Friday, October 1, 2010

பொன் முட்டையிடும் வாத்து.

பொன் முட்டையிடும் வாத்தை பேராசையால் அறுத்து கொன்ற கதையை இளவயதில் படித்திருக்கிறோம். அதற்கும் “டோங்க்ரியா கோண்ட்” பழங்குடியினர் தெய்வமாய் வணங்கும் நியமகிரி மலையை விழுங்கத் துடிக்கும் வேதாந்தா பாக்ஸைட் சுரங்க நிறுவனத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.


ஒருபுறம் காடுகள் 33% இருக்கவேண்டும் என்று கூறிக் கொண்டே மறுபுறம் இன்றைய பொருளாதார கொள்கைகளின்படி நடக்கும் அரசு எந்திரங்கள். அடுத்த உலகப் போர் “தண்ணீருக்காக” இருக்கும் என்று கூறிக் கொண்டே காடுகளை அழித்து மழையின்றி போவதற்கும், மழைவந்தால் வெள்ளபெருக்கு ஏற்படவும் பன்னாட்டு நிறுவனங்கள், வல்லரசுகள், பெரிய நிதி நிறுவனங்கள் செயலாற்றுவதும் அதனை “பொருளாதார வளர்ச்சி ” என்று திரு.பொதுஜனத்தை நம்ப வைப்பதும், அவர்களும் நம்பி ஏமாற்றமடைந்ததும் எல்லா நாடுகளிலும் நிகழ்த்தியிருப்பதும் வரலாறு. இந்த நூலை படியுங்கள்.

“ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்”-- திரு. ஜான் பெர்கின்ஸ்.

அரசு இந்த முறை வேதாந்தா பாக்ஸைட் சுரங்க நிறுவனத்திற்கு அனுமதி மறுத்ததை இன்னும் கூட நம்பமுடியவில்லை. அடர்த்தி நிறைந்து மழைப் பொழிவைத் தரும் அந்த மலைக்கும் அதன் பூர்வக்குடிகளுக்கும் தற்சமயம் பிரச்னை இல்லை என்பது மனநிறைவைத் தருகிறது. இந்த அனுமதி மறுப்பு நிரந்தரமாக இருக்க வேண்டுமானல் பள்ளிக் குழந்தைகளுக்கு காடுகளின் அவசியத்தையும் பூர்வக்குடிகளின் வாழ்கை முறையையும் புரிய வைப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

11 நிமிட படத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்

I can’t be told by anyone how to live. If  I said to The Minister "Move from your Home" he would think I was mad. Bushman : Botswana

Friday, September 24, 2010

பிறர் நலம் நோக்கும் திரு. வெ. தலைமலை நாடார்.

திரு. வெ. தலைமலை நாடார்.
வயதானவர்கள் கிராமபுறங்களில் பேருந்துக்காக காத்திருக்கையில் நிழல் பகுதி சாலையின் எதிர்புறம் இருந்தால் அங்கு அமர்ந்து பேருந்து வரும்போது அவசர அவசரமாக திரும்பும் போது கால் இடறி சாலையில் விழுவது பொதுவாக நடக்கும் ஒரு செயல். இதே நிகழ்ச்சி பத்தாண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம் “தேவிபட்டினம் விளக்கு” பகுதியில் ஒரு வயதான பாட்டிக்கு நிகழ்ந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்த சைக்கிளில் சென்று பேப்பர் வியாபாரம் செய்யும் அந்த மனிதரின் எண்ணத்தில் சாலையின் இந்த புறத்திலும் மரம் இருந்திருந்தால் பாட்டி விழுந்திருக்கமாட்டார்கள் என்ற சிறு விதை விழுந்தது.
தேவிபட்டினம் விளக்கு பகுதி மரம் வளர்ந்த பின்பு.
உடனே செயல்பட ஆரம்பித்தார். அந்த இடத்தில் மரங்களை நட்டு வளர்க்க ஆரம்பித்தார். பின்னாட்களில் வியாபாரத்தை வெற்றிலைக்கு மாற்றினார். ஆனால் மரம் நடும் பணியை மாத்திரம் மாற்றாமல் தொடர்ந்து எல்லா இடங்களிலும் செய்து வருகிறார். மனைவியும் ஆதரவு தர சொந்த செலவில் தண்ணீர் ஊற்றுவதற்கு கூலியாள் வைத்து தண்ணீரை எடுத்துச் செல்ல ஒரு வண்டியையும் ஏற்பாடு செய்தார். இன்று அந்த தம்பதியினருக்கு 10,000க்கும் அதிகமான குழந்தைகள் அவர் தெற்கு தேவதானம் ஊரை சேர்ந்த திரு.வெ. தலைமலை நாடார் அவர்கள். உழைப்பால் உயர்ந்தவர் சமூக பணியில் தோய்வேயில்லை. சென்ற மாதம் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சுற்றுச்சுழல் பற்றிய அவரது ஆழ்ந்த ஞானம் மகிழ்ச்சியை தந்தது. பரபரப்பு நிறைந்த இன்றைய உலகில் பணத்தை பற்றி மாத்திரமே பேசும் பல்வேறு மனிதர்களை விட்டு இவர்களைப் போன்று தன் நலம் பார்க்காமல் பிறர் நலம் நோக்கும் மனம் படைத்த நல்ல மனிதர்களை சந்திக்கும் போது வாழ்கையின் அர்த்தம் புரிகிறது. பல்வேறு விருதுகள் பெற்றிருக்கும் இவர் மேலும் அரிய பெரிய விருதுகள் பெற்று மர வளர்ப்பில் மேலும் சாதனை செய்ய இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.


