Wednesday, July 27, 2011

இந்தியாவில் 5 வது உலக வெட்டிவேர் மாநாடு


சரிவு பகுதியில் வெட்டிவேர் மழைநீர் சேமிக்க உதவுவதோடு மண் அரிப்பையும் தடுக்ககிறது
 5 வது உலக வெட்டிவேர் மாநாடு லக்னோ நகரில் அமைந்துள்ள சென்டரல் இன்ஸ்டிடூட் ஆப் மெடிசினல் அண்டு அரோமாடிக் பிளாண்ட்ஸ் (Central Institute of Medicinal and Aromatic Plants ) வளாகத்தில் வருகின்ற அக்டோபர் மாதம் 28-30 2011,  3 நாட்களுக்கு நடைபெறுகிறது. 
மாநாட்டின் பொருள்: வெட்டிவேரும் பருவ நிலை மாற்றமும் ("Vetiver and Climate Change")

மேலதிக தகவல்களுக்கு கீழ்கண்ட தொடர்பை உபயோகியுங்கள்
Central Institute of Medicinal and Aromatic Plants 

தொடர்பிற்கு
ICV-5 secretariat (attn. Dr. U.C. Lavania)
Central Institute of Medicinal and Aromatic Plants
P.O. CIMAP, Lucknow 226 015, India
Website: http: //icv-5.cimap.res.in
e-mail: icv-5@cimap.res.in
Phone: + 91-522-2718615

Tuesday, July 26, 2011

அக்ரி இன்டெக்ஸ் 2011

ஆண்டுதோறும் நடைபெறும் அக்ரி இன்டெக்ஸ் இந்த வருடம் வரும் 28-07-2011  வியாழன் முதல் 31-07-2011 ஞாயிறு வரை கொடீசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

Monday, July 25, 2011

பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியில் டெக்ஸ்டைல் துறையில் கைவினை கலைஞர்களுக்கு பயிற்சி.


 புதுதில்லி இந்தியஅரசு கைவினைப் பொருட்கள் வளர்ச்சி  ஆணையகமும், பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியும் இணைந்து டெக்ஸ்டைல் துறையில் கைவினை கலைஞர்களின் திறமையை மேம்படுத்தவும் நவீன இயந்திர தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்தும் நோக்கமாகவும் தொழிலில் ஈடுபட்டுள்ள கைவினை கலைஞர்களுக்கு குறுகிய மற்றும் நீண்ட கால பயிற்சி வகுப்புக்கள் முறையே ஒரு மாதம் மற்றும் நான்கு மாத கால பயிற்சி அளித்து வருகின்றது. இந்த பயற்சியில் டெய்லரிங், எம்ராய்டரி, கம்பியூட்டர் கொண்டு ஆடைகள் வடிவமைக்கும் முறை(CAD) , பிரிண்டிங் என்று பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின் போது கலைஞர்களுக்கு கூலி இழப்பு தொகையாக மாதம் ரூ2000/=  அளிக்கப்படுகிறது. மேலும் கைவினை கலைஞர்களுக்கான அடையாள அட்டை, மருத்துவக் காப்பீடு , மற்றும் பயிற்சிக்கான சான்றிதழும் பயிற்சியின் முடிவில் வழங்கப்படுகிறது.

இப்பயிற்சியானது கடந்த 29-01-2009 முதல் தொடர்ந்து  ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக நடத்தபடுகிறது.

தொடர்பிற்கு
துறைத் தலைவர்,
டெக்ஸ்டைல் டிபார்ட்மெண்ட்
பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி
பீளமேடு
கோவை.641 004.
அலைபேசி எண்: 98654 34528

இப்பதிவை படிக்கும் அன்பான வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள். பிறர்க்கு இச்செய்தியை தெரிவியுங்கள் / பகிர்ந்து கொள்ளுங்கள். குறிப்பாக சுயுதவி குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்.

Saturday, July 23, 2011

உழவர் தினம் 2011--புகைப்படம்

உழவர் தினம் - 2011 இல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.அங்கு பார்த்தவைகளை புகைப்படமாய் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

Tuesday, July 19, 2011

மாநிலம் தழுவிய உழவர் தினக் கொண்டாட்டம்.


