Sunday, October 9, 2011

நைஜீரிய கவிஞர் கென் சரோ விவா- சுற்றுச் சுழல் போராளி.


 நமது நிலத்தைக் காக்கும் இந்தப் போராட்டத்தில் ஒன்று நாம் வென்றாக வேண்டும். அல்லது நாம் கொல்லப்படுவோம். ஏனென்றால் தப்பித்து ஓடுவதற்கு நமக்கு இடமில்லை."
-நைஜீரிய கவிஞர் கென் சரோ விவா.

 நைஜீரியா நாட்டின் நைஜர் பாசனப் பகுதி வளம் மிக்கது. குறிப்பாக எண்ணை வளம். மற்றவர்களை சுரண்டி வாழும் மேற்கத்திய உலகம் அமைதியாக இருந்துவிடுமா? 1958 ஆண்டு முதல் ராயல் டச் ஷெல் என்ற நிறுவனம் தனது எண்ணைக் கிணறுகளை தோண்ட ஆரம்பித்து இயற்கை வளங்களை மாசுபடுத்தி அங்கு வாழ்ந்த ஓகோனி இன மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து கொள்ளையடித்தது. அவர்களின் விடிவெள்ளியாக கவிஞர் கென் சரோ விவா இருந்தார். தனது படைப்புக்களால் மக்களைக் கவர்ந்தார். "ஓகோனி பழங்குடிகள் வாழ்வுரிமை இயக்கத்தை" (The Movement for the Survival of the Ogoni People (MOSOP) ) கென் சரோ விவா 1990 ஆம் ஆண்டு நிறுவினார். கம்பெனிக்கெதிராகவும், அரசியல் சுயநிர்ணய உரிமை கோரியும் ஓகோனி மக்களுடன் 1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கென் அமைதி நடைபயணம் மேற்கொண்டார்.
  
மண் வளத்தையும், நீர் வளத்தையும் மாசுபடுத்தி எண்ணெய் எடுக்கப்படுகிறது.

 விளைவு வஞ்சக நாடகமாடி கென் சிறையிலடைக்கபட்டார். ஓகோனிகள் வாழ்ந்த பகுதிகள் ராணுவத்தின் கீழ் வந்து வன்முறையும், அராஜகமும் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஷெல் நிறுவனம் தனக்கெதிராக செயல்படும் திரு.கென் சரோ விவா அவர்களை கொல்ல அரசுடன் சேர்ந்து திட்டமிட்டு ராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, 1995 நவம்பர் 10 தேதி அன்று திரு.கென் அவர்களும் அவரது நண்பர்கள் எட்டு பேரும் தூக்கிலிடப்பட்டனர். அதற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல்களுக்காக வழக்குப் பதிவு செய்து 13 ஆண்டுகளுக்குப்பின் 27 மார்ச் 2009 அன்று வழக்காடுவதற்கு நாள் நிர்ணயிக்கப்பட்டது ஆனால் அதற்கு முன்பு 15.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை தருவதாக ஒத்துக் கொண்டு ஷெல் நிறுவனம் வழக்காடுவதைத் தவிர்த்தது.

இன்றும் அங்கு எண்ணெய் குழாய்கள் பாதுகாப்புக்கு உள்ளூர் மக்களை மோதவிட்டு மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது. சுற்றுச்சுழலுக்காக தன் நண்பர்களுடன் உயிரையும்  தியாகம் செய்த அந்த மாவீரனின்  பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி பகிர்ந்து கொள்ளுவதில் இவ்வலைப் பூ பெருமிதம் அடைகிறது. அதே சமயம் உங்கள் எரிபொருள் தேவையை குறைத்துக் கொள்ளவும் வேண்டிக் கொள்கிறது, ஏனெனில் எரிபொருள் இதுபோன்ற படிப்பறிவு குறைந்த ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து, அவர்களின் உழைப்பை சுரண்டி கொள்ளை லாபத்திற்கு இங்கே விற்கப்படுகிறது.

2 comments:

T.Sivaraman said...

Sir! The more we plunder our natural resources the luxurious our lives will be, but unfortunately our future generations will struggle. This is realism.

Thanks for making us all know about this great human being.

வின்சென்ட். said...

Sir

Thank you very for much for your comments.