Wednesday, May 30, 2012

அக்ரி இன்டெக்ஸ் - 2012


ஆண்டுதோறும் நடைபெறும் அக்ரி இன்டெக்ஸ் இந்த வருடம் இன்று 30-05-2012  புதன் முதல் 03-06-2012 ஞாயிறு வரை கொடீசியா வளாகம் கோவையில் நடைபெறவுள்ளது.
நுழைவுக் கட்டணம்   :  ரூ.30.00

Monday, May 21, 2012

முள்ளு சீதா (Graviola ) புற்றுநோய்க்கு எளிய வைத்தியம் !!!!

முள்ளு சீதா (Graviola )

பெயர்                : முள்ளு சீதா
தாவரவியல் பெயர்   : Annona muricata
மற்ற பெயர்கள்      :  Graviola
                       Soursop,
                       Brazilian Paw Paw,
                       Guanabana.
மாற்று மருத்துவத்தில் மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தவுடன் நிறைய உபயோகமான செய்திகள் வலைதளங்களின் மூலம் பிரபலமாகி வருகிறது. தற்சமயம் முகநூலில் மிகப் பிரபலம் ஃக்ரவயோலா என்று அழைக்கப்படும் முள்ளு சீதா.  அமேசான் காடுகளில் இந்த பழத்தை பழங்குடியினர் பல்வேறு நோய்களை குணப்படுத்த உபயோகித்தனர். ஒரு பன்னாட்டு நிறுவனம் மில்லியன் டாலர்களில் பொருட்செலவு செய்து புற்றுநோய்க்கு இப்பழத்தை உபயோகப்படுத்தி தீர்வு கண்டதாகவும் பின் அதனை காப்புரிமை பெற முடியாததால் ஆய்வை விரிவுபடுத்தாமல் கைவிட்டதாகவும் பின்பு ஆய்வு செய்த விஞ்ஞானிகளில் ஒருவர் இதனை வெளியுலகிற்கு அறிவித்ததாகவும் ஒரு மாற்று மருத்துவ நூலில் படித்தேன். கர்ப்பகாலத்தில் இதனை அருந்தக் கூடாது என்கிறார்கள். தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ள மருத்துவ மரமென்றாலும் சிலர் இதனை அதிகம் சாப்பிடக்கூடாது பக்க விளைவுகள் உண்டு என்கிறார்கள்.
பழத்தின் நீள் வெட்டுத் தோற்றம்

இருப்பினும் நவீன மருத்துவ முறையில் கிமோ தெரப்பி என்னும் சிகிச்சைக்கு பின் உடனடி பக்க விளைவுகள் மற்றும் செலவு இவைகளை கணக்கிட்டால் தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ள முள்ளு சீதா நன்று  என்றே தோன்றுகிறது.
நன்கு வளர்ந்துள்ள முள்ளு சீதா
இம்மரம் அமேசான் காடுகளில் வளரும் ஒரு சிறுமரம். இதன் பட்டை, இலை, பழம் எல்லாவற்றையும் மக்கள் நோய்களை குணமாக்க பயன்படுத்துகின்றனர். பழங்கள் உற்பத்தி குறைவு என்பதாலும் இலைகளிலும் நோய் தீர்க்கும் குணம் இருப்பதால் இதனை பதப்படுத்தி டீ போன்று அருந்துகின்றனர். மற்ற நாடுகளில் வியாபார ரீதியாக விற்பனையில் உள்ளது.
வீட்டில் நன்கு வளர ஆரம்பித்துள்ள முள்ளுசீதா

தற்போதைய உணவு பழக்கம் அளவிற்கு மீறிய இரசாயன மருந்து மற்றும் உரங்கள் இவை புற்று நோய்க்கு வழிவகுக்கின்றது. இதனை குறைப்பதற்கு மாற்று மருத்துவத்தில் வழி உண்டு என்பதை பரம்பரை ஞானமும் விஞ்ஞானமும் சொல்கிறது. எடுத்துக் கொள்வதும், விட்டுவிடுவதும் அவரவர் கையில் உள்ளது.
பதப்படுத்திய ஃக்ரேவையோலா டீ



Saturday, May 19, 2012

பப்பாளி - வீட்டுத் தோட்டதிற்கு ஏற்ற பழ மரம்.

 
பெயர்              : பப்பாளி
தாவரவியல் பெயர் : CARICA PAPAYA 

வெப்பமண்டல நாடுகளில் எளிதாக வளர்க்கப்படும் பழமரம். நல்ல மகசூல் தரும் 2 அல்லது 3 ஆண்டு பயிர். ஆனால் தற்சமயம் மாவுப் பூச்சி(Mealy Bug ) தாக்குதலால் இதன் விவசாயப் பரப்பு வெகுவாக குறைந்து விட்டது. வைரஸ் நோய் தாக்குதலும் உண்டு. பூர்வீகம் மெக்ஸிகோ என்றாலும் எல்லா வெப்பமண்டல நாடுகளிலும் வீட்டுத் தோட்டத்தில் விரும்பி வளர்க்கப்படுகிறது. வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கும் போது பழத்திற்கான வகைளை வளர்ப்பது நல்லது.
பழத்தில் மாவுப் பூச்சியின் தாக்குதல்

