Thursday, December 17, 2009

கோபன்ஹேகன் மாநாடு - மாற்றமும் ஏமாற்றமும்.

கோபன்ஹேகன் மாநாட்டை கலக்கிய பேச்சு உலகின் 4 வது மிக சிறிய தீவுகள் நாடான “துவாலு” நாட்டின் பிரதிநிதி திரு.இயன் ப்ரை அவர்களுடையது. பேச்சை முடிக்கும் முன் அழுதபடி எங்கள் நாட்டின் தலைவிதி உங்கள் கையில் என்ற யதார்த்தமான உண்மையை கூறி முடித்தவுடன் கைதட்டல் அடங்க சற்று நேரம் ஆனது. கடல் மட்டத்திலிருந்து அதிகபட்ச உயரமான இடம் சுமார் 4.5 மீட்டர் கொண்ட நாடு துவாலு. பெரிய அலைகள் வந்தால் நிலைமை மிக மோசமாகிவிடுகிறது. மக்கள் தொகை சுமார் 11,000. பரப்பளவு சுமார் 26ச.கி.மீ. மக்கள் வெளியேறி நியுசிலாந்து போன்ற நாடுகளில் குடியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

திரு.இயன் ப்ரை அவர்களின் பேச்சு.


இதுபோன்ற உலக மாநாடுகளில் வளர்ந்த நாடுகள் நிதியுதவி, ஆயுத உதவி, மிரட்டல் போன்றவற்றால் ஏழை மற்றும் வளரும் நாடுகளை தங்கள் விருப்பத்திற்கு இணங்க வைத்து தங்கள் உல்லாச வாழ்விற்கு பங்கம் வராமல் காத்துக் கொண்டனர். ஆனால் ‘தோகா’ மாநாட்டிலிருந்து நிலைமை மாறி வருவது மகிழ்ச்சியை தருகிறது. இந்த மாநாட்டில் ஒரு மிகச்சிறிய நாடுகூட அதன் உண்மைநிலையை கூறி நியாயம் கேட்டதும் அதன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாடத்தை நடத்தி பணக்கார நாடுகளை சிந்திக்க வைத்ததும் நல்ல மாற்றம்.

தொழிற்புரட்சி என்று 1850ம் ஆண்டு முதல் வாயு மண்டலத்தில் குவிக்கப்பட்டுள்ள கார் பன் டை ஆக்ஸைடு (கரியமிலவாயு) கழிவுகளில் 4 ல் 3 பங்கை பணக்கார நாடுகளே வெளியேற்றியுள்ளன. மேலும் அணுகுண்டு, 2 உலகப் போர்கள், மற்ற நாடுகளை சுரண்ட பொய்யைக் கூறி போரில் ஆரம்பித்து உலகை மாசுபடுத்தியதும் இந்த பணக்கார நாடுகளே. எனவே, பிரச்சனைக்குத் தீர்வு காண முன்கை எடுக்க வேண்டியது பணக்கார நாடுகளே. ஆனால் கியுட்டோ ஒப்பந்தத்தை ஒதுக்குவதில் அவைகள் முனைந்திருப்பது பெரிய ஏமாற்றம்.

இருக்கின்ற இருநாட்களில் இந்த புவியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முடிவுகளை எடுக்க மாநாட்டில் கலந்து கொண்டுள்ள தலைவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதனை துஷ்பிரயோகம் செய்யாமல் நல்லமுடிவுகள் எடுக்கப்பட இவ்வலைப் பூ விரும்புகிறது.

6 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லது நடக்க ப்ரார்த்திக்கிறேன்..

வின்சென்ட். said...

திருமதி.முத்துலெட்சுமி

உங்கள் பின்னூட்டம் நீண்ட நாட்களுக்கு பின் வருகிறது. வருகைக்கும்,பிராத்தனைக்கும் நன்றி. நல்லது நடந்தால் மட்டுமே வருங்கால குழந்தைகள் வாழமுடியும்.

Anonymous said...

creating this blog is very good job ,iam really impressed

வின்சென்ட். said...

திரு.அனானி

உங்கள் வருகைக்கும்,"iam really impressed"
மிக்க நன்றி.

சதுக்க பூதம் said...

வளர்ந்த நாடுகள் மாற்று எரி சக்தி கொண்டு எவ்வாறு வியாபார ரீதியாக பயனடைவது என்று தான் பார்க்கின்றனர். அவர்கள் தாங்கள் ஏற்படுத்திய பிரச்சனைக்கு தார்மீக பொறுப்பு ஏற்று அதை சரி செய்ய முழுவதும் பணம் செலவிட முன்வரவில்லை. ஒபாமாவே இதர்கு ஒப்பு கொண்டாலும் பின்னால் வரும் அதிபர்கள் அதை தொடர்வார்களா என்பது சந்தேகமே. வளரும் நாடுகள் தங்களுடைய வளரும் மக்கள் தொகை மற்றும் வளரும் நடுதர வர்க்கத்தால் அதிக கார்பன்டை ஆக்சைடை வெளியிடுவதை தவிர்க்க முடியாது. புவி வெப்பமயமாதலால் இந்திய விவசாயம் அதிகளவு பாதிக்கும் மற்றும் ரஸ்ய,சீன மற்றும் அமெரிக்க விவசாயம் நன்மை அடைய வாய்ப்பு உள்ளது என்னும் அராய்ச்சி முடிவு மிகவும் கவனிக்க தக்கது

வின்சென்ட். said...

திரு.சதுக்க பூதம்

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.நீங்கள் கூறுவது உண்மை.

"வளர்ந்த நாடுகள் மாற்று எரி சக்தி கொண்டு எவ்வாறு வியாபார ரீதியாக பயனடைவது என்று தான் பார்க்கின்றனர். அவர்கள் தாங்கள் ஏற்படுத்திய பிரச்சனைக்கு தார்மீக பொறுப்பு ஏற்று அதை சரி செய்ய முழுவதும் பணம் செலவிட முன்வரவில்லை."

அவர்கள் தங்கள் ஆடம்பர வாழ்கையை குறைத்துக் கொள்ளாமல் குறைந்த அளவு பணத்திற்கு ஏழை நாடுகளை "பயோ டீசல்" உற்பத்தி என காட்டாமணக்கை அறிமுகம் செய்து மேலும் குழப்பத்தையே உருவாக்குகின்றனர்.