Friday, March 22, 2013

நிகமானந்தா – கங்கையின் புனிதம் காக்க உயிர் துறந்த மகான்




மாத்ரி சதன் எனும் ஆசிரமத்தின் 34 வயதான சாமியாரான நிகமானந்தா, ரிஷிகேசம் முதல் பிரயாகை வரையிலான பகுதியில் 146 தொழிற்சாலைகளின் ஆலைக் கழிவுகளும், வழியெங்கும் நூறுக்கும் மேற்பட்ட சிறு, பெரு நகரங்களின் சாக்கடைகளும் கங்கையில் கலப்பதைத் தடுத்து நிறுத்தி, கங்கையைக் காக்கக் கோரி 1998இல் 73 நாட்களும், 2010இல் 68 நாட்களும் உண்ணாவிரதம் இருந்தார். கங்கைக் கரையோரப் பகுதிகளில் இயங்கிவரும் சட்டவிரோதக் கல்குவாரிகளை அகற்ற வேண்டும், கும்ப் எனுமிடத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியுடன் நடைபெற்றுவரும் சுரங்கப் பணிகள் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன், கங்கையைக் காக்க அவர் கடந்த 2011 பிப்ரவரி 19ஆம் தேதியன்று, உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். 2011 ஜூன் 13ஆம் தேதியன்று சர்ச்சைக்குரிய முறையில் மரணமடைந்தார்.
இந்தியாவின் புண்ணிய நதி காப்பாற்றப்பட வேண்டும், இந்திய விவசாயம் தழைக்க வேண்டும், நாளைய தலை- முறையினருக்குத் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஒரு புண்ணிய நதியின் புனிதம் காக்க உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த மகான். இவரது தியாகம் சரியான முறையில் மக்களிடம் சென்றடையாதது மிகப்பெரிய துரதிஷ்டம். இந்த இளவயதில்  இலட்சிய நோக்கில் உயிர் துறந்த மகான் நிகமானந்தா அவர்களின் தியாகம் காலத்தால் மறக்கபடலாம் அல்லது மறைக்கப்படலாம். காலம் பதில் தரும்.  இந்த உலக நீர் நாளில் மகான் நிகமானந்தாவிற்கு  இந்த வலைப்பூவின் நினைவஞ்சலி!!!!
 

Wednesday, March 20, 2013

தண்ணீர் ---- புதிர்கள் நிறைந்த தெய்வாம்சம் மிக்க பொருள்.

டாக்டர். மசாரு இமடோ தனது புத்தகத்துடன்

நீரின் சிறப்பு அம்சம் அதன் 3 நிலைகள் திட, திரவ  வாயு நிலைகள். அதன் 3 நிலைகளிலும் அவை ஜீவராசிகளுக்கு வாழ்வளிப்பதுதான் பெரும் சிறப்பு. தொழிற்புரட்சிக்கும், போக்குவரத்திற்கும் நீராவி என்ஜின்  வித்திட்டது. நீராவி இல்லாத மனித வாழ்வை எண்ணிப் பாருங்கள்??

போக்குவரத்தை மாற்றியமைத்த நீராவி எஞ்சின்


இன்றைய நீர்,அனல்,அணு மின்சாரம்?? நீர் இல்லையேல் வாழ்கை ஸ்தம்பித்துவிடும்.


பிராத்தனையின் வலிமை

நீருக்கு ஜீவராசிகளைப் போன்று நினைவாற்றல், மற்றும் உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் திறன், பிராத்தனைகளுக்கு உட்பட்டு தன்னைத்தானே தூய்மையாக்கும் பண்பு  உண்டு என்பதை டாக்டர். மசாரு இமடோ தனது “The Hidden messages in water” (தண்ணீரில் மறைந்துள்ள செய்திகள்) என்ற நூலில் விளக்கமாக தந்துள்ளார். பிரமிப்பை தரும் படங்களுடன் அவை விளக்கப்பட்டுள்ளது. நியுயார்க் டைம்ஸின் பிரபல புத்தக வரிசையில் இந்த நூலும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நினைவாற்றல், மற்றும் உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் திறன்


ஒவ்வொரு மதமும் மனிதர்கள் புனிதம் பெற தண்ணீருக்கு முக்கியத்துவம் தருகின்றன. மனிதர்கள் மதத்திற்கும், பணத்திற்கும் முக்கியத்துவம் தந்து தண்ணீரை மாசுபடுத்தி புனிதமற்றதாக்குகிறோம். விளைவுகளை அனுபவித்தும் நாம் திருந்தாமல் இருப்பது அடுத்த தலைமுறையினரை பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. மலைகளின் வனவளம் சமவெளியின் நிலவளம் எனவே வனவளம் காப்போம். மரம் நடுவோம். மழை பெறுவோம். 