இலைகளிலும்  மாவுப் பூச்சியின் தாக்குதல்

 வணிக ரீதியாக வளர்க்கும் போது கவனம் தேவை காரணம் பழத்திற்கான வகைகளும், "பப்பையின்" எனப்படும் பப்பாளி பால் தரும் வகைகளும் உண்டு. பூசா (Pusa)  விவசாய கல்லூரியின் ரகங்கள், வேளாண்மை கல்லூரி, கோவையின் கோ ரகங்கள், பெங்களூரு ரகங்கள் பெண்ட்நகர் ரகங்கள் பிரபலம். தற்சமயம் தைவான்நாட்டு ரகமான ரெட்லேடி (Redlady (F-1 Hybrid)  நகர்புற மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. 10 கிராம் விதையின் விலை ரூ.1600/=க்கு மேல். பப்பாளி பால் எடுக்க கோ.2 கோ.5 மற்றும் கோ.6 ரகங்கள் ஏற்றவை. 
ஒரு அடிக்கு மேல் நீளமுள்ள பழம்

நன்கு வளர்க்க நீர் தேங்காத நல்ல வடிகால் வசதியுள்ள மண் வேண்டும். மேலும் பப்பாளியில் ஆண்மரம், பெண்மரம் மற்றும் இருபால் மரங்கள் உண்டு. இதனையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இரத்த விருத்திக்கும், தசை வளர்ச்சிக்கும் துணை புரியும் பப்பாளி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மிகுதியாக்குகிறது. மலச்சிக்கல் நீக்கும்.  பப்பாளி காயை சமைத்து உண்டு வந்தால் உடல் எடை குறையும். பழசாற்றை நன்கு முகத்தில் பூசி சில நிமிடங்கள் கழித்து கழுவ முகப் பொலிவு கிடைக்கும். பப்பாளி பால் மருந்து, அழகுசாதனப் பொருட்கள், உணவுப் பொருட்கள், மாமிசம் பதப்படுத்துவதிலும் பயன்படுகிறது. பப்பாளிகாய்  டூட்டி புரூட்டி தயாரிப்பில் அதிகம் பயன்படுகிறது. பழம் ஜாம் தயாரிக்க பயன்படுகிறது.

Tuesday, May 15, 2012

சிறுநீரக செயல்பாட்டை திரும்ப பெற இஞ்சி ஒத்தடம் - நமது பாரம்பரிய முறை


சில எளிய மருத்துவ முறைகளை இந்த வலைப்பூவில்  அவ்வப் போது பதிவிடுகிறேன். இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இது திரு. வேல்முருகன் அவர்களின் வலைப்பூவிலிருந்து முழுமையாக எடுக்கப்பட்டது.

இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது. 

கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை. இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் கதையை இங்கு கூறுகிறேன். நான் கதையென்று சொன்னவுடன், ஏதோ கட்டு கதையென்றோ, எங்கெனும் புத்தகத்தில் படித்தது என்றோ நினைக்க வேண்டாம். இது உண்மை, நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை.
 
மதுரையில் எனது பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்றுவிட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs) என்பது தனிக்கதை.
 
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ் (Peritonial dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார். அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர். அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை தந்தைக்கு கூறினார்.

எனது பேராசிரியர் அடிப்படையில் ஒர் ஆய்வாளர் என்பதால், தன் சிறு நீரகத்தையே ஆய்வு பொருளாய் கொண்டு இந்த இயற்கை வழியை பரிசோதித்தார். ஆம் உண்மையிலேயே அவர் ஆய்வுதான் செய்தார், தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து  650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார்.
இஞ்சி ஒத்தடம்:  இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
  1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.
  2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.
  3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.
  4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு, துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.
  5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.
  6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.
  7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.
  8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.
  9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.

பாதத்தின் நான்காம் விரல்: நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார் (மசாஞ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும்.
உணவு முறை
சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.
சோடியம்: உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.
பொட்டாசியம், பாஸ்பரஸ்:  உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.
புரதங்கள் (ப்ரோடீன்): புரதங்கள் மனித உடலுக்கு இன்றியமையாதது. டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழக்கிறார்கள் எனவே அவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஊறவைத்த, முளை கட்டிய  பயிர்கள் மிகச்சிறந்த புரத பொருளாகும்.

