சம்பந்தப்பட்ட ஏராளமான ஆய்வுகள் நடந்து வருகின்றன. சுற்றுசூழல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் குறைந்த விலையிலும் இயற்கை பூச்சிகொல்லி மருந்தை உருவாக்க இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் தீவிர ஆய்வில் இறங்கினர். அவர்களுக்கு இயக்குனர் இன்னாசிமுத்து வழி காட்டியாக இருந்து உதவினார். இந்த ஆய்வு மாணவர்கள் புங்கை எண்ணை, வேப்பெண்ணை மற்றும் தாவரங்களில் பெறப்பட்ட சில பொருட்களைக் கொண்டு இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து உருவாக்கினார்கள். இதற்கு பொன்னீம் என்று பெயரிடப்பட்டுள்ளது. முற்றிலும் இயற்கையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பூச்சிக் கொல்லியைக் கொண்டு நெல்,பருத்தி, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட தானியங்கள், காய்கறிகள், காபி,தேயிலை போன்ற மலைப்பயிர்கள் ரோஜா, மல்லிகை முதலான மலர்கள் ஆகிய வற்றை தாக்கும் அனைத்து வகையான பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்க லாம். இதை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. உற்பத்தி அதிகரிப்பதுடன் தானியங்கள் மற்றும் பழங்களின் சுவை யும் அதிகரிக்கும். ஒரு லிட்டர் மருந்தை 400 லிட்டர் தண்ணீர் கலந்து ஒரு ஹெக்டேருக்கு பயன்படுத்தலாம். மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த இயற்கை பூச்சிக் கொல்லியின் அறிமுக விழா லயோலா கல்லூரியில் நடந்தது. தமிழக அரசின் நுகர்வோர் செயல் பாடுகள் பிரிவின் உயர் அதிகாரி கா. பாலச்சந்திரன் அறிமுகப்படுத்தினார். ஒரு லிட்டர் பாட்டில் விலை ரூ135.00.
நன்றி :தீக்கதிர் 20-03-09

