Tuesday, December 30, 2008

தேனீக்கள் கூட்டம் !!!!!!

இரு வாரங்களுக்கு முன் சத்தியமங்கலம் - கோபி சாலையிலிருந்து சுமார் 2 கீ.மீ தூரத்தில் பசுமை நிறைந்த இப்பகுதியில் இரு மரங்களில் இயற்கையாக கட்டிய சுமார் 40 மலைந்தேனீக்களின் கூடுகளைப் பார்த்து அதிசயப்பட்டேன். மரங்களின் உரிமையாளர் திரு. மகாலிங்கம் சுற்றுவட்டாரத்தில் இது போன்ற தேன் கூடுகள் இல்லையென்றும் ,அவர்கள் தோட்டத்திலேயே இதே போன்ற மரம் இருந்தும் கூடுகள் இல்லாததை காண்பித்தார். காய்கறி பயிர்களில் நல்ல மகசூல் கிடைப்பதாக கூறிய அவர் டிராக்டர் கொண்டு நிலத்தை உழ முடிவதில்லை காரணம் புகை வாசம் வந்தாலே மனிதர்களை தேனீக்கள் தாக்க ஆரம்பித்துவிடுவதும் அது மாத்திரமன்று புகைபிடிப்பவர்களுக்கும் இந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதி என்றார். கூடுகள் 3 அடி வரை இருக்கும் போல் தோன்றுகிறது. பளு தாங்காமல் விழுந்து கிடந்த தேன் அடைகளைப் பார்த்தாலே பிரமிப்பாக இருந்தது.
கீழே விழுந்த தேன் அடையுடன் திரு. மகாலிங்கம் தம்பதியினர்.

Saturday, December 27, 2008

தேனீக்கள் வளர்த்து குபேரன் ஆகமுடியுமா ???

முடியும் என்று சொல்பவர் இந்தியாவின் மொத்த தேன் ஏற்றுமதியில் 70% செய்யும் காஷ்மீர் அபியரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. ஜக்ஜித் சிங் கபூர். 1980 களில் ரூ.1000/= துவக்க முதலீடு செய்யது இன்று 2008 இல் ரூ.136 கோடிகள் வர்த்தகம் செய்பவர் திரு. ஜக்ஜித் சிங் கபூர். இன்று பணியாற்றும் உழியர்கள் சுமார் 1500 பேர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேனைக் கொள்முதல் செய்கிறது காஷ்மீர் அபியரீஸ். 4 வணிகப் பெயர்களில் 42 நாடுகளில் இவர்களது தேன் விற்பனையாகின்றது. தேனீக்கள் வளர்த்தல் ஏதோ ஒரு விவசாய சிறு உபதொழில் என்று நினைக்கும் நாம் அதில் கூட சாதனைகள் செய்திருக்கும் திரு. ஜக்ஜித் சிங் கபூரை பார்க்கும் போது பிரமிப்பு அடைகிறோம்.. சாதனையாளர் திரு. ஜக்ஜித் சிங் கபூர் அவர்களின் இலக்கான 100 நாடுகள் ரூ.400 கோடிகள் மிக விரைவில் அடைய இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
Source : India Today 10-12-2008

Friday, December 26, 2008

தேனீ வளர்ப்பு - ஒரு பார்வை

அயல் மகரந்த சேர்க்கையில் தேனீக்கள், பறவைகளின் பங்கு கணிசமானது. ஆனால் இவைகளின் தொகை குறைந்து கொண்டே போவதால் உணவு உற்பத்தியும் குறைந்து கொண்டே போகின்றது. இதனை மேம்படுத்த UNDP (United Nations Environment Programme) மிக சிறந்த ஒரு திட்டத்தை வரும் 5 வருடங்களுக்கு $26.45 மில்லியன் டாலரில் இந்தியா, கென்யா, பிரேசில், கானா, நேபாளம்,பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் செயல்படுத்தவுள்ளனர். இதனால் உணவு உற்பத்தி அதிகரிப்பதுடன் தேன் மற்றும் மெழுகு உற்பத்தியும் அதிகரிக்கிறது. இதனால் கிராமப்புற வேலை வாய்ப்பு ஏற்படுகிறது.

வியாதி, வனம்அழிதல், இரசாயன பூச்சிகொல்லிகளை உபயோகித்தல், விவசாய மாற்றத்தால் விவசாயிகள் தேனீ வளர்ப்பை கைவிட்டது, புதியஇனங்களின் அறிமுகம், வைரஸ்களால் பாதிப்பு என பல்வேறு காரணங்களால் இதன் தொகை குறைந்து கொண்டே போகின்றது. எனவே UNDP யின் இந்த திட்டம் வரவேற்க வேண்டிய நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டிய திட்டம். பயன்படுத்திக் கொள்ளவோம்.