நீர்: நீரின்றி அமையாது இவ்வுலகமென்பது போல், நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்திற்க்கு வித்திடும். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை நினைவில் கொள்க.
சேர்த்து கொள்ள வேண்டியவை
ஒமம்: ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.
புளி: புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மஞ்சள்: மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது.
காய்கறிகள்: பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர்.
பழங்கள்: ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணி  
எண்ணெய்: நல்லெண்ணெய், ஆலிவ்
தவிர்க்க வேண்டியவை
காய்கறிகள்: தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு
பழங்கள்: வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள்
English Blog
தமிழ் வலைப்பூ
நன்றி: திரு. பாரி & திரு. வேல்முருகன்
படம் உதவி : வலைதளம்

Friday, May 11, 2012

நோயணுகா நெறிகளும் எளிய முறையில் மூலிகை மருந்துகளும் - இலவச மின்.நூல்


திரு.சு.முத்து அவர்களின் "நோயணுகா நெறிகளும், எளிய முறையில் மூலிகை மருந்துகளும்" என்ற இந்த இலவச மின்.நூல் மிகப் பயனுள்ள ஒன்று. நோய் நம்மை அணுகாமல் எப்படி பாதுகாப்பது, நோய் வந்த பின் எவ்வாறு அதிலிருந்து  குணமாவது, மூலிகைகளால் தீரும் நோய்களும், செய்முறை குறிப்புக்கள், மூலிகைகளின் பட்டியல் மற்றும் தாவரவியல் பெயர் அகர வரிசை என மிக எளிமையாக ஆனால் மிகப் பயனுள்ள முறையில் நாம் புரிந்து கொள்ளும் வகையில் தொகுத்துள்ளார். சிறப்பானதொரு இலவச மின் நூலை நமக்கு அளித்த திரு.சு. முத்து அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும். மின் நூல் பதிவிறக்கம் செய்ய கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்தவும்

Tuesday, May 1, 2012

திரு.தசரத் மான்ஜி – மறக்கபட்டு வரும் நட்சத்திர உழைப்பாளி.


திரு.தசரத் மான்ஜி
 இது ஒருபேரரசன் தன் காதலுக்காக 20000 ட்களை அமர்த்தி 22 ஆண்டுகள் கட்டி எழுப்பி, இன்று ஆயிரக்கணக்கான உலக மக்கள் அதிசயிக்கும் தாஜ்மகால் அல்ல. ஒரு விவசாயக் கூலி தனியொரு மனிதனாய் 22 ஆண்டுகள்  உழைத்து 60 கிராம மக்களின் வாழ்க்கையை எளிமையாக்க வடித்த காதல் சின்னம்.
திரு.தசரத் மான்ஜி  தான் உருவாக்கிய மலைப்பாதை முன்பு.
 பீகாரில் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த திரு.தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாய கூலி. அன்பு மனைவி பாகுனி தேவி வீட்டிற்கு அருகில் மலையின் மறுபுறம் குடிக்கத் தண்ணீர் கொண்டு வரும்போது விழுந்து அடிபட்டார்.  சிறிது நாட்களில் சுகவீனப்பட மலையைச் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் சேர்க்குமுன்பே மனைவி இறந்துபோனாள். இந்த மலையின் குறுக்கே ஒரு பாதை இருந்திருந்தால் தன் மனைவி இறந்துபோயிருக்கமாட்டாள் என்று உறுதியாக நம்பினார் திரு.தசரத் மான்ஜி. கெலார் கிராமத்திலிருந்து வஜீரகஞ்  என்ற ஊர் சுற்றுப் பாதையில் எண்பது கிலோமீட்டர் தூரத்தில்  இருக்கிறது. அங்குதான்  இவர்களுக்கான  மருத்துவ மனை இருந்தது. வஜீரகஞ்க்கு 13  கி.மீ.தொலைவில்  பாதை  அமைக்க முடியும். ஆனால் யாரும் அதை செய்ய முன்வரவில்லை. விளைவு 30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு ஒரு பாதையை உருவாக்கும் பணியை 1959 ஆண்டு மேற்கொண்டார். மக்கள் இவரை பைத்தியகாரனாக பார்த்தார்கள் சேர்ந்து உழைக்கவரவில்லை ஆனாலும் விடாமுயற்சியால் பாதையை 1981 ஆண்டு முடித்தார். 60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று 13 கிலோமீட்டரில் நகரத்தை அடைகிறார்கள். அன்றாடம் 8 கி.மீ தூரம் பள்ளிக்கு நடந்த அக்கிராமத்தின் குழந்தைகள் 3 கிலோ மீட்டரில் இன்று பள்ளியை அடைகிறார்கள். வழக்கம் போல் வாழ்ந்த காலம் வரை அந்த மாமனிதனின் உழைப்புக்கு மதிப்பளிக்காத அரசாங்கம், 18 ஆகஸ்ட் 2007 அன்று இறந்த அவருடைய உடலை மட்டும் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது.


இன்றைய நவநாகரீக மனிதனை எடுத்துக் கொள்ளுங்கள் எல்லாவற்றையும் பணத்தால் கணக்கிட்டு எதை சேமிக்க வேண்டுமோ அதனை சேமிக்காமல் இயற்கையை சுரண்டி தானும் அழிந்து எல்லா ஜீவராசிகளையும்  அழிக்கிறான். இந்த உழைப்பாளர் தினத்தன்று மக்களுக்காக உழைத்த பெரியவர் திரு.தசரத் மான்ஜி அவர்களின் உழைப்பை நினைவுகூர்வதில் இந்த வலைப்பூ மகிழ்ச்சியடைகிறது.