Monday, March 16, 2009

பசுமை புரட்சியும், மரபணு மாற்றமும்

1960 களில் உணவு பற்றாக் குறையை காரணம் காட்டி “பசுமை புரட்சி ” என்ற பெயரில் நுழைந்த இந்த விவசாய புரட்சி கடந்த 50 ஆண்டுகளில் பல ஆயிரம்??? பாரம்பரிய விதைகளை இழந்து, வேதி உரம் மற்றும் பூச்சி கொல்லிகளால் நிலத்தையும், குடிக்கின்ற நீரையும், சுவாசிக்கின்ற காற்றையும் பாழடித்து, அதிலிருந்து மீளமுடியாமல் லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய தற்கொலைகளை நாம் பார்த்து விட்டோம். வலுப்பெற்ற பூச்சி இனங்கள் இன்று விவசாய்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் அளவிற்கு வந்துவிட்டது. ஆனால் உணவு பற்றாக் குறையை “பசுமை புரட்சி ” போக்கியது உண்மை. அதற்கு என்ன விலை கொடுத்திருக்கிறோம்? என்பதுதான் சிந்திக்க வேண்டிய ஒன்று. இன்று உலகம் முழுவதும் இயற்கை விவசாயம், இயற்கை பூச்சி கொல்லி, பாரம்பரிய விதைகளின் மேல் நம்பிக்கை வைக்க ஆரம்பித்தவுடன் அடுத்த கட்ட விஞ்ஞான வித்தையை “மரபணு மாற்றம்” என்ற பெயரில் இரண்டாம் “பசுமை புரட்சி ” என கூறி மக்களின் மனதில் பதியவைக்க ஆரம்பித்துள்ளனர். உண்மையில் இது பன்னாட்டு விதை கம்பெனிகள் எளிதாக சுரண்ட ஒரு வழி. அவர்கள் கூறிக்கொள்வது போல் விளைச்சல் அதிகம், பூச்சி தாக்காது என்றால் ஏன் ஆந்திராவிலும், தர்மபுரி மாவட்டதிலும் நஷ்ட ஈடு தரவேண்டும்? எதிர்வினைகள் நிறைய உண்டு என்பதனை ஆதார பூர்வமாக நிருபித்தும் காட்டியுள்ளனர். இன்னும் 50 ஆண்டுகள் கழித்து “பசுமை புரட்சி ” போன்று இதுவும் தவறுதான் என்று கூறி வேறு ஒரு தொழில் நுட்பத்தை தருவார்கள். அதுவரை நாம் பொறுக்க வேண்டுமா??? அதற்கு நாம் என்ன விலை தரபோகிறோம்??? இயற்கை விளைச்சல்களுக்கு சான்றுகள் கேட்கும் ஒருதரப்பினர் மரபணு மாற்றத்தை மட்டும் கண்டு கொள்ளாமலிருப்பது சிந்தனைக்குரியது.
கற்பனையாய் சில படங்கள்
சில மரபணு மாற்ற முரண்பாடுகளை “மக்கள் சட்டம்” பதிவிலிருந்து.........
மரபணு மாற்றப்பட்ட பயிர்களை முறைப்படுத்துவதில் ஐரோப்பிய யூனியன் பல கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது. பல ஐரோப்பிய நாடுகளில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை, அவற்றை தயாரிக்கும் நிறுவனத்தின் நிலங்களிலேயே சோதனை செய்யவேண்டும் என்ற முறை பின்பற்றப்படுகிறது. மேலும், மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை மக்களுக்கு விற்பனை செய்யும்போது மரபணு மாற்றப்பட்டது என்ற முத்திரையை (LABELLING) கட்டாயம் இடவேண்டும் என்று அந்நாட்டு சட்டம் வலியுறுத்துகிறது. இதன்மூலம் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் குறித்த முழுவிபரங்களையும் அறிந்து கொள்ளும் பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான உணவினை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை ஐரோப்பிய நாடுகள் வழங்கியுள்ளன. இதுபோன்ற உரிமை இந்தியாவில் வழங்கப்பட வில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களை உலக வர்த்தக நிறுவனம் ஆதரிப்பதால் இவற்றை தடைசெய்வது உறுப்பு நாடுகளுக்கு இயலாத காரியம். மரபணு மாற்றப்பட்ட உணவினால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவு வகைகளுக்கு கடந்த 1999ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. இதை எதிர்த்து அமெரிக்கா, உலக வர்த்தக கழகத்தில் முறையீடு செய்தது. இந்த முறையீட்டை விசாரித்த உலக வர்த்தக கழகம், ஐரோப்பாவின் தடை நடவடிக்கைகள் உலக வர்ததக கழக நெறிமுறைகளுக்கு எதிரானது என்று கூறி தடையை நீக்குமாறு உத்தரவிட்டது.
ஆனால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மரபணு மாற்ற சோதனைகளை சாதாரண விவசாய நிலங்களில் சோதனை அடிப்படையில் பயிரிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆய்வுப்பணிக்கென ஒதுக்கப்பட்ட நிலங்களில் மட்டுமே இத்தகைய பரிசோதனைகளை நடத்தமுடியும். இந்தியாவிலோ, நில உரிமையாளருக்கும், விவசாயிக்கும் கூட தெரியாமல் மரபணு மாற்றப்பயிர்கள் சோதனை அடிப்படையில் பயிரிடப்படுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் சோதனைக்கூட எலி, முயலை வைத்து நடைபெறும் பரிசோதனைகள், இந்தியாவி்ல் மனிதர்களை வைத்து நடைபெறுகின்றன, அதுவும் அரசின் அனுமதியோடு.

அறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும், என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை.
திரு.மாசானபு புகோகா.
தலை சிறந்த ஜப்பானிய இயற்கை ஞானி

புகைபடம்: வலைதளம்.

Friday, March 13, 2009

மூலிகை வளர்ப்பு மற்றும் சந்தை படுத்துதல் பற்றி ஒரு நாள் கருத்தாய்வு கூட்டம்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், கோவை மற்றும் கோயமுத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம். இணைந்து மூலிகை வளர்ப்பு மற்றும் சந்தை படுத்துதல் பற்றி ஒரு நாள் கருத்தாய்வு கூட்டத்தை நடத்தவுள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் இந்த மூலிகை துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

இடம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
தொழில் நுட்ப பூங்கா -4 (முதல் கேட் அருகில்)

நாள் : 16-03-09.

நேரம் : காலை 10 மணி முதல் மாலை வரை

கட்டணம் : இலவசம்.

சிறப்புரை : பத்மஸ்ரீ திரு. P.R. கிருஷ்ணகுமார்
தலைவர், ஆரிய வைத்திய பார்மசி (லிட்) கோவை.