தேனீக்கள் பற்றி முழுவதும் அறிந்து கொள்ள கீழ்கண்ட தொடர்புகளை பயன்படுத்துங்கள்
http://www.islamkalvi.com/science/honey_bee.htm
http://iyargai.blogspot.com/search/label/தேனீ
பயிற்சி மற்றும் தேனீ வளர்ப்பிற்கு கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், கோவை.
http://www.ecogreenunits.blogspot.com/

Source: The Hindu 16-08-2008
Photo : Mr. Babu

Wednesday, December 24, 2008

இயற்கை வேளாண்மையில் பூச்சிகளின் மேலாண்மை மற்றும் தேனீ வளர்ப்பு - பயிலரங்கம்.

இன்றைய விவசாயம் என்பது பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. அதில் முக்கியமானது பூச்சிகளின் மேலாண்மை. அதிலும் இன்றைய காலகட்டத்தில் இரசாயான பூச்சிகொல்லிகளால் சுற்றுசுழலும் கெட்டு முடிவில் விவசாயிகளின் தற்கொலைகளில் முடிவடைகிறதை நாம் தினசரிகளில் படிக்கிறோம். நம் முன்னோர்கள் எப்படி மேலாண்மை செய்தார்கள்? இயற்கை முறையில் பூச்சிகளின் மேலாண்மை சாத்தியமா? ஏன் தேனீக்கள் வேண்டும்? இந்த கேள்விகளுக்கு இப்பயிலரங்கம் தெளிவான விளக்கம் தரும். இது பற்றிய நூல்களும் அங்கு விலைக்கு கிடைக்கும்.

கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போம் சங்கம். பதிவு எண்:110/2006,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்துடன் இணைந்து நடத்தும் ஒரு நாள் பயிலரங்கம்.

நாள் : 09-01-2009 (வெள்ளிகிழமை)

நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

தலைப்பு : இயற்கை வேளாண்மையில் பூச்சிகளின் மேலாண்மை மற்றும் தேனீ வளர்ப்பு

இடம் : வேளாண் பூச்சியியல் துறையின் கருத்தரங்கு அறை.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், கோவை -3

கட்டணம் : ரூ.180/= ஒருநபருக்கு. (பயிற்சி கையேடு,தேநீர்,மதிய உணவு உட்பட)முதலில் பதிவு செய்யும் 75 நபருக்கு மட்டும் அனுமதி.

பதிவிற்கு : தேவராஜன்..............93691 16018
.............. நாராயணசுவாமி......94433 84746.
=========================================================

Monday, December 22, 2008

E.M. என்னும் திறநுண்ணுயிர்.

ஜப்பான் நாட்டின் Dr.டியூரோ ஹிகா என்பவரால் 1980களில் அறிமுகப் படுத்தப்பட்ட E.M. என்னும் திறநுண்ணுயிரி. இன்று உலகின் 120 நாடுகளுக்கு மேல் விவசாயம், சுற்றுசுழல், கால்நடை பராமரிப்பு, போன்ற துறைகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. Effective microorganisams என்பதின் சுருக்கமே E.M. இது இயற்கை இடுபொருள் என Eco cert சான்று தந்துள்ளனர்.
E.M-1. என்பது உறங்கும் நிலையிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் தொகுப்பாகும். E.M-1. நீர்த்த பிறகே பயன்படுத்த வேண்டும். இதனை 1:1:20 என்ற விகிதத்தில் E.M.-1 :வெல்லம்(அ)கரும்பு சர்க்கரை :குளோரின் கலக்காத நீரில் 5-10 நாட்கள் பிளாஸ்டிக் கலன்களில் காற்று புகாமல் நிழலில் நொதிக்க வைக்க E.M-2 தயார். உருவாகும் வாயுவை வெளியேற்ற தினமும் 1 நொடி மூடியை திறந்து மூடவேண்டும். இதுதான் உபயோகத்திற்கு ஏற்றது. ஒரு மாததிற்குள் பயன்படுத்திடவேண்டும். நொதிக்க வைக்க கண்ணாடி கலன்களை தவிர்க்கவும்.
எங்கள் வீட்டில் சமையலறை, குளியலறை போன்ற இடங்களில் E.M-2 தான் உபயோகிக்கிறோம். விரைவாக காய்ந்து ஈரமின்றி இருப்பதுடன் ஈக்கள் வருவதில்லை, துர்வாசனை இல்லை. வீட்டை துடைப்பதற்குக் கூட E.M-2 வைத்தான் உபயோகிக்கிறோம். வாகனங்களை கழுவுவதற்கும், சிறுகுழந்தைகளின் உள்ளாடைகள் சுத்தம் செய்யவும் மிகவும் ஏற்றது. செலவு மிகமிக குறைவு என்பதுடன் ஒரு மிகச் சிறந்த இயற்கை பொருளை கடந்த 5 வருடங்களுக்கு மேல் உபயோகிக்கிறோம் என்ற திருப்தி உண்டு. பூனே, கோவை மாநகராட்சிகள் தங்களின் மாநகர கழிவுகளை E.M. கொண்டுதான் மக்க செய்து மறுசுழற்சி செய்கிறார்கள் என்பது உபரித் தகவல்.
நான் மிகமிக சிறிய அறிமுகத்தைதான் E.M. பற்றி தந்திருக்கிறேன். மேலும் விவசாயம், சுற்றுசுழல், கால்நடை பராமரிப்பு, போன்ற துறைகளில் உபயோகப்படுத்தப்படுவதைக் காணவும், மேலும் E.M. பயன்படுத்தி ‘பொக்காஷி’, E.M.-5 போன்றவை தயாரிக்கவும் கீழ் கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்.
புகைபடம் 1 :வலைதளம்

