Tuesday, April 22, 2008

இன்றைய மரம் நடும் விழாக்களின் தந்தை.

திரு. ஜுலியஸ் ஸ்டெர்லிங் மோர்டன் 1854 ஆண்டு புது மனைவியுடன் அமெரிக்காவின் மிசிகன் பகுதியிலிருந்து நெப்ரஸ்கா பகுதிக்கு குடியேறியவர். நெப்ரஸ்கா பகுதியின் முதல் நாளிதழின் ஆசிரியர், அரசியல்வாதி ஆனால் மரங்களின் அருமையை உணர்ந்தவர். தனது பத்திரிக்கையிலும் ,சிறந்த பேச்சினாலும் அப்பகுதி மக்களிடையே மரங்களின் அவசியத்தை உணர வைத்தார். பின் நாட்களில் திரு.க்ரோவர் கிளிவ்லாண்ட் அவர்கள் ஜனாதிபதியாய் இருந்த போது விவசாயத்துறை செயலராக பணியாற்றியவர். ஆனால் இவரை மிகவும் புகழ் பெற வைத்தது ஆர்பெர் நாள் கொண்டாட்டம்தான்(Arbor Day,) Arbor = a shady place in a garden, with a canopy of Trees or climbing plants. விடுமுறையுடன் கூடிய மரம் நடும் விழா. அவரது பிறந்த தினமான இன்று (ஏப்ரல் 22) அவரை நினைவு கூர்வதில் பெருமிதம் கொள்ளுகிறேன். இவ்விழா கொண்டாடப்படாமல் போயிருந்தால் இன்றய நிலமையை எண்ணிப் பாருங்கள்?????


முதலாம் ஆர்பெர் நாள் கொண்டாட்டம் ஏப்ரல் 10, 1874 ஆண்டு நெப்ரஸ்கா பகுதியில் கொண்டாடப்பட்டது. அன்று சுமார் 10 லட்சம் மரங்கள்!!!!!!! நடப்பட்டனவாம். மரம் நடுவதில் சாதனை புரிந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட மரம் நடும் விழா பின்பு மற்ற மாநிலங்கள், நாடுகள் என பரவி இன்று உலக நாடுகளிடையே அவசியமிக்க விழாவாக மாறிவிட்டது. அவரை பெருமைபடுத்தும் விதமாய் ஏப்ரல் 22 கொண்டாடப்பட்டது. பின்பு அதனை மாற்றி ஏப்ரல் மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று அமெரிக்கா முழுவதும் கொண்டாடினாலும் அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கென்ற் ஒரு நாளை தெரிவு செய்து கொண்டாடுகிறார்கள். நாம் கூட மரம் நடும் விழாவை ஒரே நாளில் கொண்டாடாமல் தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழைப்பொழிவை கணக்கில் கொண்டு அந்தந்த பகுதிகளுக்கேற்ப நாளை தெரிவு செய்து நட்ட மரக்கன்றுகள் அனைத்தும் மரமாக மாற இயற்கையை வேண்டிக் கொண்டாடுவோம்.
அமெரிக்காவில் வசிக்கும் பதிவர்கள் இந்த வெள்ளிக்கிழமையன்று கொண்டாடும் ஆர்பெர் நாளைப் பற்றி பதிவிட்டால் தெரிந்து கொள்வது எளிது.

Wednesday, April 16, 2008

உலக வெட்டிவேர் வலைஅமைப்பில் The Vetiver network (international)முதல் பக்கத்தில் எனது "ஐடியா" .

இரண்டாண்டுகளுக்கு முன் வெட்டி வேரை பாலிதீன் பைகளில் உண்டாக்கினேன். வாங்குவோர் ஒருவரும் இல்லை. திரும்ப எனது இடத்திலயே நடலாமென முடிவு செய்தால் மேடான பகுதிகளுக்கு எடுத்துச் செல்வது கடினமாக இருந்தது கூடவே குழி எடுக்க பின் நடவு செய்ய என மனித சக்தியும், பணமும் விரயமாவதாய் தோன்றியது. எனவே சென்ற வருடம் இந்த "நெட்பாட்" முறையை கடைபிடித்ததில் மேற்கண்ட பிரச்சனைகள் குறைந்தன. பின் கொச்சி பயிற்சிப் பட்டறையில் குவைத் நாட்டில் வெட்டிவேர் சிம்பு (Slips) கொண்டு வளர்ப்பதை பார்த்தேன். எளிய இம்முறையை அவர்களுக்குத் (TVNI) தெரிவித்தேன் அவர்களும் பிரசுரித்துவிட்டார்கள். http://www.vetiver.org
இம்முறையில் வேர்கள் நன்கு வள்ர்ந்த பின் நடப்படுவதால் நட்ட நாள் முதற்கொண்டே வளர ஆரம்பித்துவிடுகிறது. எளிதாக அட்டைப் பெட்டிகளில் அடைத்து வேறு ஊர்களுக்கு அனுப்பலாம்.(பாலிதீன் பைகளில் இது கடினம்)
உலக வெட்டிவேர் வலைஅமைப்பில் வந்தது மகிழ்ச்சிதான் என்றாலும் வெட்டிவேரின் தாயகம் (நாம்தான்) இதன் சிறப்பை உணர்ந்து இதனை விவசாயத்துக்கு மட்டுமின்றி சாலை, இரயில் பாதை பராமரிப்புக்கும், கழிவு நீர் சுத்திகரிப்பிற்க்கும் பயன்படுத்தினால் மேலும் மகிழ்ச்சியடைவேன்.

Sunday, April 13, 2008

சுற்றுப் புற சுழல் பாதுகாப்பதில் கோவை மாநகராட்சியின் பயனுள்ள முயற்சி.

ஒரு முறை மட்டுமே உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு (பைகள்,குவளைகள்,விரிப்புக்கள் போன்றவை) கோவை மாநகராட்சி தடை விதித்துள்ளது. தடைக்கான காரணத்தையும் மீறினால் அபராதமும் விதிக்கப்படும் என பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர்.

இத்தடையை மீறுபவர்களுக்கான அபராதம்

இப்பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிப்பவர்களுக்குரூ.5000
மொத்த இருப்பு வைத்துருப்பவர்களுக்கு--------------- ரூ.2500
சில்லறை விற்பனை செய்பவர்களுக்கு-----------------ரூ.750
உபயோகிப்பவர்களுக்கு-------------------------------------ரூ 100

தொழில் செய்வோருக்கு இழப்புத்தான் ஆனாலும் சுற்றுப் புற சுழலுக்கு பாதிப்பு வரும் போது இம்முயற்சிகள் அவசியமாகின்றது. முயற்சியை வரவேற்று ஒரு முறை மட்டுமே உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தைத் தவிர்ப்போம்.

Monday, April 7, 2008

போட்டிக்கு எனது புகைப்படம்


இம்மரத்திற்கு நீர் ஊற்றி வளர்த்தது யார் ?

Thursday, April 3, 2008

வசந்தகாலம்

வசந்தகாலம் பொதுவாக எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பருவம். தளிர்க்கும்,பூக்கும் தாவரங்கள்,பாடித் திரியும் பறவைகள் என கூர்ந்து நோக்கினால் மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருக்கும்.அவ்வாறு என்னை வியக்க வைத்த சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு


சிவந்த தளிர்கள் 17 நாட்களில் நிற மாற்றமடைதல்



காய்ந்த இலைகளோ,தளிர்களோ அல்லது பூக்களோ அல்ல அவ்வளவும் பழங்கள்.