2006 ஆண்டு இஸ்ரேல் நாட்டிலுள்ள பென் கூரியன் பல்கலைக்கழகம் எலுமிச்சம் புல் சாறு அருந்துவதால் இதிலுள்ள “சிட்ரால்” என்னும் வேதிப் பொருளால் புற்று நோய் செல்கள் தற்கொலை (#Apoptosis) செய்து கொள்வதாக கூறியுள்ளனர். அதே சமயம் நல்ல செல்களுக்கு ஒன்றும் ஆவதில்லை என்றும் கண்டறிந்தனர். இதனால் இஸ்ரேல் நாட்டு விவசாயி ஒருவர் எலுமிச்சம் புல் விற்பனையில் பயனடைந்ததாக படித்தேன். நல்ல பயனுள்ள செய்தியாக மனதில் பட்டது எனவே உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எளிதாக தொட்டிகளில் கூட வளர்க்கலாம் என்பது எனது அனுபவம். இதன் எண்ணெய் நமக்கு அந்நியச் செலாவணியை பெற்றுத் தருகிறது. பொதுவாக, வாசனைக்காக இதன் எண்ணெய் சோப்புகளிலும், தரையை துடைக்க உதவும் திரவங்களிலும் பயன்படுத்துவார்கள். தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் சமையலில் பயன்படுத்துகிறார்கள். நானும் எனது நண்பர்கள் சிலரும் தேனீருடன் இதனையும் சேர்த்து அருந்துகிறோம் மிக்க சுவையாகவும், சுறுசுறுப்பையும் தரும். பனிகாலங்களில் இதமாக இருக்கும். சற்று விரிவான வாசிப்பிற்கு கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்.
http://www.israel21c.org/bin/en.jsp?enZone=Health&enDisplay=view&enPage=BlankPage&enDispWhat=object&enDispWho=Articles%5El1272
“புற்று நோயும் கோதுமைப் புல் சாறும்” என்ற எனது பதிவினை படிப்பதற்கு கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்
http://maravalam.blogspot.com/2007/09/blog-post.html
#Apoptosis--noun: a type of cell death in which the cell uses specialized cellular machinery to kill itself; a cell suicide mechanism that enables metazoans to control cell number and eliminate cells that threaten the animal's survival. In other words, cell commits suicide.)
Thursday, April 30, 2009
புற்று நோயும் எலுமிச்சம் புல் சாறும்.
Tuesday, April 28, 2009
மரம் - புகைப்படம்
அலங்காநல்லூர் அருகே இருக்கின்ற இந்த மரம் பார்ப்பதற்கு சாதாரணமாக இருப்பினும் அருகில் சென்று பார்த்தால் சற்று வித்தியாசமாகவும், பிரமாண்டமாகவும் இருக்கின்றது.
அருகே திரு. சட்டையில்லா சாமியப்பன் அவர்கள்.Thursday, April 23, 2009
அறிவைத் (பாரம்பரிய)தேடும் நடைப்பயணம்
2009 மே மாதம் 22 தேதியிலிருந்து 27 வரை அறிவைத்தேடும் நடைபயணம் திருச்சி மாவட்டம் துறையூர் தாலூக்கா பச்சைமலையில் நடைபெறும். இது மணலோடை யிலிருந்து பரத்தால், டாப் செங்காட்டுப்பட்டி வரை 5 நாட்கள் நடைபெறும். குறிப்பாக மூலிகைகள் பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. தாவரவியல் மாணவர்களுக்கும், பாரம்பரிய பச்சிலை வைத்தியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும் பெரிதும் உதவும். விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :-
சித்த வைத்தியர். என்.பி. பெரியசாமி,
பச்சைமலை டிரஸ்ட்
154/ 54 ஏ - தியாகிசிங்காரவேல் தெரு,
துறையூர்
திருச்சி மாவட்டம் 621 010
தொலைபேசி எண் : 04327 - 222426
செல் : 99432 - 34363
பெ. விவேகானந்தன் ( ஆசிரியர் )
நம்வழி வேளாண்மை.