Thursday, December 18, 2008

“Birds of Tamilnadu” - முனைவர்.K.ரத்னம் அவர்களின் பயன்மிக்க நூல்.

இயற்கையைப் பராமரிப்பதில் பறவைகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. விதைகளை எல்லா இடங்களுக்கும் பரப்பி வனத்தை விரிவுபடுத்துவதிலும் , பூச்சியினங்களை கட்டுப்படுத்துவதிலும், சுற்றுசுழல் மாசுபடாமல் சுத்தம் செய்வதிலும் பறவைகளுக்கு நிகர் பறவைகள்தான்.பறவைகளின், மிருகங்களின் உணவுப்பாதையில் சென்றுவரும் விதைகள் அதிக முளைப்புத் திறன் பெற்றவை என்பது நாம் அறிந்ததே. விவசாயத்திலும் இதற்கு நல்ல பங்கு உண்டு. ஆயிரக்கணக்கான பறவைகள் இருந்தாலும் நாம் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் பறவைகளைப் அறிந்திருக்கிறோம். புதிதாக சில பறவைகளைப் பார்த்தாலும் நம்மால் இனம் காண முடிவதில்லை. அக்குறையை போக்க வந்துள்ள நூல்தான் முனைவர்.K.ரத்னம் அவர்களின் “ Birds of Tamilnadu” .
தமிழகத்தின் சுமார் 328 பறவைகளின் அங்க அடையாளங்கள், காணப்படும் இடங்கள், வாழ்வுமுறை, உணவு, குரல், இனப்பெருக்கம் என மிகத்தெளிவாக வண்ணப் படங்களுடன் விளக்கியிருப்பது இந்நூலின் சிறப்பு. ஆங்கிலம், தமிழ் கூடவே அறிவியல் பெயரும் இருப்பது பின்னாட்களில் குழந்தைகளுக்கு மிக உபயோகமாக இருக்கும். முனைவர்.K.ரத்னம் அவர்கள் தமிழ்துறைத் தலைவராக மன்னர் சரபோஜி கலைக்கல்லூரி, தஞ்சாவூரில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள், சாதனைக்குப் பரிசு என குழந்தைகளுக்கு விலைமிக்க கம்யூட்டர் விளையாட்டுப் பொருட்கள், ஆடைகள், அணிகலன்கள் என பரிசளிக்கிறோம். ஒரு மாறுதலுக்காக இது போன்ற வாழ்கைக்குப் பயன்தரும் நூல்களை பரிசாக அளித்தால் இயற்கையை புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பாக இருக்குமே. விவசாய்களிடமும் இருக்க வேண்டிய நூல்.

கிடைக்குமிடம்:
மாணிக்கவாசகர் நூலகம்
சிதம்பரம்................230069
சென்னை................25361039, 24357832
மதுரை....................2622853
கோவை..................2397155
திருச்சி....................2706450

Saturday, December 13, 2008

பசுமை போராளி திரு. M.Y.யோகநாதனின். “தாகம்”

பசுமை போராளி திரு. M.Y.யோகநாதன் அவர்களின் “தாகம்” என்ற குறும்படத்தை டிசம்பர் 3 ஆம் தேதி கோவையில் வெளியிட்டார்கள். மிக நேர்த்தியாக சொல்ல வந்த கருத்தை 30 நிமிட குறும்படத்தில் சொல்லியிருப்பது பாராட்டுதலுக்குரியது. நுகர்வு கலாச்சார ஆசையில் வாழ்வாதாரத்தை இழக்கும் ஒரு சராசரி மனிதனின் வாழ்கை. அவசியம் தமிழகத்தின் எல்லா பள்ளிகளிலும், ஒவ்வொரு கிராமங்களிலும் காட்டப்பட வேண்டிய குறும்படம். குழந்தைகளின் மனதில் மரத்தின் பயனை பதிய வைத்தால் பிரகாசமான எதிர்காலம் தமிழகத்திற்கு நிச்சயம் உண்டு. இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் அவசியம் பார்க்க வேண்டிய மற்றவர்களுக்கு பரிசாக தர வேண்டிய குறுந்தகடு.. நமது வீட்டுகளில் என்றும் இருக்க வேண்டிய குறுந்தகடு.
உங்களுக்காக சில காட்சிகள்.