விருப்பமுள்ள அன்பர்களை கலந்து கொள்ளுமாறு இவ்வலைப் பூ அன்புடன் அழைக்கிறது.

Wednesday, March 11, 2009

செயல் ஓன்று பாதிப்பு இரண்டு.

பொதுவாக நகரத்து வீதிகளில் இருக்கும் மரங்கள் இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்க்க ஆரம்பித்தவுடன்அது வேண்டாத குப்பையென எண்ணி மக்கள் தீ வைத்து அழித்துவிடுவார்கள். அது ஒரு மிக சிறந்த இயற்கை உரம் என்பதை அவர்கள் அறியாமலே தீ வைப்பதால் புகை உண்டாகி வளிமண்டலமும் மாசுபடுகிறது. அதனை ஓரிடத்தில் சேர்த்து வைத்து மண்புழுக்களை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கலாம் அல்லது ஓரிடத்தில் சேர்த்து வைத்தாலே அது சிதைந்து உரமாக மாறிவிடும் இது வீட்டிற்கும், நாட்டிற்கும் நன்மை தரும். தீயே வைக்காமலிருப்பதால் புகை வளி மண்டலத்தில் சேர வாய்பில்லை இது அந்த நகரத்திற்கும், உலகத்திற்கும் நன்மை தரும். ஆனால் இருநாட்களுக்கு முன் ஒரு கிராம பகுதியில் பார்த்த காட்சி என்னை மேலும் கவலை கொள்ள வைத்தது. மரங்களுக்கு அருகிலேயே தீயிட்டு அந்த மரத்திற்கும் பாதிப்பை உண்டாக்கியிருந்தனர். யாரோ ஒரு மகான் இவ்வாறு வரிசையாக ஆலமரத்தை தனது நேரத்தையும் பொருளையும் செலவு செய்து நமக்கு நன்மையுண்டாகும்படி செய்திருக்கிறார். ஆனால் நாம் அவற்றை உண்டாக்கக்கூட வேண்டாம் பாதுகாத்தால் கூட போதும் அடுத்த தலைமுறை பயன்பெறும்.

தனியார் நிலங்களில் சந்தனமரம் வளர்க்க தமிழக அரசின் புதிய அரசாணை.

சந்தனமரம் வளர்ப்பு என்றாலே மக்கள் மனதிலே ஒரு பயம். சட்ட சிக்கல்(குறிப்பிட்ட அளவு வைத்திருப்பதற்குகூட சான்று வேண்டும்.), திருடர் பயம் (சமயத்தில் உயிருக்கே ஆபத்து), தாமாக விற்கமுடியாது என்ற நிலைமை போன்ற காரணங்களால் சந்தனமர வளர்ப்பை யாரும் விரும்புவதில்லை. ஆனால் இதன் தேவை மற்றும் வருமானம் மிக மிக அதிகம். தென்னிந்தியாவிலே வறட்சியை தாங்கி நன்கு வளரும் சந்தனமர வளர்ப்பை தற்போது ஆஸ்திரேலியாவில் பொருளாதார நோக்கில் வளர்க்க ஆரம்பித்துள்ளனர். வருங்காலத்தில் இது கண்டிப்பாக நம்மை பாதிக்கும்.

தமிழகத்திலும் பரவலாக வளர்க்க ஆரம்பித்துள்ளனர். கோவை அருகே 10,000 சந்தனமரங்களை ஒருவர் வளர்த்து வருகிறார் என்பது மகிழ்ச்சியை தருகிறது. தமிழக வனத்துறை தனியார் நிலங்களில் சந்தனமரம் வளர்க்க ஊக்குவிப்பதோடு , சட்ட சிக்கலில்லாமல் வளர்த்து சந்தைப்படுத்துவதை எளிமையாக்கி தனியார் பயன் பெற புதிய அரசாணையையும் வெளியிட்டுள்ளனர். எனவே உழவர் பெருமக்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்வோம்.

அரசாணை காண.

Monday, March 2, 2009

உலக தண்ணீர் தினத்திற்கு நாம் செய்ய வேண்டியது.