தொலைபேசி எண் : 0452- 2380082 ; 2380943
Wednesday, April 22, 2009
புவி தினம் - ஏப்ரல் 22
மரம் இல்லையேல் மழை இல்லை
மழை இல்லையேல் மனிதன் இல்லை
மனிதன் இல்லையேல் ........??
Monday, April 20, 2009
நாட்டுக் கோழி, ஆடு வளர்ப்பு - ஆலோசனை மற்றும் பயிற்சி.
ஏழை, எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் நாட்டுக் கோழி, ஆடு வளர்ப்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. பாரம்பரியமாக வளர்த்தாலும் அதற்கான உணவு பொருட்களில் மாற்றம், புதிய நோய்கள் (பறவை காயச்சல் போன்றவை), வளர்த்தும் முறைகள், இனம் போன்றவை லாபத்தை நிர்ணயிக்கின்றன. தற்சமயம் மிக லாபகரமாக நாட்டுக் கோழி, ஆடு வளர்ப்பு உள்ளது. ஆனால் அதற்கான வழிகாட்டுதல் ???
அண்மையில் கோவையில் நாட்டுக் கோழி, ஆடு வளர்ப்பு பயிற்சி தருவதற்காக வந்திருந்த திரு.ராஜ் டேனியல் B.Sc அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நீண்ட கால அனுபவமிக்க இவர் காந்திகிராம் கிராமிய பல்கலைகழகம், காந்திகிராம்,(திண்டுக்கல்) கிராம மேம்பாட்டு திட்டங்களில் பணியாற்றியவர். மேலும் பல்வேறு நிறுவனங்களில் ஆலோசகராக, வழிகாட்டியாக, பயிற்சியாளராக, உள்ளார்.
கொட்டில் முறை ஆடு வளர்ப்பு
நாட்டு கோழி வளர்ப்பு ரன் அன்ட் பென் முறை
நாய்கள் வளர்ப்புக்கும் விற்பனைக்கும் பயிற்சி
வெண்பன்றி வளர்ப்பு
புறாக்கள், ஜப்பானிய காடை, இறைச்சி முயல்கள் வளர்ப்பு
போன்றவற்றிலும் அனுபவம் பெற்றவர்.
1983 ஆண்டு புலம்பெயர்ந்த இவர் தமிழக கிராம முன்னேற்றத்திற்கு தன்னை அர்பணித்துள்ளார் என்றால் அது மிகையில்லை. மிக சுறுசுறுப்புடன் பல்வேறு இடங்களுக்கு சென்று பயிற்சி, ஆலோசனை தருகிறார். இருப்பினும் ஏழை, எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் நாட்டுக்கோழி, ஆடு வளர்ப்பு முக்கிய பங்கு வகிப்பதால் இவர் அதற்கு முக்கியத்துவம் தருகிறார். தமிழக கிராமங்கள் இவரது செலவு குறைந்த எளிய வளர்ப்பு முறைகளை சிறப்பாக நடைமுறைப்படுத்தினால் கிராம வேலை வாய்ப்பு மற்றும் முன்னேற்றம் நிச்சயம் உண்டு.
தொடர்புக்கு:-
திரு.ராஜ் டேனியல் B.Sc
50/93, நாயக்கர் புது 2வது தெரு,
கிழக்கு கோவிந்தாபுரம்,
திண்டுக்கல் - 624 001
செல் : 96295 - 78183
Wednesday, April 15, 2009
பயிர்களைத் தாக்கும் பூச்சிகளும் பீடைகளும் - நூல்
அதிக இரசாயன பூச்சி கொல்லிகளை பயன்படுத்தியதால் இயற்கை சமன்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து தீமை செய்யும் பூச்சிகள் வலுப் பெற்றதன் விளைவுகளை விவசாய தற்கொலைகள் விபரமாக அறிவிக்கின்றன. ஆனால் எந்தெந்த பூச்சிகள் எந்தெந்த பயிர்களை தாக்குகின்றன , கட்டுபடுத்தும் முறைகள் பற்றி புத்தகம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென்று தோன்றும். இத்தேடலில் இருந்த போது இத்துறை சாரந்த பேராசிரியர் ஒருவர் எனக்கு பயிர்களைத் தாக்கும் பூச்சிகளும் பீடைகளும் (ஆசிரியர் ஹெச். லிவின் தேவசகாயம்) என்ற நூலை பரிந்துரைத்தார். படித்து பார்த்த பின் ஆசிரியரின் உழைப்பு, அனுபவம், மிக நேர்த்தியாக வரையப்பட்ட பூச்சியினங்களின் படங்கள் நமக்கு பூச்சியினங்கள் பற்றிய தெளிவைத் தருகிறது.
