Wednesday, November 10, 2010

சில ஆப்பிரிக்க நாடுகளில் (Sub-Saharan Africa ) மழைநீரை மட்டுமே நம்பி நடக்கும் இயற்கை விவசாயம். மழையளவு 200 மிமீ முதல் 300 மிமீ.

திருமதி. V. மஞ்சுளா M.Sc., M.Phil.
படிப்பதிற்கு ஏதோ கதை என்று நினைக்கத் தோன்றும். செப்டம்பர் மாதம் எரிடீரியா (வடகிழக்கு ஆப்பிரிக்கா ) நாட்டின் ஹமெல்மாலோ விவசாய கல்லூரியில் பணியாற்றும் திருமதி. V. மஞ்சுளா M.Sc., M.Phil. அவர்களின் ஆப்பிரிக்க விவசாயம் பற்றிய உரையையும் பின்பு அதைப் பற்றி உரையாடவும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களது விவசாய முறை எளிமையாகவும் உபோகமாகவும் இருப்பதால் முக்கியமானவைகளை மாத்திரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
மரங்களுடன் கூடிய விவசாயம்
இயற்கை  மற்றும் வாழ்கை முறை :

சஹாரா பாலைவனத்தின் தாக்கம் (Sub-Saharan Africa )இருப்பதால் இந்த பகுதிகள் மிகுந்த வறட்சியுடன் மழையளவு மிக குறைவாக உள்ளது. ஆனால் விவசாயமும் நடைபெறுகிறது. பொதுவாக ஆண்கள் கட்டாய இராணுவ சேவைகளுக்கு செல்வதால் 95% பெண்களாலும் குழந்தைகளாலும் விவசாயம் பராமரிக்கப்படுகிறது. பொருளாதார சிக்கல்கள் இருப்பதால் செயற்கை உரம், பூச்சிக் கொல்லி தவிர்க்கபடுகிறது. விதைகளும் பாரம்பரிய முறைபடி சேமிக்கப்பட்டு உபயோகப்படுத்தபடுகிறது. உழவு செய்யப்படுவதில்லை. மூடாக்கு வெகுவாக உபயோகத்தில் உண்டு. பணப் பயிர் இல்லை. கிடைக்கின்ற மழை நீரை பல முறைகளில் சேமித்து பல்வேறு பயன்கள் தரும் மர வளர்ப்பை மையமாக வைத்து விவசாயம் செய்கிறார்கள்.
மரங்களுக்கிடையே உணவுப் பயிர்கள்
குறிப்பிட்ட அகலத்திற்கு மரங்களை நட்டு இடையே உணவு பயிர்களை ( Alley Cropping )பயிர் செய்கிறார்கள். அதுவும் தனிப்பயிராக (Mono Crop) இல்லாமல் பல வகை (Mixed Crops) பயிர்களை சுழற்சி முறையில் செய்கிறார்கள். மரத்தின் இலைகளும், குச்சிகளும் மூடாக்கு இட பயன்படுகிறது பின்பு அதுவே உரமாகின்றது.


விதைகளைக் கூட ஜேப் ப்ளான்டர் ( Jab Planter ) என்ற எளிய கருவி மூலம் உரத்துடன் விதைக்கிறார்கள்.
இது ஏறக்குறைய 17 வது நூற்றாண்டில் தென் அமெரிக்காவில் புழக்கத்தில் இருந்ததின் நவீன வடிவம். எண்ணிப் பார்த்தால் 925 -950 மிமீ மழை பெறும் தமிழகத்தில் விவசாயம் போராட்டமாக மாறியுள்ளது. பலருக்கும் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கும் பின்னூட்டம் மூலம் தெரிவித்தால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்.
PHOTOS SOURCE : Mrs. V. Manjula M.Sc.,M.Phil

8 comments:

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள்
நமக்கு ஆற்று நீர் பாசனம் (காவிரி, தாமிரபரணி, பெரியார்) இயற்கையாகவே கிடைப்பதால் (ஆற்று நீரும் மலை மூலமே கிடக்கிறது)
நாம் ஆற்று பாசனத்தை பயன்படுத்துவதில் என்ன தவறு.

நமது விவசாய முறையில் தவறு இல்லை. விவசாயிகளிடம் சேமிப்பு, முதலீடு, வியாபார அறிவு குறைவு . பணம் வந்ததும் மதுக் கடைகளுக்கு ஓடி விடுகின்றனர்.

மரா said...