Monday, March 18, 2013

தானியக் கீரை – எதிர்கால சத்துணவுப் பயிர்






தாவரவியல் பெயர்  :   Amaranthus hypochondriacus Linn
"ஸ்வர்ணா" என்ற இரகம்
தானியக் கீரையானது மிக வேகமாக வளரக்கூடிய தானிய வகையை  சார்ந்தது. இலைகள் கறியாகவும், விதைகள் தானியமாகவும் நேரடியாகப் பயன்படுத்தலாம். தனியாக பயிர் செய்தால் 4.5 டன்/ஹெக்டர் அளவிற்கு கீரை மகசூலும், 1-2;. டன்/ஹெக்டர் அளவிற்கு தானிய மகசூலும் பெறலாம். ஆன்டீஸ் மலைதொடரில் வாழ்ந்த பண்டைய மக்கள் இதனை புனித தானியம் எனவும், இந்தியாவில் இப்பயிரானது ராம்தானா அல்லது கடவுளின் தானியம் என்றும் அழைக்கின்றனர். வெப்பத்தை தாங்கி, பல்வேறு மண் வகைகளிலும் நன்கு வளரக்கூடியது.விதைப்பு, அறுவடை மற்றும் உர நிர்வாகம் கிட்டதட்ட சோளத்துடன் ஒத்துள்ளது. இரண்டு அடி முதல் எட்டு அடி உயரம் வரை வளரக்கூடிய இக்கீரை, மிக குறுகிய வளர்ச்சி பருவம் (80நாட்கள்) கொண்டது.
விதைகள்
தட்ப வெப்பநிலை
16°c - 35°c
மழையளவு
200 மி.மீ - 3,000 மி.மீ (ஆண்டு மழையளவு)
மண்
நல்ல வடிகால் வசதியுள்ள மண்.
நிலம்தயார் செய்தல்
3 உழவு போதுமானது.

பயன்கள் :
ஊட்டச்சத்து நிறைந்த இத்தானியக்கீரை ரொட்டி, பிஸ்கட், ஐஸ்கீரீம் தயாரிப்பிலும் இதர பேக்கிரி பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது.
வடஇந்தியாவில் இத்தானிய கீரையிலிருந்து செய்யப்பட்ட "லட்டு" மிகப் பிரபலம்.
63% கார்போஹைட்ரேட் மற்றும் 12.6 -17.6% புரத சத்தும் நிறைந்த தானியக் கீரை மற்ற எல்லா வகை தானியங்களையும் விட சிறந்தது.

நார்ச்சத்து, கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளதால் மற்ற கீரைகளிலிருந்து தனிச் சிறப்புடன் விளங்குகிறது.

குறைந்து வரும் மழையளவு, வெப்பத்தைத் தாங்கி வளரும் திறன், எல்லா மண் வகைகளிலும் வளரும் திறன் என பயிர் செய்வதற்கு ஏற்ற சூழலை தருவதோடு சத்து மிக்க கீரை / தானியமாகவும் இருப்பது, சந்தை வாய்ப்பும் அதிகம் இருப்பதால் தமிழகத்தில் இதனை பயிர் செய்ய முயற்சி மேற்கொள்ளாலாம்.

மேலும் விபரங்கள் பெற :
முதல்வர்
வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மேட்டுப்பாளையம்  - 641 301
தொலைபேசி : 04254-22010 Extn 202 (or) 222398
அலைபேசி  : 94433 77970
Photographs & Text Source: Dr.K.Kumaran, Forest College, Mtp
 

Friday, March 15, 2013

கரும்பு ..........ஒரு கையேடு



 இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஓர் அங்கமான கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் சமீபத்தில் "கரும்பு ஒரு கையேடு' என்ற புத்தகத்தினை வெளியிட்டுள்ளது.
   
 இருபத்தியோரு அத்தியாயங்கள் அடங்கிய இக்கையேட்டில், இரகங்கள், சொட்டு நீர்ப் பாசனம், வெல்லம் தயாரித்தல், இயந்திரங்கள், களை, நோய் மற்றும் பூச்சி மேலாண்மை போன்ற கரும்பு சாகுபடித் தொழில்நுட்பங்கள் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

        இது தவிர, ஆறு அத்தியாயங்கள் விவசாயிகளின் உடனடிப் பார்வைக்கான  பயனுள்ள பல தகவல்களை (ready-reckoner type information) அளிக்கின்றன. தமிழக சர்க்கரை ஆலைகளின் தொடர்புத் தகவல்கள், விவசாயிகளுக்கான கடனுதவி, காப்பீடு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள், கரும்பு விவசாயிகள் மற்றும் விரிவாக்கப் பணியாளர்களுக்கான பிரத்தியேக இணையதளமான கேன் இன்போ குறித்த தகவல்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.
     