இந்நூல் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது
பகுதி -1: பூச்சிகளின் புறத் தன்மைகள், உள் உறப்புகள், உணவு, கழிவு, சுவாச, இனப்பெருக்க மண்டலங்கள் பற்றியும், பொருளாதார சேதம், கட்டுப்பாடு பற்றி விவரித்துள்ளார்.
பகுதி -2 : தானியப் பயிர்கள், எண்ணெய்வித்துப் பயிர்கள், காய்கறிப் பயிர்கள், பணப் பயிர்கள், கடுகு வகைப் பயிர்கள், கிழங்கு மற்றும் பூண்டு வகைப் பயிர்கள், தோட்டப் பயிர்கள், பசுந்தாள் உரப் பயிர்கள், பூசணிவகைச் செடிகள், பழச் செடிகள், அலங்காரச் செடிகள், மரங்கள் மற்றும் சேமிப்பு தானியங்களை தாக்கும் பூச்சினங்கள் என வகைப்படுத்தி அதனையும் கட்டுப்படுத்த உழவியல், மருந்து மற்றம் உயிரியல் முறைகளையும் விவரித்துள்ளார்.
பகுதி - 3 : பயிர் சிலந்திகள், எலிகள், பறவைகள், நூற்புழுக்கள், நண்டுகள், நத்தைகள் மற்றும் விலங்கினங்கள் பற்றி விவரித்துள்ளார்.
பகுதி - 4 : பூச்சிகளைச் சேகரித்து, நிலைப்படுத்திப் பாதுகாத்தல் பற்றி விவரித்துள்ளார்.
ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திலும் இருக்கவேண்டிய பயனுள்ள நூல்.
விலை : ரூ.235/=
கிடைக்குமிடம் :
M/s. ZION PRINTERS & PUBLISHERS,
91, ARUNACHALAM STREET,
CHINTADRIPET,
CHENNAI -600 002.
PHONE : 044- 28453655, 28453764.
email : zpp@vsnl.com
Monday, April 13, 2009
மாவுப்பூச்சியை உண்ணும் வண்டு -- வீடியோ.
இயற்கை எதிரிகள் இந்த மாவுப்பூச்சிக்கு உண்டு. நாம்தான் இந்த இயற்கை எதிரிகளை இனம் கண்டு அதனைப் பெருகச் செய்து இயற்கை சமநிலையை அடைய முயற்சிக்க வேண்டும். முடிந்த அளவு இரசாயன பூச்சி கொல்லிகளை தவிர்க்க வேண்டும். கீழேயுள்ள ஒரு நிமிட வீடியோ காட்சி.
மாவுப்பூச்சியினால் பயிர்களின் பாதிப்பு - புகைபடம்
ஏரினும் நன்றால் எரு இடுதல், கட்டபின்
நீரினும் நன்றுஅதன் காப்பு. 1038
ஏரினால் நிலத்தை உழுவதைக் காட்டிலும் எருவிடுதல் நல்லது. களைஎடுத்த பின் நீர் பாய்ச்சுவதை காட்டிலும் நல்லது நட்ட பயிர்களை பாதுகாப்பதாகும்.


சென்ற வாரம் நண்பரின் தோட்டத்திற்கு சென்றிருந்தேன். மாவுப்பூச்சியின் பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. தெரிந்தவர்களிடம் கேட்டபோது பொதுவாக வெயில் காலத்தில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றார்கள். ஆனாலும் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதாக தோன்றியது. பப்பாளி, மா, கொய்யா, வாழை, மல்பெரி என எல்லா பயிர்களிலும் இருந்தது.