கோவை வேளாண்மை பல்கலைக் கழக வளாகத்தில் வருகின்ற வெள்ளி (22-07-2011) முதல் ஞாயிறு (24-07-2011) வரை 3 நாட்களுக்கு மாநிலம் தழுவிய உழவர் தின கொண்டாட்டம்  நடை பெறவுள்ளது. அச்சமயம் 5 விவசாய அன்பர்களுக்கு வேளாண் செம்மல் விருது வழங்கப்படவுள்ளது. புதிய பயிர் வகைகள் மற்றும் பண்ணைக் கருவிகளை வெளியிடவுள்ளனர். தமிழகத்திலுள்ள வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களும், வேளாண்மை அறிவியல் நிலையங்களும் (KVK)   தங்கள் கண்டுபிடிப்புக்களை பார்வைக்கு வைக்கின்றனர். பல்வேறு கருத்தரங்கங்களும் நடைபெறவுள்ளது. அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுவோம்.

Wednesday, July 13, 2011

“Economy of Permanence” By Dr.J.C .குமாரப்பா இலவச மின்நூல்.


காந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தி எழுதப்பட்ட நூல். கிராம பொருளாதாரத்தையும், இயற்கை, சுற்றுச்சுழல், வாழ்வாதாரம் பற்றி 1945 ஆண்டு வெளிவந்த நூல். “Small is Beautiful”  என்ற நூலின் ஆசிரியர் குறிப்பு நூல்களில் மேற்கண்ட நூலை குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தி அவர்கள் முன்னுரையில் இந்நூலை கவனமாக இரண்டு மூன்று முறை படித்தால்தான் முழுமையாக மதிப்பிட முடிமென்கிறார். கிராம தொழில்களின் மருத்துவர் என்றும், கிராம தொழில்களே இன்றைய சுழலில் வற்றாத பொருளாதாரத்தை தரமுடியும் என்றும் எழுதும் அவர் எளிய வாழ்கை உயர்ந்த எண்ணங்கள்”\ என்று முடிவாகக் கூறியுள்ளார்.

ரூ.35/= விலையுள்ள இந்த புத்தகத்தை கீழ் கண்ட விலாசத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

M/s Sarva Seva Sangh Parkashan
Rajghat
Varanasi  - 221 001
Ph  & Fax  : 0542- 2440385
e-mail   : sarvodayavns

காந்திய இலக்கிய சங்கம்.
மதுரை- 625 020
தொ.பேசி : 0452 - 2533957

மின் நூலாகப் படிக்க கீழ் கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்.

Tuesday, July 12, 2011

மனிதன் தானும் கெட்டு... வனத்தையும்......


அன்புடன் காலை வெய்யிலை அனுபவிக்கும் குடும்பம்.
உணவு கிடைத்தவுடன் உறவை தவிர்கக திரும்பிக்கொள்கிறது.
உறவை நோக்கி உஷ்ணப் பார்வை.


சென்ற ஏப்ரல் மாதம் உதகை செல்லவேண்டி வந்தது. வழியில் சற்று ஓய்வு எடுத்து திரும்ப செல்லாமென்று முடிவு செய்தோம். காலை வேளை 3  குரங்குகள் தங்கள் குட்டிகளுடன் காலை வெய்யிலை அனுபவித்துக் கொண்டிருந்தன. காரில் வந்த அந்த உபகாரி ஒரு தட்டில் கொஞ்சம் உணவை சற்று  தள்ளி வைத்து விட்டு சென்றுவிட்டார். அடுத்த சில நிமிடங்கள் என்னை கவனம் கொள்ள வைத்தது. குரங்குகளின் குணம் மாறியது. வேகமாக பாய்ந்து அதனை கைபற்றிய ஒன்று மற்றவைகளை அண்டவிடாமல் முழுவதும் முடிந்தபின்தான் சென்றது. குட்டியைக் கூட ஓரமாக வைத்து உணவை காலி செய்தது. மாலையில் திரும்பி வரும்போது அதே இடத்தில் உணவிற்காக அவைகள் காத்திருந்தன.
குட்டியைக்கூட பின்தள்ளி உண்ணும் அவசரம்
அடுத்த உணவை நோக்கிக் கண்கள்
எண்ணையில் செய்த, சமைத்த உணவுகள் தருவதைத் தவிர்ப்போம். அப்படியே தருவதென்றால் பழங்களைத் தருவோம். பழங்களையும் இரசாயன முறையில் பழுக்க வைக்கிறோம் என்பது வேறு விஷயம். இப்படி உணவைத் தருவதால்  அவைகள் தங்கள் இயல்பான வாழ்கையிலிருந்து மாறி காடுகளுக்குள் செல்வதை தவிர்த்து அந்த இடத்திலேயே இருக்கின்றன. மேலும் குழந்தைகள் ஏமாந்து இருக்கும் போது அவர்களிடமிருந்து உணவுபண்டங்களை பிடுங்கி சென்று விடுகின்றன. இதனால் குழந்தைகள் பயந்துவிடுகின்றனர். உணவினால் சுகவீனம் வரும்போது நாம் மருத்துவர்களிடம் சென்றுவிடுகிறோம். அவைகள் எங்கு செல்லும்??? பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றில் தரும்போது சுற்றுச்சுழலை மாசுபடுத்துடன் அதனையும் சேர்த்தே உண்ணும் அபாயம் உள்ளது. வன உயிர்களுக்கு உபகாரம் செய்வதாக எண்ணி அவைகளுக்கு உபத்திரவம் தருகிறோம். இயற்கை அவைகளை கவனித்துக் கொள்ளும் !!!!!