 இது தவிர, கேன் இன்போ இணையதளத்தின் ' வல்லுனரைக் கேளுங்கள் " பகுதியின் சில கேள்வி பதில்கள் 'பெட்டிச் செய்திகளாக ' இடம் பெற்று, இக்கையேட்டை ஒரு முழுமையான தகவல் பெட்டகமாகுகின்றன.

      விவசாயிகள் மட்டுமின்றி விரிவாக்கப் பணியாளர்களுக்கும் , மாணவர்களுக்கும் இக்கையேடு பெரும் பலனளிக்கும்.
     கூடுதல் விவரங்களை , www.caneinfo.nic.in இணைய தள முகவரியில் பெறலாம்.
ரூ. 200 மட்டுமே  (தபால் செலவு உட்பட )
பிரதிகளுக்கு:-
 Director, Sugarcane Breeding Institute என்ற பெயருக்கு கோவையில் ஏதேனுமொரு வங்கியில் மாற்றத்தக்க வகையில் வரைவோலை (DD) எடுத்து
இயக்குனர்,
கரும்பு இனபெருக்கு நிலையம் ,
கோவை 641 007
என்ற முகவரிக்கு  அனுப்புங்கள். 

Tuesday, March 12, 2013

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மருத்துவ தாவர கண்காட்சி


நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மைக்ரோ பயோலஜி துறை  மருத்துவ தாவரங்கள் பற்றிய கண்காட்சியையும் கருத்தரங்கையும் சிறப்பாக சென்ற 7-3-2013 அன்று நடத்தினார்கள்.

 முனைவர். லட்சுமணபெருமாள்சாமி அவர்கள் தலைமையுரையிலும், கல்லூரி முதல்வரும் மருத்துவ தாவரங்களின் முக்கியத்துவத்தை சிறப்பாக எடுத்துரைத்தனர். அரியவகை மருத்துவ தாவரங்கள் பார்வைக்கும், புகைபடங்களாகவும் விளக்கங்களுடன் அதிக அளவில் இருந்தது கண்காட்சியின் முக்கிய சிறப்பு  அம்சம். திரு.மதுராமகிருஷ்ணன் அவர்கள் இயற்கை விவசாயம் பற்றியும், அடியேன் மருத்தவ தாவரங்கள் பற்றியும், திரு. ஆன்டோ அவர்கள் முள்ளுசீதா பற்றியும் விளக்கம் தந்தோம். கண்காட்சியை நன்கு கண்டுகளித்த மாணவமணிகளும் அமைதி காத்து கடைசிவரை கருத்தரங்கில் பங்கேற்றது மகிழ்ச்சியாக இருந்தது.
.




 இன்றைய காலகட்டதில் அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரிய எளிய மருத்துவத்தை எடுத்து செல்வதற்கு இதுபோன்ற கண்காட்சியும் கருத்தரங்கும் ஒவ்வொரு கல்வி நிறுவனங்களிலும் நடைபெறுமானால் ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை நாம் காணலாம்.

கல்விப் பணிகளுக்கிடையே சிறப்பானதொரு நிகழ்வை நடத்திய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துகள்.
Photographs Source : Viscom Dept,NASC  

Saturday, March 2, 2013

மனதை கவர்ந்த நீர் சிக்கனப் படம்

பொதுக் குழாய்கள் அடைக்கப் பெறாமல் நீர் வீணாவதை அனுதினமும் பார்த்து வருகிறோம். அதற்கு விழிப்புணர்வு தரும் 47 வினாடிகள் கொண்ட  இந்த படம் நமக்கு ஒரு பாடம்.




Friday, March 1, 2013

தண்ணீர்! தண்ணீர்!! தண்ணீர்!!!



குறைந்து வரும் மழையளவு, அழிக்கப்படும் காடுகள், குறைந்த முதலீட்டில் தண்ணீரை கொள்ளையடிக்கும் பன்னாட்டு கம்பெனிகள், இயற்கையை அழித்து பணத்தை வைத்து எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என நம்பும் இன்றைய நவ நாகரீக மக்களுக்கிடையே, ஐக்கிய நாடுகள் சபை 1992 ஆண்டு முடிவெடுத்து 1993 முதல் ஒவ்வொரு ஆண்டும்  மார்சு மாதம் 22 ஆம் தேதியை உலக நீர் நாளாக அறிவித்து பல்வேறு கருபொருட்ளில் உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது. 1994 தொடங்கி 2013 வரை நடந்த விழிப்புணர்வு கருபொருட்களை தொகுத்து உங்கள் பார்வைக்கு வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். முடிந்தால் உங்கள் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.