செம்பருத்தியில் காணப்பட்ட மாவுப்பூச்சி இன்று கள்ளியில் கூட இருக்கின்றது என்றால் அதன் சக்தியை கணக்கிட்டு பாருங்கள். இயற்கையின் சமன் செய்யும் திறனை அழித்தால் முடிவு எல்லா உயிர்களுக்கும் பாதிப்புத்தான். அதில் மனிதன் தன் பேராசை காரணமாக அற்ப பூச்சிகள்தானே என்று இரசாயன கொல்லிகளைக் கொண்டு அழிக்க ஆரம்பித்ததின் விளைவுகளை நாம் லட்சதிற்கும் மேல் விவசாய தற்கொலைகளாக படிக்கிறோம். இரசாயன கொல்லிகளைக் குறைத்து இயற்கை பூச்சிவிரட்டிகள், உயிரியல் முறைகளை உபயோகித்து கட்டுப்படுத்துவோம்.
இவ்வகை பூச்சிகளுக்கு இயற்கை எதிரிகளை கண்டு கட்டுப்படுத்துவோம். உழுது, எரு இட்டு, களையெடுத்து நீர் பாய்ச்சி அறுவடையில் கூட பாதிப்பு. இதற்கு யாரேனும் உதவ முடியுமென்றால் பின்னூட்டமிடுங்கள்.
Sunday, April 12, 2009
18 லட்சம் மக்கள் கலந்து கொண்ட மரம் நடும் விழா.
ஒலிம்பிக் போட்டிகளினால் சுற்றுச் சுழலில் முன்னேற்றம் கண்ட பெஜிங் நகரம் அதனை பராமரித்துக் கொண்டு மேலும் வளர்ச்சியடைய சென்ற ஏப்ரல் 5ம் தேதி 18 லட்சம் மக்கள் தங்களின் ஜனாதிபதி மற்றும் தலைவர்களுடன் சேர்ந்து பெஜிங் நகரப் பகுதிகளில் மரங்களை நட்டியுள்ளனர். சுற்றுச் சுழல் மேம்படவும் பசுமையான தேசமாக மாறவும் 1981 ஆண்டு மரம் நடும் சட்டப்படி 11 - 55 வயதிலுள்ள சீன மக்கள் ஒவ்வொரு வருடமும் 3 லிருந்து 5 மரங்கள் வரை நட்டு வனப் பரப்பை அதிகப் படுத்த முடிவெடுத்துள்ளனர்.
உலக அளவில் சிந்திப்போம், உள்ளூர் அளவில் செயல்படுவோம். மரம் நடுவோம் மழை பெறுவோம். மழை பெறுவோம், வளம் பெறுவோம்.
Thursday, April 9, 2009
கரை ஒதுங்கும் திமிங்கலங்கள் -ஆஸ்திரேலியா
A dead long-finned pilot whale is carried away from a beach after it was stranded on a beach in Hamelin Bay, Western Australia, Monday, March 23, 2009. About 80 whales and dolphins were stranded Monday on a remote southwest Australian beach where authorities plan to truck the few survivors to a protected bay before attempting to launch them back to sea on Tuesday. (AP)
Tuesday, April 7, 2009
நம்வழி வேளாண்மை - காலாண்டு இதழ்.
இன்றைய உலகமயத்தில் பத்திரிகைகள் எந்த துறை சார்ந்ததாக இருந்தாலும் வணிக நோக்கில்தான் தங்கள் சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் வெளிப்படுத்துகின்றன. ஆனால் நம்வழி வேளாண்மை இதற்கு விதிவிலக்கு. எந்தவித விளம்பரமும் இல்லாமல் இயற்கைவிவசாய உத்திகள், அனுபவ மூலிகைவைத்தியம், அடிமட்ட மக்களின் கண்டுபிடிப்புக்கள், பொக்கிஷமான பாரம்பரிய அறிவு, பிராந்திய விதைகள் மற்றும் தாவர வகைகள் என எல்லா பக்கங்களிலும் உபயோகமான செய்திகளை மாத்திரமே தாங்கி வருகின்றது. அவசியம் வாங்க வேண்டிய காலாண்டு இதழ்.
