Wednesday, July 30, 2008

அலையாத்தி காடுகளின் அறிஞர் திரு.கள்ளன் பொக்கூடன்

26 டிசம்பர் 2004 காலை நேரத்தை தமிழக மக்கள் யாரும் மறந்திருக்க முடியாது. இயற்கை சுனாமியாக வந்து உயிர், பொருள்,சேதத்தை ஏற்படுத்தியது. இன்றளவும் விவசாய நிலங்களை பயிரிட ஏற்றதாக மாற்ற போராடிக் கொண்டிருக்கிறோம். அதே சமயம் அலையாத்தி காடுகள் இருந்த முத்துப்பேட்டை, பிச்சாவரம் பகுதிகள் பாதிக்கப்படாமல் இருந்ததும், பங்களாதேஷை அதிக உயிர், பொருள் சேதமின்றி நவம்பர் 2007 சூறாவளியிலிருந்து காப்பாற்றியதும் அலையாத்தி காடுகள்தான் என்பது வரலாறு. சுந்தரவனக்காடுகள் என்றழைக்கப்படும் மேற்குவங்கம், பங்களாதேஷ் பகுதிகள் தான் உலகின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் உள்ள பகுதி. அடுத்தது தமிழகத்தின் பிச்சாவரம் பகுதிகள் என்பது குறிப்பிடதக்கது. திரு.கள்ளன் பொக்கூடன் என்ற இயற்பெயர் இவரது அலையாத்தி காடுகள் பற்றிய அறிவினாலும், 20 வருடங்களாக 10,000 நாற்றுக்களுக்கு மேல் நட்டு பராமரித்ததாலும் அவற்றின் அருமைகளைப் பற்றி பிரச்சாரம் செய்வதாலும் இன்று அவர் திரு.கண்டல் பொக்கூடன் என்று எல்லோராலும் அறியப்படுகிறார். (மலையாளத்தில் கண்டல் என்றால் சதுப்புநிலக்காடுகள் என்று அர்த்தம்.) கேரளமாநிலம், கண்ணூர் மாவட்டம், எழம் கிராமத்தை சேர்ந்த அதிகம் படிக்காத விவசாயக் கூலி என்பது குறிப்பிடதக்கது. 1989 முதல் அவர்களது வாழ்வாதாரமான அலையாத்தி காடுகளின் நலனுக்காக பாடுபடுகிறார். இன்று அலையாத்தி காடுகள் பற்றி அறிந்து கொள்ள உலகின் பல பாகங்களிலிருந்து இவரிடம் வருகிறார்கள். வன துறையுடன் இணைந்து தன்னலமில்லா சேவையை அலையாத்தி காடுகள் பாதுகாப்பிற்காக செய்துவருகிறார். கேரளாவில் 40 வருடங்களுக்கு முன்பு 700 ச.கிமீ அலையாத்தி காடுகளிருந்த இடத்தில் இன்று 17 ச.கிமீ காடுகளே உள்ளது. இவரது சேவையால் அது மேலும் வளர்ச்சிபெறும் என்று நம்பலாம்.

கடற்கரையோரங்களில் அலையாத்தி காடுகள் மூலம் நிலஅரிப்பையும், மலைப்பாங்கான சரிவுப்பகுதிகளில் வெட்டிவேர் மூலம் மண்ணரிப்பையும் தடுப்போம். இவை நீண்ட காலத் தீர்வாக இருக்கலாம். ஆனால் இவைகள் நிரந்தர தீர்வு என்பதை மனதில் கொள்வோம்.

அலையாத்திக்காடுகள் சிறு படத்தொகுப்பு காண்க..
http://www.youtube.com/watch?v=t48NrvwKIx8

அவரது விலாசம்
K Pokkudan
Meenakshi Nilayam
Muttukkandi,
Ezhom Village
Pazhangadi Post - 670 303
kerala
படம் உதவி : வலைதளம்.

Thursday, July 17, 2008

புவி வெப்பம் குறித்த விளம்பரப் படம்.


இத்தாலி நாட்டு விளம்பர கம்பெனி எடுத்துள்ள இந்த விளம்பரப் புகைப்படம் இன்றைய மனிதர்களின் புவி வெப்பம் குறித்த மனநிலையை காட்டுகிறது. உங்கள் கருத்து.??

Source:Grey, Milan, Italy

Saturday, July 12, 2008

மருத்துவ கழிவுகளும், வன உயிர்களும்.

சென்ற வாரம் மலையோர கிராமத்திற்கு சென்றபோது சாலையின் அருகே மருத்துவ கழிவுகள் பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டு அவை வன உயிர்களால் பிரிக்கப்பட்டு சிதறிக்கிடந்தன. உயிர்களை காக்கும் ஒரு மருத்துவமனையின் செயல் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. என் ஆதங்கமெல்லாம் மனிதனுக்கு வியாதி பரவக்கூடாது என்று யாருக்கும் தெரியாமல் மருத்துவ கழிவுகளை அகற்றும் மருத்துவமனைக்கு அதனால் வாய்பேசாத வன உயிர்களை பாதிக்கும் என்று தெரியாதா? அவைகள் வைத்தியத்திற்கு எங்கு செல்லும்? அந்த உயிரினங்களின் வாழ்விடத்தைத்தான் ஆக்கிரமித்து அவைகளின் உணவு,உறைவிடம் இவற்றை அபகரித்து விரைவாக அழிக்கிறோமென்றால், வியாதியையும் தந்து அவைகளை துன்புறுத்த வேண்டுமா? சமுதாயத்தில் இன்று நல்ல வசூல் நடக்குமிடம் மருத்துவமனைகள். இன்னும் கொஞ்சம் கூடுதலாகத்தான் வசூலித்து சரியான முறையில் மருத்துவ கழிவுகள் அழிக்கப்பட்டால் சுற்றுச்சூழலும், நிறைய வனஉயிர்களும், பாதுகாக்கபடுமே!! சிந்திப்போம் !! சுற்றுச்சூழலையும், வன உயிர்களையும் காப்போம்!!

இத்தகவல் யாரையும் குற்றம் காண்பதற்காக எழுதப்பட்டதன்று சுற்றுச்சூழலையும், வன உயிர்களையும், ஏன் நம்மையும் காப்பதற்காக எழுதப்பட்டது.