உலக தண்ணீர் தினத்தை வலைப் பதிவர்களாகிய நாம் நம் மக்களிடையே பிரபலபடுத்தவேண்டும். என் மனதிற்கு பட்டவற்றை பட்டியலிடுகிறேன். முடிந்தால் நீங்களும் கண்டிப்பாக செய்யுங்கள் அல்லது நீங்கள் சொல்லுங்கள் நாம் அனைவரும் செய்வோம். இது நமது வளமான வருங்கால வாழ்கைக்கு நாம் செய்ய வேண்டிய கடமை.

1. உலக தண்ணீர் தினத்தின் 2009 அதிகாரபூர்வமான வலைதளமான http://www.unwater.org/worldwaterday/flashindex.html
தொடுப்பு தருவது.
2. அவர்கள் தந்துள்ள widget ஐ நமது வலைப் பூக்களில் போட்டு பிரபலபடுத்துவது.
3. தண்ணீர் சம்பந்தபட்ட புகைபடங்களை வலைப் பூக்களில் போடுவது. UN WATER வலைதளத்திற்கும் அனுப்பிவைப்பது.
4. அந்தந்த பகுதிகளின் தண்ணீர் தேவைக்காக சிலர் பாடுபட்டு வெற்றியடைந்திருப்பார்கள் அவர்களைப் பற்றி பதிவிடுவது.
5.நம் வாழ்கையிலேயே தண்ணீரினால் மகிழ்ச்சி, வருத்தம், இழப்பு, லாபம், கஷ்டம் என ஏதோ ஒரு நிகழ்ச்சி நடந்நிருக்கும் அதனை பகிர்ந்து கொள்ளலாம்.
6.நீங்கள் எப்படி சிக்கனமாக நீரை பயன்படுத்துகிறீர்கள் என பதிவிடுங்கள்.
7.புதிதாக ஏதேனும் கண்டுபிடிப்புக்கள் இருந்தால் அதனைப் பற்றி கூறுங்கள்.
8. நதி நீர் இணைப்பு பற்றி எழுதுங்கள்.
9. அணைகள் நல்லதா? அல்லது பண்ணைக் குட்டைகள் நல்லதா? பதிவிடுங்கள்.
10. தண்ணீரை தனியாருக்கு தாரை வார்ப்பது எந்த அளவிற்கு பொதுமக்களை பாதிக்கும் ?
11. கடல் நீரை நன்னீராக்குவது எளிதா?
12. வெர்சுவல் வாட்டர் (Virtual water) என்ற கணக்கீட்டில் உங்களுக்கு நம்பிக்கையுள்ளதா?

மேற்கண்ட சில தலைப்புகளில் உங்கள் கருத்துக்களை பதிவிட்டால் தண்ணீரைப் பற்றி நம் மக்களுக்கு தெளிவுபடுத்தலாம். வருகின்ற மார்ச் மாதம் 22 வரை இதனை முழுமூச்சுடன் செய்வோம்.

Sunday, March 1, 2009

உலக தண்ணீர் தினம் மார்ச் மாதம் 22 ஆம் நாள்.

வருங்காலம் தண்ணீருக்காக மனித இனம் போராட போகும் காலம். போராட்டத்தின் சிறு பகுதியை கொஞ்ச காலமாகவே தமிழகம் காவிரி மற்றும் முல்லைப்பெரியார் பங்கீட்டில் அனுபவித்து வருகிறது. எவ்வளவு பொருள், உயிர் இழப்பு, பரஸ்பரம் வெறுப்பு, வேலை நிறுத்தம், நீதிமன்றம், சட்டம் என மனித உழைப்பு வீணாவது என்று கணக்கிட்டால் ரூபாய் மதிப்பில் பல கோடிகளைத் தாண்டும்.

வாழ்கையின் அடிப்படை ஆதாரம் தண்ணீர். இதனை கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை 1993 முதல் மார்ச் மாதம் 22 ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக பல்வேறு தலைப்புக்களில் முக்கியத்துவம் தந்து கொண்டாடி வருகின்றனர். இந்த வருடம் (2009) “தண்ணீரை பங்கிடுவது - வாய்ப்பை பங்கிடுவது” (Shared water- shared opportunities) என்று பலவேறு நாடுகளின் எல்லைப்பகுதி தண்ணீரை எவ்வாறு பயனுள்ளதாக பங்கிட்டு சிறப்பாக உபயோகப்படுத்துவது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டாட உள்ளனர். மேலும் தகவலுக்கு UN/WATER ‘கிளிக்’ செய்யவும்.