Friday, July 8, 2011

எரிசக்தி மரவளர்ப்புத் திட்டம்


மின்சாரம் இன்றைய வாழ்வு முறையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட நிலையில் அதனை சுற்றுசுழலை பாதிக்காத வகையில் உற்பத்தி செய்வதுதான் அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் உதவியாக இருக்கும். அந்த வகையில் காற்றாலை, சூரியஒளி, கடல் அலை போன்றவை பிரபலம். தற்சமயம் தாவரக் கழிவுகளை எரிசக்தியாக பயன்படுத்தி மின்உற்பத்தி செய்து நமது மின்சார தேவையை பூர்த்தி செய்ய நிறுவனங்கள் முன் வந்துள்ளனர். தூய்மையான சக்தி என்பதால் இதனை நாம் ஊக்குவிக்க வேண்டும். இதனை உற்பத்தி செய்ய மரதுண்டுகள் மற்றும் விவசாய கழிவுகள் வேண்டும். 07- 07- 2011 அன்று வனகல்லூரி மேட்டுப்பாளயம் வளாகத்தில் இதுதொடர்பான ஓப்பந்தம் ஆரோ மீரா எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கும் வனக்கல்லூரிக்குமிடையே  இடையே நடைபெற்றது. இதன்படி எரிசக்தி திறன் நிறைந்த மர வகைகளை தேர்வு செய்து தரிசு நிலங்களில் வளர்க்க தேவையான நாற்றுக்கள் மற்றும் தொழில் நுட்பங்களை  வனக்கல்லூரி விவசாய்களுக்கு தரும்.  விளைந்ததை எரிசக்தி நிறுவனம் வாங்கிக் கொள்ளும். வங்கிக்கடன் வசதியும் இருக்கும் என தெரிவித்தனர். எனவே இது நான்குமுனை கூட்டு முயற்சி. தமிழகத்தில் இதுபோன்று 14 மின்உற்பத்தி நிலையங்கள் செயல்படுகின்றன என்பது உபரித் தகவல்.

தூய்மையான சக்தி, தரிசு நிலமேம்பாடு, மரங்களின் பரப்பு அதிகரிப்பு, நீர் பற்றாக்குறை, வேலையாட்கள் பற்றாக்குறை, அதிகரித்து வரும் மின்தேவைக்கும், மின்பற்றாக்குறைக்கும் தீர்வு என பல நன்மைகள் இருப்பதால் விவசாய அன்பர்கள் இவைகளை கருத்தில் கொண்டு செயல்படுத்தலாம்.

மேலும் விபரங்கள் அறிய :
வன கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
கோத்தகிரி சாலை,
மேட்டுப்பாளையம். 641 301
தொலைபேசி எண்: 04254-222010.
=============================================
ஆரோ மீரா எனர்ஜி பிரைவேட் லிமிடெட்
ஆரோமீரா ஹவுஸ்
ப.எண் 11, புதிய எண்29 ஷஃபி முகமது சாலை,
ஆயிரம் விளக்கு
சென்னை-600 006.
தொலைபேசி எண் :044- 28209800

Sunday, July 3, 2011

Dr.J.C.குமரப்பா கண்ட நிலையான பொருளாதாரம்



டாக்டர் ஜே.சி.குமரப்பா காந்தியடிகளின் பொருளாதாரக் கருத்துக்களுக்கு உருவம் கொடுத்து விளக்கிக் கூறிய பொருளாதார மேதை ஆவார்
இளம் வயதில் Dr. J.C. குமரப்பா
 சபர்மதி ஆசிரமத்தில் காந்தியடிகளைக் காணும்போது மேற்கத்திய நாகரிகத்தின் சின்னமாகக் காட்சியளித்த குமரப்பா பிற்காலத்தில் காந்தியடிகளின் பொருளாதாரக் கருத்துக்களைப் பகுத்தறிவு பூர்வமாக அலசி ஆராய்ந்து அவற்றுக்கு உருக்கொடுத்தார்


