Sunday, June 8, 2014

“தோட்டக்கலை சிகிச்சை” (Horticultural Therapy )



தோட்டக்கலை என்பது வெறும் காய்கறிகள் | பழங்கள் | மலர்கள் | அழகுச்செடிகள் உற்பத்தி, பொழுதுபோக்கு, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு, அந்தஸ்து என்ற வழக்கமான நிலைகளைத் தாண்டி வயதானவர்கள், குழந்தைகள், மனநோயாளிகள், மன இறுக்கம், தனிமை, திக்கற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், குறிப்பிட்ட பழக்கங்களுக்கு அடிமையானவர்கள், இழப்பை சந்தித்தவர்கள், வாழ்கை மாற்றத்தை அடைந்தவர்கள், விபத்தில் ஊனமானவர்களுக்கு மிக மிகச்சிறப்பானது இந்த “தோட்டக்கலை சிகிச்சை” (Horticultural Therapy ) முறையாகும்.

இன்றைய அதிவேக வாழ்கை முறை, தவறான உணவுப்பழக்கம், வேலைப்பழு, இரவு வேலை நேரம், நெரிசல் மிக்க நீண்ட பயணம், கடுமையான அலுவலக உழைப்பு போன்றவை  சாதாரணமானவர்களை  அதிக மன உளச்சல் /உடல் சோர்வு | மனஅழுத்ததிற்கு இட்டுச் செல்கிறது. அதற்கு எளிய ஆனால் சிறப்பான தீர்வு “தோட்டக்கலை சிகிச்சை” முறை என்றால் அநேகருக்கு ஆச்சரியம் தரலாம். இன்றைய வாழ்வியல் முறையில் . “நமக்கு நாமே” தீர்வு என்று இரசாயன உற்பத்தியை தவிர்த்து இயற்கை முறையில் தோட்டக்கலையை சிகிச்சையாக செய்ய ஆரம்பித்தால் குடும்ப ஆரோக்கியத்தை காப்பதோடு நோயற்ற மகிழ்ச்சியான குடும்ப வாழ்வை வாழலாம்.

அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் கையொப்பம் இட்டவரும், “அமெரிக்காவின் மனநல மருத்துவதின் தந்தை” என்று புகழ் பெற்றவரும், பல்துறை வல்லுனருமான Dr. பெஞ்சமின் ரஷ் என்பவர் 1798 ஆண்டுகளில் மனநலம் குன்றியவர்களுக்கு “தோட்டக்கலை” மூலம் சிகிச்சை தருவதால் அவர்களின் மன நிலையை மேம்படுத்தலாம் என பதிவு செய்தார். பின்பு 1800 களில் ஸ்பெய்ன் நாட்டில் மனநல மருத்துவமனைகளில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. உலகப் போருக்குப் பின் வயதான, ஊனமுற்ற போர்வீரர்களுக்கு தோட்டக்கலை சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று வளர்ந்த நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முறையாக “தோட்டக்கலை சிகிச்சை” உருவெடுத்துள்ளது. தொழில் முறையில் தோட்டக்கலை மூலம் சிகிச்சை மருத்துவ மனைகள், காப்பகங்கள், வயதானவர்கள் தங்கும் விடுதிகளில் நடைபெறுகிறது.

இதனால் பெறப்படும் நன்மைகள்.

வயதானவர்களுக்கு உடல் ரீதியாக  வலிமை, ஆற்றல், சுறுசுறுப்பான நடமாட்டம்,  நல்ல கண்-கை தொடர்பு (hand-eye coordination) ஆகியவற்றில் முன்னேற்றம் காணலாம். மன அழுத்தத்தை குறைத்து மன வலிமையையும், நம்பிக்கையையும் தரும்.

பார்த்தல், தொடுதல், நுகர்தல், சுவைத்தல் மூலம் குழந்தைகள் | மனநலம் குன்றியவர்களின் இயற்கை புரிதலை மேம்படுத்தும். கவனம், மனதை ஒரு முகப்படுத்துதல், முன்னேற்றம், புதிய நுட்பத்தை மனம் நாடுதல், நல்ல திட்டமிடுதல், பிரச்சனைகளுக்கு தீர்வு, ஞாபக சக்தியை அதிகரித்து நல்ல மனப்பான்மையையும் குழந்தைகளிடம் ஏற்படுத்தித் தரும்.
சமூக ரீதியாக மக்களிடையே நல்ல தொடர்பு கிட்டும், நமது கூட்டுக் குடும்ப முறையில் சுமுகமான உறவு பலப்படும்.
புதிய நுட்பம்

தோட்டக்கலை என்பது தாவரங்கள் மட்டுமின்றி நீரின் முக்கியத்துவம், நீர் மேலாண்மை, பறவைகள், மிருகங்கள், பூச்சியினம், பட்டாம் பூச்சி, நோய் மற்றும் அதன் நிர்வாகம், உர மேலாண்மை என பல உட்பிரிவுகளைக் கொண்டது. எனவே பல்வேறு துறைகளில் நமது கவனம் திருப்பப் படுவதால் நிறைய துறைகளில் அனுபவம் கிடைக்கிறது.


பல ஆயிரம் வருடங்களாக இருந்த வந்த “பாட்டி வைத்தியம்” கூட இந்த “தோட்டக்கலை சிகிச்சையின் ஒரு அங்கம் எனலாம். சென்ற 30 வருடங்களில் ஏற்பட்ட மருத்துவ மாற்றம் இந்த பரம்பரை ஞானத்தை இளம் தலைமுறையினரிடம் குறைத்துவிட்டது, பல மருத்துவ தாவரங்கள் அழிந்து வருகின்றன அவைகளை மீட்டெடுத்து பின்விளைவுகளற்ற வைத்தியமும், ஞானமும், மருத்துவ தாவரங்களும் காப்பாற்றப்பட்டு அடுத்த தலைமுறைக்கு வேண்டுமானால் தோட்டக்கலை அவசியம் தேவை.


2 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு sir. குங்குமம் தோழியிலும் வாசித்தேன்.

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.