Saturday, August 29, 2009

“ கல்வி Times ” இரு மொழி மாத இதழ்

இன்று கல்வி வியாபாரமாய் ஆகிவிட்டதால் கிராமத்தில் இருக்கும் மாணவன் திறமையிருந்தும் அதிகம் கஷ்டப்பட வேண்டியுள்ளது. எதனைப் படிப்பது ?, எங்கே படிப்பது ?, எப்படி படிப்பது ? படித்தபின் தனது நிலைமை? என பல கேள்விக்குறிகளுக்கு விடை இந்த “ கல்வி Times ” ஆகும். வாய்ப்புகளை அடையாளம் காண்பிப்பது, உதவும், உதவி தேவைப்படும் உள்ளங்களை இணைப்பது. மாணவர்கள், பெற்றோர், ஆசிரியருக்குத் தேவையான கல்வி தகவல்களை தருவது. பள்ளி, கல்லூரிச் செய்திகள், சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகளையும் தாங்கி வருகிறது. இது போன்ற இதழ்களை நாம் வாங்கிப் படிப்பதோடு மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்வதால் சிறப்பான சமுதாயத்தை நாம் உருவாக்க முடியும் என்பதில் ஐயமில்லை.

மேலும் விபரங்களுக்கு :
பரமேஸ்வரன் (ஆசிரியர்)
58, மாரியம்மன் கோயில் வீதி
உடையாம் பாளையம்
கோயமுத்தூர் - 641 028.
அலைபேசி : 93676 01079, 98434 22250

Tuesday, August 18, 2009

தண்ணீருக்கு ஆயுதப் பாதுகாப்பு !!!!!!!- செய்தி.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

தண்ணீருக்கு ஆயுதப் பாதுகாப்பு
அவுரங்காபாத், ஆக.17-

பீகாரில் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட 26 மாவட்டங்களில் நிலைமை தீவிரமடைந்துள்ளது. உயிருடன் இருக்கின்ற நீர்நிலைகளை ஆயுதமேந்திய மக்கள் காவல் காத்து வருகின்றனர். மழை பொய்த்ததால் துப்பாக்கி பொழிகின்றன.

விவசாயிகளாகிய நாங்கள் கிடைக்கும் கொஞ்ச நீரையும் பாதுகாக்க போராட வேண்டியுள்ளது. விவசாயக் கருவிகளைக் கட்டும் போதே துப்பாக்கியையும் சேர்த்துக் கட்டுகிறோம். வயலில் விவசாயக் கருவிகளைப் பயன்படுத்துகிறோம். தேவைப்பட்டால் துப்பாக்கியையும் பயன் படுத்துவோம் என்று பீகார் அவுரங்காபாத் மாவட்ட விவசாயி பால்பூஷண் சர்மா கூறுகிறார்.

மழை இல்லை, ஓடைகளில் தண்ணீர் வற்றி வருகிறது. இருக்கும் நீரைப் பாதுகாக்க விவசாயிகள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள். அண்டை கிராமத்தார், கிடைக்கும் சிறிதளவு நீரை தங்கள் பக்கம் திருப்ப முயல்வதைத் தடுக்கவே துப்பாக்கியுடன் வயலில் நிற்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

பீகாரில் உள்ள 79.46 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்களில் 45.67 லட்சம் ஹெக்டேரில் விவசாயம் நடைபெறுகிறது. பீகார் மாநிலத்தில் 20 சதவீத கால்வாய்கள் பயனற்று விட்டன. 39 சதவீத மழை பொய்த்ததால் பயனளிக்கும் கால்வாய்களில் 40 சதவீதக் கால்வாய்களில் மட்டும் தண்ணீர் அதுவும் மிகக் குறைந்த அளவே உள்ளது.

வறுமையில் வாடும் பல லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் மழை இன்மையால் பறிக்கப்பட்டதால் அவர்களின் வாழ்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு காலம் விவசாயம் இன்றிப் பரிதவிக்கும் அவலநிலை இது வரை ஏற்பட்டதில்லை.

பீகாரின் வளமிக்க 90 சதவீத விளை நிலங்களில் உணவு தானியங்கள் பயிரி டப்படுகின்றன. மழை பொய்த்ததால் அல்லது போதுமான அளவு பெய்யாததால் விவசாயிகளின் துயரம் அதிகரித்துள்ளது. தண்ணீரைக் காக்க ஏந்தும் விவசாயிகள், துப்பாக்கி தங்கள் வறுமையைத் தவிர்க்க வன்முறையில் இறங்கமாட்டார்கள் என்பது நிச்சயமில்லை.
Source : தீக்கதிர் கோவை 18-08-09

Saturday, August 15, 2009

வட இந்தியாவின் நிலத்தடி நீர் பற்றி நாசா நீரியல் நிபுணரின் கட்டுரை

வட இந்தியாவின் நிலத்தடி பற்றி நாசா (NASA) செயற்கை கோள் படங்களை வைத்து அங்கு பணி புரியும் நீரியல் நிபுணர் திரு.மேத்யூ ரோடெல் மேலும் இருவருடன் சேர்ந்து நேசுர் (NATURE) என்ற இதழில் அளித்துள்ள கட்டுரை நமக்கு ஓர் எச்சரிக்கை மணி. அதிக கவலை தரும் அந்த கட்டுரையிலிருந்து சில செய்தித் துளிகள்.


பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, தில்லி போன்ற பகுதிகளிலுள்ள நிலத்தடி நீர் வருடத்திற்கு 1 அடி வீதம் குறைகிறது. இதனால் வருங் காலங்களில் சமூக / பொருளாதார மாற்றம் அப்பகுதியிலுள்ள சுமார் 114 மில்லியன் குடும்பங்களை பாதிக்கும்.


பசுமை புரட்சியின் போது அதிகமாக நிலத்தடி நீரை உபயோகித்து அதிக பலன்கள் பெற்ற பகுதிகள் இவை என்பது குறிப்பிடதக்கது. மாற்று ஏற்பாடுகள் செய்து நிலத்தடி நீரை உயர்த்தாவிடில் வேளாண்மையில் உற்பத்தி குறைவு, குடிநீர் தட்டுப்பாடு காரணமாய் கருத்து வேறுபாடுகளும், சச்சரவுகளும் ஏற்படும்.


சுமார் 109 கன.கீமீ அளவிற்கு நிலத்தடி நீர் சுமார் 6 வருடங்களில் (2002 - 2008 )உறிஞ்சப்பட்டு விட்டது. (1கன.மீ = 1000 லிட்டர் )இது நமது நாட்டின் பெரிய அணைகளில் ஒன்றான “மேல் வையின்கங்கா” (Upper Wainganga)அணையைக் காட்டிலும் இருமடங்கும், அமெரிக்காவில் மனிதனால் உருவாக்கப்பட்ட “லேக் மீடு” (Lake Mead) அணையின் கொள்ளளவைக் காட்டிலும் 3 மடங்கும் அதிகம்.

இது போன்ற காட்சிகள் தமிழகத்தில் ஏற்படாமல் காப்பது நமது கடமை

தமிழகத்திலும் கடந்த சில வருடங்களாக குறைவான மழைப்பொழிவால் மிக அதிகமாக நிலத்தடி நீரை நம்பியிருக்கிறோம். அண்டை மாநிலங்களுடன் நீருக்காக போராட வேண்டிய நிலைமை. “நிஷா” புயல் போன்றவை வரும்போது அழிவினை சந்திக்கிறோம். இயற்கையை வெல்வது கடினம்தான் இருப்பினும் சில எளிய சாத்தியபடக் கூடிய நடவடிக்கைகளால் நிலத்தடி நீரை உயர்த்தி மகிழ்ச்சியான வாழ்க்கையை வரும் தலைமுறையினருக்கு தரமுடியும்




நீரின் உபயோகத்தை குறைப்பது, மறுஉபயோகம் மற்றும் மறுசுழற்சி செய்தல்.

மழை தரும் மரங்களை அதிக அளவில் வளர்ப்பது குறிப்பாக தரிசு நிலங்களில் வறட்சியை தாங்கி வளரும் வேம்பு, புங்கன், புளி போன்றவைகளை வளர்த்தல்.

வெட்டிவேரைப் பயன்படுத்தி நீரின் வேகத்தை தடுத்து நிலத்தடி நீரை உயர்த்துவதுடன் மண் அரிப்பைத் தடுத்தல்.

பண்ணைக் குட்டைகள் ஒவ்வொரு விவசாய நிலத்திலும் அமைத்து மழை நீரை சேமிப்பது.

ஓடைகளில் தடுப்பணைகள் கட்டுவது.

அதிக நீரை எடுத்துக் கொள்ளும் பயிர்களை தற்காலிகமாக தவிர்த்து மாற்றுப்பயிராக வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிர்களை பயிர் செய்தல்.

பாசன முறைகளில் மாற்றம் செய்து சொட்டுநீர், தெளிப்புநீர் போன்ற முறைகளுக்கு மாறுதல்.

புதிய யுக்திகளை கடைபிடித்தல். (ஊ.த) நெல் பயிரிடுவதில் ஒற்றை நாற்று முறை. மற்ற பயிர்களாக இருப்பின் துல்லியவேளாண்மை திட்டம்.

நீராதாரங்கள் மாசுபடுவதை தடுத்து விவசாயத்திற்கு ஏற்ற வகையில் அவைகளை பாதுகாப்பது.

வெர்சுவல் வாட்டர் (கண்ணிற்கு தெரியாத நீர்) பற்றி அறிந்து கொள்ளுதல்.அதனை பற்றி அறிய http://maravalam.blogspot.com/2008/09/blog-post.html பார்க்கவும்.


Source: The Hindu/Cbe 14-08-09 Page 14