சத்தியம்,​​ இயற்கையின் அனைத்துப் படைப்புகளையும் நேசிக்கும் அன்பு இந்த இரண்டு ஆன்மிக அம்சங்களை அடிப்படையாகக் கொண்டே சமுதாய வளர்ச்சிக்கான எல்லா அம்சங்களையும் காண்பதாக இருந்தது காந்தியடிகளின் பார்வை. இதை உணர்ந்து கொண்டார் குமரப்பா. ஆகவே தான் இறுதி நாள்கள் வரை காந்திய பொருளாதாரக் கருத்துகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறியும் எழுதியும் வந்ததோடு அக் கருத்துகளை நடைமுறைப்படுத்தும் பணியிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்


கிராம அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான பயிற்சி நிலையமாகவும்,​​ பல்வேறு வகைப்பட்ட கிராமக் கைத்தொழில் பொருள்களின் உற்பத்திக் கேந்திரமாகவும் ஆதாரக் கல்வியை நடைமுறைப்படுத்தியும் வந்த மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தில் தம் இறுதி நாள்களைக் கழித்தார். நாம் வாழும் இந்த பூமிப் பந்து வெப்பமடைந்து தட்பவெப்ப நிலைகளில் மாறுதல்கள் ஏற்பட்டு நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலை,​​ எந்த அளவுக்கு அவர் கூறிய நிலையான பொருளாதாரக் கொள்கையைச் செயல்படுத்த முடியும் என்று சிந்தித்து நாம் செயல்பட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது


மற்றவற்றைச் சுரண்டி அழித்து வாழும் அட்டை போன்ற உயிரினங்களைப் போல் வாழும் வாழ்க்கை,​​ திருடி கொள்ளையடித்து வாழும் வாழ்க்கை,​​ தொழில்முனைவோராக இருந்து கடினமாக உழைத்து வாழும் வாழ்க்கை,​​ குழுவுடன் இணைந்து கூட்டுறவு முறையில் வாழும் வாழ்க்கை,​​ பிறர் நலனுக்காக பெற்ற தாயைப் போல் சேவை செய்து வாழும் வாழ்க்கை என சமுதாய அமைப்பில் காணப்படும் ஐந்து வகையான பொருளாதார அமைப்பைப் பற்றிக் குறிப்பிடுகிறார் குமரப்பா


ஒரு வேலையும் செய்யாமல் மற்றவர்களைச் சுரண்டி இயற்கையையும் அழித்து வாழ்ந்து கொண்டிருக்கும் கூட்டம்,​​ கொலை,கொள்ளை இவற்றில் ஈடுபட்டு சமுதாயத்தின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருக்கும் கூட்டம் இந்த இரண்டும் பெருகக் காரணம் லாப நோக்கம் மட்டுமே. லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு சிலர் மட்டுமே கோடி கோடியாகச் சம்பாதிக்கக் காரணம், இன்றைய பொருளாதார அமைப்பேயாகும் என்பது அவரது தேர்ந்த முடிவு


இன்றைய உலகமயமாதல் பொருளாதாரக் கொள்கையால் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகளிலும்,​​ வளரும் நாடுகளிலும் மக்கள் தொகையில் கணிசமான பிரிவினர் வறுமையிலும்,​​ நோய் நொடிகளிலும் சிக்குண்டு அல்லல்படுகிறார்கள். இந்த நிலையை மாற்றியமைக்க குமரப்பா கூறும் தாய்மைப் பொருளாதார அமைப்பால் முடியும். இன்றைய சூழலில் இது நடக்கக் கூடிய ஒன்றா? என்று நாம் கேட்கலாம். ஆனால் இன்று அந்த லட்சியப் பொருளாதார இலக்கை நோக்கி விரைந்து செயல்படுவதைத் தவிர வேறு வழியில்லை