மேலும் விபரங்கள் பெற:

திரு. அரவிந். - 98945 93945

திரு. யோகநாதன். - 94430 91398

திரு. M.Y.யோகநாதன் பற்றிய முந்தைய பதிவைக் காண:

பசுமைப் போராளி திரு. M.Y. யோகநாதன்.

Friday, December 12, 2008

தண்ணீர் !!தண்ணீர் !!!


Uploaded on authorSTREAM by vincent2511

ஆரம்ப காலங்களில் பவர் பாயின்ட் கற்று கொள்ள ஆரம்பித்த போது குழந்தைக்காக சில தலைப்புக்களில் செய்தேன். பார்த்தவர்கள் இது பெரியவர்கள் கூட பார்க்கலாம் என்று கூறினர். எனக்கு மற்றவைகளை விட தண்ணீர் அதிக முக்கியமாக தோன்றியது. எனவே அதனை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். ஆங்கிலத்தில் இருக்கும் பொறுத்துக் கொள்ளுங்கள். காரணம் இ.கலப்பை PPTயில் சரியாக வருவது இல்லை.

Tuesday, December 9, 2008

இயற்கை சேதத்தைக் குறைக்க உதவும் வெட்டிவேர்.

நிஷா புயல் தமிழகத்தில் சுமார் 103 மனித உயிர்களுடன் 6700 கீ.மீ சாலை, 328 குளங்கள், 687 பாலங்கள்,402 அரசாங்க கட்டிடங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தி சுமார் 5,52,290 ஹெக்டர் பயிர் நாசத்தையும் செய்து மாநிலத்திற்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது. பொருளாதார சரிவில் மேலும் ஒரு சிக்கல்.
மற்ற நாடுகளிலும் இதுபோன்று ஏற்படுகிறது அவர்கள் நம் ஊர் வெட்டிவேர் கொண்டு சேதத்தை குறைக்கிறார்கள். மடகாஸ்கர், தாய்லாந்து, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அனுபவம் PPT காட்சி கீழே.


சீனாவில் வெட்டிவேர் பற்றி காண.
சீனாவில் வெட்டிவேர்

Source : The Hindu for News and PPT Photos form TVNI

Tuesday, December 2, 2008

மயில்களின் நடமாட்டம்

ஏற்கனவே எங்கள் குடியிருப்பு பகுதியில் மயில்கள் நடமாட்டம் பற்றி

http://maravalam.blogspot.com/2008/03/blog-post_07.html

பதிவில் எழுதியிருந்தேன். அதன் குஞ்சுகள் சற்று பெரியவைகளாகிவிட்டன. உடல் ரீதியாக அதற்குள்ள நிறத்தையும், அழகையும்,தோகையையும் பெறவில்லை ஆனால் இவைகள் சாலைகளில் எந்தவித பரபரப்புமின்றி ஒய்யாரமாக நடந்து அதன் உணவைத் தேடுவதுதான் அழகு, நம்மை கண்டு அஞ்சுவதில்லை. சென்ற ஞாயிறு காலை சுமார் 7 மணியளவில் அதன் நடைபயிற்சியை காண நேர்ந்தது. அதனை புகைபடமாய் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
இதன் பெருக்கத்தால் காய்கறி பயிரிடும் விவசாய்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர் என்பதும் உண்மை. தீர்வு ???

Monday, December 1, 2008

“மனிதனின் கால் தடம்.............”

வடகிழக்கு பருவமழை தனது சக்தியை கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் காண்பித்த போது மேற்கு தொடர்ச்சி மலையில் அதன் தாக்கம் குறைவாக இருந்ததால் புற்கள் நன்கு வளர்ந்து பூத்து காண்போரை பரவசப்படுத்தியது.

மனிதன் காலடிபட்டால் புல்பூண்டுகள் கூடவராது என்பார்கள். அவன் வழி எப்போதும் தனி வழி’. கீழேயுள்ள படங்களை பார்க்கும் போது அது உண்மையென்று தோன்றுகிறது எனக்கு !!! உங்களுக்கு ?????