தொடர்பிற்கு:
திரு. வெ. தலைமலை நாடார் (வெற்றிலை வியாபாரம்)
தெற்கு தேவதானம்
இராஜபாளையம் தாலூக்கா
விருது நகர் மாவட்டம்

அலைபேசி : 93632 62808


Tuesday, September 14, 2010

தமிழகத்தை பசுமைப்படுத்தும் முயற்சியில் திரு. மரம் K. கருணாநிதி

நாற்றுக்களை வினியோகிற்க தயாராகும் திரு. கருணாநிதி.
விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் சிலர் எல்லோரும் நலமுடன் வாழ தங்கள் சக்தியையும் தாண்டி சிறப்பாக பொது சேவையில் நம்மை வியக்க வைக்கின்றனர். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இவர்கள் செய்யும் சேவை மகத்தானது. அந்த சிலரில் ஒருவர் திரு.மரம் K. கருணாநிதி.. மிகவும் பொறுப்புடன் அதிக கவனமாக செய்யவேண்டிய பேருந்து ஓட்டுனர் பணியை செய்கிறார். கிடைக்கின்ற ஒரு நாள் ஓய்வையும், விடுமுறை நாட்களையும் மரம் நடுவதில் செலவிடுகிறார். கூடவே சொந்த செலவில் (மாதம் 4 இலக்க அளவில்) மரக் கன்றுகளையும் வாங்கி இலவசமாக வினியோகித்து தமிழகத்தில் ஒருபுரட்சியை உருவாக்கி வருகிறார். மூச்சு, பேச்சு என்று எல்லாமே மரத்தைப் பற்றி மாத்திரமே. ‘விதை சேகரிப்பு’ செய்து பள்ளிக் குழந்தைகளுக்கு கொடுத்து ஆர்வத்தை குழந்தைகளிடம் வளர்க்கிறார். கோடி மரங்கள் நடுவதை லட்சியமாகவும், திருமதி. வாங்கரி மத்தாய் அவர்களை சந்திப்பதை ஆசையாகவும் வைத்திருகிறார்.
குடும்பத்தினருடன் திரு. கருணாநிதி.

இந்த நவீன “எல்லாமே பணம்தான்” பொருளாதாரத்தில் ஓய்விற்கு வெளிநாட்டுச் சுற்றுலா அல்லது ‘குளு குளு ஊர்கள்’ என்று மெத்தப் படித்தவர்களும் பணம் படைத்தவர்களும் சமூக பொறுப்புக்களை தவிர்த்து வாழ்கையை அனுபவிக்க, இவர்கள் தங்கள் வாழ்நாள் இலட்சியமாக எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி சமூகத்தில் பெரிய மாறுதலுக்கு வித்திடுகின்றனர். விருதுகளுக்காக அலையும் கூட்டத்தில் இவர்களைத் தேடி விருதுகள் (தேசிய, மாநில விருதுகள்) வருவதில் ஆச்சரியம் இல்லை. லட்சக் கணக்கான மரக் கன்றுகளை நட்டுப் பராமரித்தும், வினியோகம் செய்தும் சாதனை செய்யும் இவரை மேலும் விருதுகள் வந்தடையவும் இவரைப் போன்று மேலும் பலர் உருவாகவும் இந்த வலைப்பூ வாழ்த்துகிறது.

திரு. மரம் K. கருணாநிதி
எண் : 4  கடைவீதி
சங்கீதமங்கலம்  ( அஞ்சல் )
விழுப்புரம் மாவட்டம்

அலைபேசி : 93661 09510,  97878 76598


 
மேலும் இவர்களைப் பற்றியும் படியுங்கள்.