Friday, April 3, 2009

ஆஸ்திரேலியாவின் மர்ரே டார்லிங் நதி படுகை

ஆஸ்திரேலியாவின் பதிவு செய்யப்பட்ட 117 ஆண்டு கால வரலாற்றில் கடந்த 7 ஆண்டுகளாக மர்ரே டார்லிங் நதி படுகையில் தொடரும் வறட்சி அந்த பகுதியின் விவசாயத்தை பெருமளவில் பாதித்துள்ளது. சில இடங்களில் சராசரி மழைபொழிவு 1991 ஆண்டிற்கு பிறகு இல்லை என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.

பரப்பளவு : சுமார் 1059,000 ச.கீ.மீ
ஆஸ்திரேலியாவின் பரப்பளவில் : 14%
மர்ரே நதியின் நீளம் : 2530 கீ.மீ
டார்லிங் நதியின் நீளம்: 2740 கீ.மீ

ஆஸ்திரேலியாவில் குடியேறிய ஐரோப்பியர்கள் மர்ரே டார்லிங் நதி படுகையில் தங்கள் நாட்டு முறைபடி விவசாயம் செய்ய அந்த பகுதியிலுள்ள சுமார் 15 பில்லியன் மரங்களை அழித்து சிறிய, பெரிய அணைகளை கட்டி விவசாயம் செய்ய ஆரம்பித்தனர்.
மரங்களற்ற நிலங்கள்
வருடங்கள் செல்ல செல்ல இயற்கை தனது தீர்ப்பை (மரங்கள் இல்லையேல் மழை இல்லை, மழை இல்லையேல் மனிதன் இல்லை) எழுத ஆரம்பித்துள்ளது. வறட்சியின் காரணமாக நிலமும் உவர்நிலமாக மாற ஆரம்பித்துள்ளது. விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டவர்கள் தங்களின் வாழ்நாள் உழைப்பான கால்நடைகளையும், பண்ணைகளையும் விற்க வேண்டிய நிலைமையில் உள்ளனர். சிலர் தங்களது அரிய பழமரங்களை அழித்து அவசியமானதை மட்டும் வைத்துள்ளனர்.

தமிழ் நாட்டின் பரப்பளவு: 130,058 ச.கீ.மீ
காவேரி நதியின் நீளம் : 765 கீ.மீ

இரு பருவ மழை. சமயத்தில் கோடைமழை. ஆனாலும் காவிரி டெல்டா பகுதி நீர் பற்றாக்குறையில் தான் இருக்கிறது. இருப்பினும் நீர் அதிகம் தேவைப்படும் நெல்லை மட்டுமே பயிரிடுகிறார்கள். (மர்ரே டார்லிங் நதி படுகையில் நெல் விவசாயம் 98% குறைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.) பண்ணைகுட்டைகள் அமைத்து நீர் சிக்கனத்தையும், குறைந்த அளவிலாவது மரங்களை வளர்த்து மழையையும் பெற மக்கள் முயற்சித்தால் நிலைமை மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. இல்லையேல் இயற்கை தீர்ப்பு எழுத ஆரம்பிக்கும் போது “பணத்திற்கும் பொருட்களுக்கும் இயற்கையிடம் மதிப்பு இல்லை” என்பதே காலதேவன் சொன்ன உண்மை.

உலக அளவில் சிந்திப்போம். உள்ளூர் அளவில் செயல்படுவோம்.
Source: National Geographic April 2009

No comments: