Wednesday, July 8, 2009

அரிதாக கிடைக்கும் சில தருணங்கள்.

இன்று மாலை வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது ஒற்றை காட்டு ஆண் யானை சாலையின் மிக அருகே. நிறுத்தி புகைபடம் எடுக்குமளவிற்கு மனதில் தைரியம் !!. எப்படி வந்தது? இடையில் இருக்கும் அந்த கம்பிக்குத்தான் எத்தனை சக்தி.!!!!!!

அமைதியான பார்வை
போதுமான உணவு மற்றும் நீர் இல்லாமையால் வன விலங்குகள் படும் அவதி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது. காரணம் பருவ மழை சரியான நேரத்தில் பெய்யாதது. வனவிலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் வனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வளமான நாட்டிற்கு அறிகுறி அந்நாட்டின் வன பரப்புத்தான். எனவே வன பரப்பை அதிகமாக்குவோம்.

Tuesday, July 7, 2009

அன்றும் இன்றும் அவினாசி சாலை, கோவை


கோவை அவினாசி சாலை விரிவாக்கத்திற்காக 2007 ஆண்டு வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் வைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர். கூறியது போலவே நாற்றுக்கள் இந்த மழைகாலத்தில் வைக்கப்பட்டு பாதுகாப்பிற்காக மூங்கில் கூடுகளும் வைத்திருந்தது மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது. வாழ்க அந்த அதிகாரிகள். வளர்க அவர்களது சுற்றுச்சுழல் பணி. மேலும் அவர்கள் பணி சிறப்பாக இருக்க இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.

மரங்கள் வெட்டப்பட்ட அன்றைய காட்சிகளைக் காண
http://maravalam.blogspot.com/2007/08/blog-post_10.html

Thursday, July 2, 2009

திரு.சிக்கையா, திருமதி.திம்மக்கா இவர்களிடமிருந்து நாம் கற்க வேண்டிய வாழ்கைக் கல்வி.

வாழ்வதற்குப் பொருள் வேண்டும்.
வாழ்வதிலும் பொருள் வேண்டும்
.

நண்பரின் விசிடிங் கார்டில் பார்த்த வாசகம். “வாழ்வதிலும் பொருள் வேண்டும்” என்ற வாசகத்திற்கு ஏற்ப வாழ்ந்து கொண்டிருப்பவர் திருமதி.திம்மக்கா. சாலையின் இருபுறமும் வரிசையாக நட்ட மரங்களுக்காக கிடைத்த பெயர் சாலுமரதா திம்மக்கா. கர்நாடக மாநிலத்தில் ஃகுப்பீ கிராமத்தில் பிறந்த திம்மக்கா கல்வி பயிலாதவர், விவசாயக்கூலி. உடல் குறையுள்ள திரு.சிக்கய்யாவை மணம் முடித்தாலும் குழந்தை பாக்கியம் இன்மையால் ஊராரின் பேச்சுக்கு ஆளாக நேர்ந்தது. பலர் வற்புறுத்தியும் மறுமணம் செய்ய மறுத்த கணவருடன் வாழ்வதற்கு பொருளுக்காக கல் குவாரியில் கல் உடைத்தும், வாழ்வதிலும் பொருள் இருக்கவேண்டும் என்பதற்காக ஹுலிக்கல் மற்றும் கடூருக்கு இடையே இருக்கும் நான்கு கி.மீ நீளமுள்ள அப்போதைய மண் சாலையில் அவர்கள் வளர்த்த 294 மரங்கள். நாற்பது வருடங்களுக்கு முன் அவைகளை காப்பாற்ற குடம் குடமாக இருவரும் நீரை சுமந்து ஊற்றி வளர்த்தார்கள். வேலியிட்டு காப்பாற்றினார்கள். இன்று அந்த மரங்கள் ஆயிரக்கணக்கான பறவைகள் தங்குவதுவதற்கு இடமும் உணவும் கொடுப்பது மட்டுமன்றி ஆடுமாடுகளுக்கும் வழிப் போக்கர்களுக்கும் நிழலும், மண்அரிப்பைத் தடுத்து நிலத்தடி நீரை உயர்த்தி அந்த பகுதி மக்களுக்கு நல்ல வாழ்வாதாரம் தந்து வாழ்ந்த வாழ்கைக்கு பொருள் தேடியுள்ளனர். இன்று அம்மரங்களின் மதிப்பு பல லட்ச ரூபாய்கள்.அதனால் கிடைத்த பலன்கள் பல கோடி ரூபாய்கள் என்று கூறுவது சர்வதேச நிறுவனமான Food Agriculture Organisation. (FAO).

1991 ஆண்டு கணவர் திரு சிக்கையாவை இழந்த திம்மக்காவின் வாழ்க்கை 1995 ஆண்டு முதல் மாற துவங்கியது. அவர்கள் செய்த தன்னலமற்ற உழைப்பிற்கு மாநில,தேசீய மற்றும் சர்வதேச அளவில் அங்கீகாரங்களும், பரிசுகளும் கிடைத்தன. அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள கணவர் சிக்கையா உயிருடன் இல்லை என்பதுதான் குறை. இன்று அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இவரது பெயரில் சுற்றுச்சூழல் கல்வி போதிக்கப்படுகிறது. ஆனால் இவரது விருப்பம் தனது கிராமத்தில் ஒரு மருத்துவ மனை வேண்டுமென்பதே.

இன்று நாம் காணும் படித்த மக்கள் தங்கள் வீட்டிற்கருகில் கூட மரங்கள் இருக்க விரும்புவது இல்லை என்பதே உண்மை. நமது நாட்டை வளமான நாடாக மாற்ற தேவை கிராமத்திற்கு ஒரு சாலுமரதா திம்மக்கா.

Salumaradha Thimmakka
Kudur
Hulikal Post - 561101
Magadi Taluka,
Karnataka

Source: goodnewsindia.com