நல்ல பல தகவல்கள்.நன்றி.

‘ஜேப் ப்ளான்டர்’ என்ன பிரமாதம், வாக்கிங் ஸ்டிக்காலயே தினமும் நடைபயணம் போகும்போது எடுத்துக்கிட்டு போய் அங்கங்க குத்தி குத்தி விதைய புதைச்சு ஒரு முழு காட்டையே ரெடி பண்ணியிருக்காங்க.

nerkuppai thumbi said...

தமிழகத்திலும் இதைப் போல மழை நீரை மட்டும் நம்பியே கூட நல்ல முறையில் விவசாயம் செய்ய முயற்சிக்கலாம். ஆனால், அதற்கு, நன்செய்/அரிசி/காவிரி இவற்றை விட்டு வெளியே ஆலோசிக்க வேண்டும். அப்படி வாதம் செய்ய எவரேனும் முன் வந்தால், தமிழின விரோதி, கர்நாடக சொம்பு தூக்கி என பேசத் துவங்குகிறார்கள்.
ஒன்று: விவசாயம் கற்றவர்கள், விவசாயத்தை மட்டுமே நம்பி இராமல் ஓரளவு பண வசதி உள்ளவர்கள், தன்னார்வ நிறுவனங்கள், அரசு உதவியுடன் கூட்டுறவு சங்கங்கள் முதலியன கொஞ்சம் வேறு முறைகள், வேறு பயிர்களை முயலலாம். அதைப் பார்த்து சராசரி விவசாயிகளும் பின்பற்றுவார்கள். அரசு விவசாய அலுவலர்கள், பஞ்சாயத்து அலுவலர்கள் இதை பரப்ப வேண்டும்.

Anonymous said...

வணக்கம் இக்காலத்தில் நமக்குத் தேவையான தகவல்.

இத்தகவலை இங்கேயும் http://meenakam.com/2010/11/10/13558.html மீள்பிரசுரம் செய்துள்ளேன்.

உங்கள் வலைப்பூவினை www.meenakam.com/topsites இல் பதியவும்

ஈரோடு கதிர் said...

நல்ல தொரு பகிர்வு

திருமதி.மஞ்சுளா அவர்களின் மின் மடல் முகவரி கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்

வின்சென்ட். said...

திரு. ராம்ஜி

உங்கள் வருகைக்கு நன்றி. மழை பொழிவு குறைதல், நிலத்தடி நீர் மேலும் கீழே செல்கிறது. மக்கள் தொகை 1.5 பில்லியன் 2050 இருக்கும் என கணக்கிட்டுள்ளனர். அனைவருக்கும் உணவிடவேண்டும். சுருங்கி வரும் விளைநிலங்கள் கொண்டுதான் செய்யவேண்டும். அதில் சரி, தவறு என்பதைவிட குறைந்த நீரில் அதிக உற்பத்திக்கு நிலைத்த விவசாய மாதிரியை பகிர்ந்துள்ளேன். குறைந்த பட்சம் விவசாய தற்கொலைகளாவது குறையட்டும் என்ற ஆதங்கம்.
=================================
திரு.மரா

உங்கள் வருகைக்கு நன்றி. ‘ஜேப் ப்ளான்டர்’ பற்றி குறிப்பிட காரணம். நிலத்தை உழுது அதனால் மண்ணின் ஈரத்தன்மை போய்விடக் கூடாது என்பதற்குத்தான். மூடாக்கினுள் ஈரத்தன்மை பாதுகாக்கபடும். நீங்கள் குறிப்பிடும் காடு (ஆனைமலை டாப் சிலிப்) பகுதியில் தேக்குமர காடுகளை உருவாக்கியதாக கூறுவார்கள். அங்கு மழைப் பொழிவு அதிகம்.
===================================
திரு.நெ.தும்பி

உங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் கருத்துக்கள் யதார்த்தமான உண்மைகள்.

==================================
திரு. அனானி

உங்கள் வருகைக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி.
=================================
திரு. கதிர்
உங்கள் வருகைக்கு நன்றி. விரைவில் மின் மடல் முகவரி பெற்றுத் தருகிறேன்.
==================================

Pattu said...

மனதிற்கு உக்கமளிக்கும் பதிவு. மஞ்சுளா அவர்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

வின்சென்ட். said...

M/s Pattu

உங்கள் வருகைக்கு நன்றி.அறிமுகம் தந்த மஞ்சுளா அவர்களுக்கும் நன்றி.