விவசாயிகள் / தனிநபர் வருட சந்தா ரூ.100/= ஆயுள் சந்தா ரூ.1000/=
ஆசிரியர் : பெ. விவேகானந்தன்
நம்வழி வேளாண்மை,
45,டி.பி.எம். நகர்,
விராட்டிபத்து,
மதுரை 625 010.
தொலைபேசி : 0452-2380082; 2380943
Email : vivekseva@dataone.in
================================
இதன் தொடர்பு ஆங்கில இதழ் : Honey bee
Prof. Anil Gupta,
Honey Bee,
Indian Institute of Management,
Vastrapur,
Ahmedabad-380 015
Email: honeybee@sristi.org
Saturday, April 4, 2009
ஆஸ்திரேலியாவின் மர்ரே டார்லிங் நதி படுகை-வீடியோ
ஆஸ்திரேலியாவின் மர்ரே டார்லிங் நதி படுகை பற்றி DW-TV ஒரு வீடியோ காட்சி உங்கள் பார்வைக்காக. பறவைகள், மீன்கள் இல்லாத ஒருநிலை. கடைசி காட்சி என்னை அதிரவைத்தது. மழை இல்லாமல் போனால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை நமக்கு பாடமாக தந்துள்ளார்கள். அவசியம் கடைசிவரை பாருங்கள். முடிந்தால் பின்னூட்டமிடுங்கள்.
Friday, April 3, 2009
ஆஸ்திரேலியாவின் மர்ரே டார்லிங் நதி படுகை
ஆஸ்திரேலியாவின் பதிவு செய்யப்பட்ட 117 ஆண்டு கால வரலாற்றில் கடந்த 7 ஆண்டுகளாக மர்ரே டார்லிங் நதி படுகையில் தொடரும் வறட்சி அந்த பகுதியின் விவசாயத்தை பெருமளவில் பாதித்துள்ளது. சில இடங்களில் சராசரி மழைபொழிவு 1991 ஆண்டிற்கு பிறகு இல்லை என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.பரப்பளவு : சுமார் 1059,000 ச.கீ.மீ
ஆஸ்திரேலியாவின் பரப்பளவில் : 14%
மர்ரே நதியின் நீளம் : 2530 கீ.மீ
டார்லிங் நதியின் நீளம்: 2740 கீ.மீ
ஆஸ்திரேலியாவில் குடியேறிய ஐரோப்பியர்கள் மர்ரே டார்லிங் நதி படுகையில் தங்கள் நாட்டு முறைபடி விவசாயம் செய்ய அந்த பகுதியிலுள்ள சுமார் 15 பில்லியன் மரங்களை அழித்து சிறிய, பெரிய அணைகளை கட்டி விவசாயம் செய்ய ஆரம்பித்தனர்.

தமிழ் நாட்டின் பரப்பளவு: 130,058 ச.கீ.மீ
காவேரி நதியின் நீளம் : 765 கீ.மீ
இரு பருவ மழை. சமயத்தில் கோடைமழை. ஆனாலும் காவிரி டெல்டா பகுதி நீர் பற்றாக்குறையில் தான் இருக்கிறது. இருப்பினும் நீர் அதிகம் தேவைப்படும் நெல்லை மட்டுமே பயிரிடுகிறார்கள். (மர்ரே டார்லிங் நதி படுகையில் நெல் விவசாயம் 98% குறைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.) பண்ணைகுட்டைகள் அமைத்து நீர் சிக்கனத்தையும், குறைந்த அளவிலாவது மரங்களை வளர்த்து மழையையும் பெற மக்கள் முயற்சித்தால் நிலைமை மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. இல்லையேல் இயற்கை தீர்ப்பு எழுத ஆரம்பிக்கும் போது “பணத்திற்கும் பொருட்களுக்கும் இயற்கையிடம் மதிப்பு இல்லை” என்பதே காலதேவன் சொன்ன உண்மை.
உலக அளவில் சிந்திப்போம். உள்ளூர் அளவில் செயல்படுவோம்.
Source: National Geographic April 2009
Thursday, April 2, 2009
விழுதுகள்.








