Wednesday, April 15, 2009

பயிர்களைத் தாக்கும் பூச்சிகளும் பீடைகளும் - நூல்

அதிக இரசாயன பூச்சி கொல்லிகளை பயன்படுத்தியதால் இயற்கை சமன்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து தீமை செய்யும் பூச்சிகள் வலுப் பெற்றதன் விளைவுகளை விவசாய தற்கொலைகள் விபரமாக அறிவிக்கின்றன. ஆனால் எந்தெந்த பூச்சிகள் எந்தெந்த பயிர்களை தாக்குகின்றன , கட்டுபடுத்தும் முறைகள் பற்றி புத்தகம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென்று தோன்றும். இத்தேடலில் இருந்த போது இத்துறை சாரந்த பேராசிரியர் ஒருவர் எனக்கு பயிர்களைத் தாக்கும் பூச்சிகளும் பீடைகளும் (ஆசிரியர் ஹெச். லிவின் தேவசகாயம்) என்ற நூலை பரிந்துரைத்தார். படித்து பார்த்த பின் ஆசிரியரின் உழைப்பு, அனுபவம், மிக நேர்த்தியாக வரையப்பட்ட பூச்சியினங்களின் படங்கள் நமக்கு பூச்சியினங்கள் பற்றிய தெளிவைத் தருகிறது. இந்நூல் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது
பகுதி -1: பூச்சிகளின் புறத் தன்மைகள், உள் உறப்புகள், உணவு, கழிவு, சுவாச, இனப்பெருக்க மண்டலங்கள் பற்றியும், பொருளாதார சேதம், கட்டுப்பாடு பற்றி விவரித்துள்ளார்.

பகுதி -2 : தானியப் பயிர்கள், எண்ணெய்வித்துப் பயிர்கள், காய்கறிப் பயிர்கள், பணப் பயிர்கள், கடுகு வகைப் பயிர்கள், கிழங்கு மற்றும் பூண்டு வகைப் பயிர்கள், தோட்டப் பயிர்கள், பசுந்தாள் உரப் பயிர்கள், பூசணிவகைச் செடிகள், பழச் செடிகள், அலங்காரச் செடிகள், மரங்கள் மற்றும் சேமிப்பு தானியங்களை தாக்கும் பூச்சினங்கள் என வகைப்படுத்தி அதனையும் கட்டுப்படுத்த உழவியல், மருந்து மற்றம் உயிரியல் முறைகளையும் விவரித்துள்ளார்.

பகுதி - 3 : பயிர் சிலந்திகள், எலிகள், பறவைகள், நூற்புழுக்கள், நண்டுகள், நத்தைகள் மற்றும் விலங்கினங்கள் பற்றி விவரித்துள்ளார்.

பகுதி - 4 : பூச்சிகளைச் சேகரித்து, நிலைப்படுத்திப் பாதுகாத்தல் பற்றி விவரித்துள்ளார்.


ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திலும் இருக்கவேண்டிய பயனுள்ள நூல்.
விலை : ரூ.235/=

கிடைக்குமிடம் :
M/s. ZION PRINTERS & PUBLISHERS,
91, ARUNACHALAM STREET,
CHINTADRIPET,
CHENNAI -600 002.

PHONE : 044- 28453655, 28453764.
email : zpp@vsnl.com

Monday, April 13, 2009

மாவுப்பூச்சியை உண்ணும் வண்டு -- வீடியோ.

இயற்கை எதிரிகள் இந்த மாவுப்பூச்சிக்கு உண்டு. நாம்தான் இந்த இயற்கை எதிரிகளை இனம் கண்டு அதனைப் பெருகச் செய்து இயற்கை சமநிலையை அடைய முயற்சிக்க வேண்டும். முடிந்த அளவு இரசாயன பூச்சி கொல்லிகளை தவிர்க்க வேண்டும். கீழேயுள்ள ஒரு நிமிட வீடியோ காட்சி.

மாவுப்பூச்சியினால் பயிர்களின் பாதிப்பு - புகைபடம்

ஏரினும் நன்றால் எரு இடுதல், கட்டபின்
நீரினும் நன்றுஅதன் காப்பு. 1038

ஏரினால் நிலத்தை உழுவதைக் காட்டிலும் எருவிடுதல் நல்லது. களைஎடுத்த பின் நீர் பாய்ச்சுவதை காட்டிலும் நல்லது நட்ட பயிர்களை பாதுகாப்பதாகும்
.
சென்ற வாரம் நண்பரின் தோட்டத்திற்கு சென்றிருந்தேன். மாவுப்பூச்சியின் பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. தெரிந்தவர்களிடம் கேட்டபோது பொதுவாக வெயில் காலத்தில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றார்கள். ஆனாலும் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதாக தோன்றியது. பப்பாளி, மா, கொய்யா, வாழை, மல்பெரி என எல்லா பயிர்களிலும் இருந்தது. செம்பருத்தியில் காணப்பட்ட மாவுப்பூச்சி இன்று கள்ளியில் கூட இருக்கின்றது என்றால் அதன் சக்தியை கணக்கிட்டு பாருங்கள். இயற்கையின் சமன் செய்யும் திறனை அழித்தால் முடிவு எல்லா உயிர்களுக்கும் பாதிப்புத்தான். அதில் மனிதன் தன் பேராசை காரணமாக அற்ப பூச்சிகள்தானே என்று இரசாயன கொல்லிகளைக் கொண்டு அழிக்க ஆரம்பித்ததின் விளைவுகளை நாம் லட்சதிற்கும் மேல் விவசாய தற்கொலைகளாக படிக்கிறோம். இரசாயன கொல்லிகளைக் குறைத்து இயற்கை பூச்சிவிரட்டிகள், உயிரியல் முறைகளை உபயோகித்து கட்டுப்படுத்துவோம். இவ்வகை பூச்சிகளுக்கு இயற்கை எதிரிகளை கண்டு கட்டுப்படுத்துவோம். உழுது, எரு இட்டு, களையெடுத்து நீர் பாய்ச்சி அறுவடையில் கூட பாதிப்பு. இதற்கு யாரேனும் உதவ முடியுமென்றால் பின்னூட்டமிடுங்கள்.