தாய்மைப் பொருளாதாரத்தை சிறுசிறு கிராமங்களின் கூட்டமைப்பின் மூலமாகவும்,​​ நகராட்சி}மாநகராட்சிகளின் மூலமாகவும் கட்டமைக்க வேண்டும். கிராமங்களிலும் நகரங்களிலும் எல்லோரும் நியாயமான வழிகளில் உழைத்து தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். கிராமங்களின் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளும்,​​ நகராட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகளும் கிராமங்கள், நகரங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு நிபுணர்கள் துணையுடன் திட்டமிட்டு உள்ளூராட்சி அமைப்புகள் மூலமாகச் செயல்படுத்துவார்களேயானால் தாய்மைப் பொருளாதார அமைப்பு நடைமுறைப்படுத்தக் கூடிய ஒன்றாகவே இருக்கும்


மத்திய, மாநில அரசுகள் உரிய வகையில் உதவிகள் செய்து உள்ளூராட்சி அமைப்புகளின் செயல்பாட்டில் தலையிடாதிருக்க வேண்டும். அரசியல் அதிகாரம் மாநிலங்களிலும், மத்தியிலும் சிலர் கையில் சிக்குண்டுவிடக்கூடாது. விவசாயத்துடன் இணைந்து புதிய தொழில் நுணுக்கத்தைப் புகுத்தி சிறுதொழில்கள் கிராமப்புறங்களில் வளரவும்,​​ சிறிய நீர்ப்பாசன வசதிகள் பெருகவும்,​​ அரசுகள் உதவ வேண்டும்.பள்ளிக் கல்வியும்,​​ உயர்கல்வியும் தொழில் அறிவோடும்,​​ பண்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றோடும் இணைந்தும் அனைத்துப் பிரிவு சிறுவர், சிறுமியர்,​​ இளம் ஆண்கள், பெண்கள் ஆகியோருக்குக் கிடைக்க வேண்டும். அந்தந்த துறையைச் சார்ந்த நிபுணர்களும் மத்திய, மாநில அரசுகளும் இவற்றுக்கு உதவ வேண்டும்


எல்லோருக்கும் உணவும்,​​ உடையும்,​​ இருப்பிடமும்,​​ கல்வி சுகாதார, மருத்துவ வசதியும் கிடைக்க வேண்டும். வன்முறைக் கலாசாரத்தையும்,​​ நச்சுப் பொருள்களின் உற்பத்தியையும்,​​ நுகர்வையும் விலக்கி வாழும் வாழ்க்கைக்கு வகை செய்யும் பொருளாதார அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இம் முயற்சியில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்வதன் மூலமாகவே இன்றைய சவால்களான வறுமை,​​ வேலையின்மை,​​ வன்முறை,​​ பயங்கரவாதம்,​​ இயற்கையின் பேரழிவு,​​ கலாசார சீர்குலைவு,​​ கொள்கையற்ற அரசியல்,​​ குறுகிய சாதி, மத, இன வேறுபாடுகளால் ஏற்படும் மோதல்கள் ஆகியவற்றைச் சமாளிக்க முடியும்


தாய்மைப் பொருளாதார அமைப்பில் ராணுவ தளவாடங்களின் உற்பத்திக்கும் பெருக்கத்திற்கும் இடம் இருக்க முடியாது. செல்வந்தர்களும்,​​ செல்வ வளம் மிக்க நாடுகளும் தங்களைத் தர்மகர்த்தாக்களாகக் கருதி ஏழை எளியவர்களும்,​​ பின்தங்கிய நாடுகளும் உயர உதவ வேண்டும். இல்லையெனில் வன்முறையும்,​​ கொலையும் கொள்ளையும் பெருகுவதுடன் இந்த பூமி விரைந்து வெப்பமடைந்து,​​ தட்பவெப்ப மாறுதல்களும் நிகழ்ந்து மனித சமுதாயம் மிக பயங்கரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்


வெறுப்பும் சோர்வும் கொண்டு அவற்றிலிருந்து விடுபடாமல் இருக்கும் உலகுக்கு இந்தியா வழிகாட்ட வேண்டும் என்றார் காந்தியடிகள் அன்று.
 

இன்றைய காலகட்டத்தில் இப் பணியைச் செய்யாவிட்டால் எதிர்காலச் சந்ததியினர் நம்மை நிந்திப்பார்கள். நாம் நம் கடமையிலிருந்து தவறியவர்களாவோம்.


திரு.ந.மார்க்கண்டன்.
காந்திகிராமம்
கிராமியப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர்)
தினமணி 31-01-2010 அன்று 50 வது நினைவு நாள் தொடர்பாக வெளிவந்த சிறப்பு வெளியீட்டில் வந்த கட்டுரை